Home இலங்கை இரட்டை கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை.

இரட்டை கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரட்டை கொலை குற்றவாளிகள் மூவருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் இனம் கண்ட மூன்று எதிரிகளுக்கும், இன்றைய தினம் மேல் நீதிபதி இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும், தவறின் ஐந்து வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்பளித்தார். நான்காவது எதிரி குற்றமற்றவர் என கருதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மீதான 47 குற்ற சாட்டுக்களில் ஒன்றில் இருந்து 24 வரையிலான குற்ற சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 25 தொடக்கம் 47 வரையிலான குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது தலைமறைவாகி உள்ளனர். அவர்களுக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
குறித்த இரு குற்றவாளிகளும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுவதனால் இலங்கை ஜனாதிபதி இங்கிலாந்து நாட்டின் பிரதமருடனான இராஜதந்திர ரீதியில் அணுகி குற்றவாளிகளை இங்கிலாத்தில் இருந்து நாடுகடத்த வேண்டும் என வேண்டும் எனவும் , அதேபோன்று வெளிவிவகார அமைச்சு , வெளிநாட்டு நீதி அமைச்சு, இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் ஆகியோர் இராஜதந்திர ரீதியாக அணுகி குற்றவாளிகளை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.
அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு சர்வதேச பொலிசாரின் உதவியை அணுகி குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவு இட்டார்.
 
குறித்த வழக்கின் பின்னணி.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,  ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ் மற்றும் நமசிவாயம் கருணாகர மூர்த்தி ஆகிய நால்வர் கைது செய்யபட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.  47 குற்றசாட்டுக்கள் முன் வைக்கபட்டு குற்றப் பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்நிலையில் பிணையில் விடுவிக்கபட்டு இருந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்கள். ஏனைய இரு சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகம் அளித்து வந்தனர்.
அதனால்  முதலாம், இரண்டாம் எதிரிகள் அற்ற நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் உடன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் குறித்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாக சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எம்.ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகி இருந்தார்.
எதிரிகள் தம் மீதான 47 குற்ற சாட்டுக்களையும் மறுத்தனர். அத்துடன் தமக்கு ஜூரி சபை தேவையில்லை எனவும் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடாத்துமாறும் கூறி இருந்தனர்.
அதனை அடுத்து மன்றில் ஆஜராகாத முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடிவிறாந்து மேல்நீதிபதி பிறப்பித்தார். அத்துடன் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியை நாடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்
 குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரை தொடர் விசாரணைகளை நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி இருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More