Home இலங்கை பிரபாகரனை காப்பாற்றும் திட்டத்தை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர் – சிவ்சங்கர் மேனன்

பிரபாகரனை காப்பாற்றும் திட்டத்தை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர் – சிவ்சங்கர் மேனன்

by admin

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றும் திட்டத்தை தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்த்தனர் என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவ் சங்கர் மேனனின் Choices: Inside the Making of India’s  Foreign Policy என்ற நூலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்காவும் நோர்வேயும் முயற்சித்த போது அதனை இந்தியா எதிர்த்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தி;ன் எதிர்ப்பினை தமிழக அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் வரவேற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வாழும் தமிழ்த் தலைவர்களை பௌதீக ரீதியில் இல்லாமல் செய்வதன் மூலமே பிரபாகரன் தமிழீழத்தை உருவாக்குவார் என்பதனை தமிழக அரசியல் தலைமைகள் புரிந்து வைத்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகளை புலிகள் கொலை செய்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழக மாநில அரசியல் தலைமைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளியில் தென்பட்டாலும், இரண்டு தரப்புக்களும் ஒரே விதமான கொள்கைகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே விதமான கொள்கைகளையே பின்பற்றின என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் காணப்பட்ட தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலித் தலைமைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை எனவும் மேற்குலக நாடுகள் அதற்கு முயற்சித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் நடைமுறைச் சாத்தியமில்லா கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றிய காரணத்தில் புலிகள் இயக்கம் அழிந்ததுடன் அவரும் உயிரிழக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இன்னும் தாமதமாகியிருந்தால் உயிர்ச் சேதங்கள் மேலும் உயர்வடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், இவ்வாறான யுத்தங்களின் போது உயிர்ச் சேதங்களை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழில் GTN

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More