Home இலங்கை தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி கலந்துரையாடப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிவு : போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது

தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி கலந்துரையாடப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிவு : போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது

by admin

தோட்டங்களிலுள்ள தொழிற்சங்கங்களின் அனுமதி இல்லாமல் அரச தோட்ட காணியை தனியாருக்கு வழங்கப்போவதில்லை என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதே தவிர மக்கள் போராட்டத்தின் மூலம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை  அந்த பேச்சுகளுக்கான திகதியும் அரசாங்கம் அறிவிக்கவில்லை என செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

கண்டி உன்னஸ்கிரிய ஏயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக நடாத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்து கண்டி மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன் படி நேற்று கொழும்பிலுள்ள அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் பிரதிநிதி ஒருவருக்கும், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் ஆர்ப்பாட்டகாரர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்றது.

அதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட இலங்கை செங்கோடி சங்கம் மற்றும் கூட்டு தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியன கலந்து கொண்டிருந்தன. தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் செங்கொடிச் சங்கப் பிரதிநிதிகள் இதன்போது விளக்கமளித்தனர்.இதையடுத்து,தொழிற்சங்கங்களின்  அனுமதி இல்லாமல் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசாமல் , தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது என்ற உத்தரவாதம் அரச அதிகாரிகளால் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது. செங்கொடி சங்கம் எழுத்துமூலம் கேட்டுக்கொண்டதுக்கிணங்கவே இக்கடிதம் வழங்கப்பட்டது.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திகதி வழங்கப்படும் என சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டாலும் கடிதத்தில் அந்த விடயம் குறிப்பிடப்படவில்லை என செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

மேலும் எயாபார்க் தோட்டத்தில்  சகல தொழிலாள குடும்பங்களுக்கும் ஆக குறைந்தது 2 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு பிரித்து வழங்க வேண்டும், அரசு இக் காணிகளில,; தொழிலாளர்கள் தேயிலை செய்வதற்கான முன் உதவிகளை (உரம், மருந்து, கன்றுகள் மற்றும் விதைகள்) குறிப்பிட்ட காலம் வரை மானியமாக வழங்க வேண்டும்,இக் காணிகளில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே சென்று அரசு அல்லது அரச கம்பனிகள் கொள்வனவு செய்ய வேண்டும்,தேயிலை செழிப்பற்ற காலங்களில் மாற்று பயிர்களில் பயன் பெறுமாறு, திட்டம் தயாரிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டும் போன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை பற்றி இந்த சந்திப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என மக்களே முடிவெடுக்கவேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டபோது நாங்கள் தீர்வின்றி இந்த இடத்தை விட்டு அகலமாட்டோமென தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More