Home இலங்கை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.

by admin

(மட்டக்களப்புக் கூத்துக்களின் பரிணாமம்} ஓர் விவரண அரங்க ஆற்றுகை:-

இலங்கையின் நடனங்களுக்கு உலகப் பரப்பில் ஒரு அங்கீகாரம் தேடித்தந்தவர் சித்திரசேனா. இவர் ஆரம்பித்த நடனப் பள்ளி சித்திரசேன கலாயத்தனய என்ற பெயரில் கொழும்பில் இயங்கி வருகிறது. இதனை இவரின் துணைவியாரன வஜிராவும் ப வாரிசுகளான பிரபல இலங்கை நர்த்தகிகள் ,உபேகா,அஞ்சலி,ஹேஸ்மா,ஊமிதந்தி,தாஜி ஆகியோரும்  அர்ப்பணிப்புடன் இயக்கி வருகின்றனர்.
சித்திரசேனா. வங்காளத்தில் மஹாகவி தாகூரின் சாந்திநிகேதனத்தில்  வட இந்திய நடனங்களையும், கேரளாவில் குரு கோபினத் கீழ் கதகளியையும் பயின்றவர், இலங்கை நடங்களை உலகப் பரப்பில் அறிமுகமும் செய்தவர். இவர் மறைந்து 11 ஆண்டுகளை நினைவு கூரும் முகமாக  இலங்கை அரசு 23.07.2016 அன்று அவருக்கு  ஒருஞாபகார்த்த முத்திரை வெளியிட்டது.
அன்று மாலை சித்திரசேனா கலாநிலையத்தினர் அவரை நினைவு கூர்ந்து  தமிழ்க் கலை நிகழ்வு ஒன்றினையும் நடத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதற்கு மட்டக்களப்பு அரங்க ஆய்வுக்கூடத்திடம் மட்டக்களப்பின் கூத்துக் கலை வடிவத்தினையும்   விளக்கும் ஒரு கூத்துஆற்றுகை நிகழ்வு கோரியிருந்தனர்.
சிங்கள மக்களுக்கும்,பிற நாட்டவர்க்கும் மட்டக்களப்பு கூத்துக்கலையை அறிமுகம் செய்யக்கிடைத்த சந்தர்ப்பத்தை  மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் நன்கு பயன் படுத்திக் கொண்டது.
மட்டக்களப்புக் கூத்து அரங்கினையும் அதன் பரிமாணங்களையும் விரிவுரை முறையில் விளக்கும் அதே வேளை நாடகத் தன்மை கொண்டதாகவும்,இது அமைக்கப் படிருந்தது அரங்க ஆய்வுகூட மாணவர்கள் பதின்மருடன் பேராசிரியர் மௌன்குருவும் இவ்வரங்க  ஆற்றுகையில் கலந்து கொண்டார். பிரதான உரையை அவரே நிகழ்த்தியதுடன் ஆற்றுகையினையும் வழி நடத்தினார்.
அவரது உரைக்கு ஏற்ப அரங்க ஆய்வுகூட மாணவர்கள்  நிகழ்வுகளை அளித்தனர்.
இதனை அவர்கள்  விவரண அரங்க ஆற்றுகையாகத் தயாரித்திருந்தனர்
ஒரு விவரணப்படம் பார்ப்பதுபோல இது அமைந்திருந்தது. மட்டக்களப்புத் தென்மோடி வடமோடிக் கூத்துக்களின்
மத்தள ஓசை, சதங்கை ஒலி,
சல்லரி ஓசை
என்ற வாத்தியங்களின் பின்னணியில்
உரையாடல்,

பேச்சு
மேடை அசைவுகள்,

நடிப்பு  தென்மோடி,வடமோடி ஆட்டங்கள்
பாடல்கள் என் பனவற்றிற்கூடாக இவ் வாற்றுகை நகர்த்தப்பட்டது.
1940 களிலிருந்து இற்றைவரையான மட்டக்களப்புக் கூத்தின் பரிமாணம் உரை,நிகழ்த்துகை என்பன மூலம்  காட்சிப்படுத்தப் பட்டன.
வடமோடி,தென்மோடி ஆட்டக்கோலங்களும்,ஆட்டநுட்பங்களும்,பாடல் அகைகளும் பாடும் முறைமைகளும் ஆரம்பத்தில் காட்சி ரூபமாக விளக்கப்பட்டதுடன் மட்டக்களப்பின் பிரபலமரபு வழிக் கூத்துக்களான இராமநாடகம்,நொண்டி நாடகம்,தர்மபுத்திரன் நாடகம்  ஆகியவற்றிலிருந்து சில காட்சிகளும் கூத்தை அடிநாதமாகக் கொண்டு   பேராசிரியர் மௌனகுரு தயாரித்த நாடகங்களான தொழிலாளர் எழுச்சி கூறும்  சங்காரம்,(1980)  பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து விடுதலை உணர்வு கொள்ளும் சக்தி பிறக்குது (1986) யுத்தத்தையும் யுத்த எதிர்ப்பையும் கூறும் இராவணேசன்(2010) காடழிப்பையும் அதனால வரும் தீமைகளையும் விளக்கும்காண்டவதகனம்(2014)ஆகிய புதிய கூத்து வடிவ நாடகங்களிலிருந்து சில காட்சிகளும்  ஆற்றகைகள்  செய்யப்பட்டு இடையிடையே விளக்கங்களும் கொடுபட்டன.
வேரின்றிக் கிளைகள் இல்லை அதேநேரம் கிளைகளே வேருக்கு ஒரு அர்த்தப்பாட்டையும் தருகின்றன.
கூத்தின் வேர்களையும் அதன் பல்வேறுவகை வளர்ச்சிப் போக்குகளையும் விளக்குவதாக இவ் ஆற்றுகை அமைந்திருந்தது

பழமையும் பழமையும்  இணைந்த இவ் விவரண அரங்க ஆற்றுகை மட்டக்களப்புக் கூத்தை அறியாதோர்க்கு  ஒரு அறிமுகமாகவும் அறிந்தோர்க்கு  மேலும் அது பற்றிய தேடல் எண்ணத்தைத்  தருவதாகவும்   அமைந்திருந்தது.
சித்திரசேனா கலா நிலயத்தினரின் அழகியல் அம்சம் நிரம்பிய மேடை ஒழுங்கும் ஒலியமைப்பும்,ஒளியமைப்பும் ஆற்றுகையைத் தூக்கி நிறுத்த உதவின.
தேர்ந்தெடுக்கப் பட்டு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ,உயர்ந்த கலாரசனையுடைய சிறிய சபை நந்தா மாலினி,சுவர்ணா மல்லவாராச்சி,தர்மசிரி பண்டாரனாயக்கா போன்ற சிறந்த கலைஞர்களும் காத்திரமான பல சிங்களக் கலைஞர்களும் நிறைந்த கனதியான அவை அரங்க ஆய்வுகூட மணவர்களின்  ஆற்றுகை அவர்களை வெகுவாகக் கவர்ந்தது என்பதை ஆற்றுகை முடிவில் அனைவரும் எழுந்து நின்று கரகோஸம் எழுப்பியபோது அறிய முடிந்தது.
இவ்வாற்றுகை யாழ்ப்பாணத்தில் 19.07.2016 அன்று  யாழ்ப்பாணஅரங்கச் செயற்பாட்டு குழுவின் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத் திறப்பு விழாவன்றும் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More