91
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் , போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுக்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் குறித்த ஐந்துபேரையும் இன்று (13-02-2016) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது,.
இந்நிலையில் குறித்த ஐந்துபேரும் இன்றைய தினம் (13-02-2017) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் அவர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடா்பிலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்று 85 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் மூன்று வழக்குகளும் ஒரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யவேண்டியிருப்பதாகவும் பயங்கரவாத தடுப்புப் பொலிசார் அனுமதிகோரியிருந்தனர்;.
இதனை கவனத்தில் எடுத்த மன்று எதிர்வரும் 14ம்திகதி 15ம்திகதி 16ம் திகதி களில் குறித்த ஐந்து பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியிடங்களுக்குக்கொண்டு சென்று சில விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அதற்கான அனுமதியையும் கோரியிருந்தனர்.
குறித்த சந்தேக நபரை 20, 21, 22 ஆகிய திகதிகளில் காலை எட்டு மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை சிறைச்சாலை உத்தியோகத்தருடன் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை குறித்த சந்தேக நபர்களையும் வெளியில் சென்று விசாரிப்பதற்கு உரிய பாதுகாப்பில்லை என்றும் இது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டக்களாகவே இருக்கின்றன எனவும் இவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளான திருமதி எஸ்.விஜயராணி ,அர்ச்சுனா ஆகியோர் மன்றில் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த வழக்கு பதிவேடுகளை பதிவாளரின் பாதுகாப்பின் கீழ் வைத்திருக்கவும் மன்று உத்தரவிட்டுள்ளது
Spread the love