Home இலங்கை நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin

ஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து இருக்கிறது. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது ஆண்டுகளில் நீதிக்கும் உண்மைக்குமான புள்ளியை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் துளியேனும் நகரவில்லை. போர் நடந்த கணங்களிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார்.  இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்படியான விசாரணையாக அமையும் என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை தெளிவாகச் சொல்கிறார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மைத்திரி தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு இனப்புடுகொலை யுத்தம் என்ற மறுபெயரும் உண்டு. நீதியையும் உண்மையையும் வழங்கும் ஒரு தரப்பு முதலில் அதனை ஏற்க வேண்டும்.
இராணுவம் இழைத்த குற்றங்களை மறைத்துக் கொண்டு இராணுவத்தை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்கும் போக்கில் நீதியும் உண்மையும் ஏற்படாது. தமிழ் மக்கள் போரில் எவ்வாறு எல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வந்துவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில்  மனிதகுலத்திற்கு எதிரான பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாகவும் பிரேரணைகள் ஊடாகவும் நடந்தது இனப்படு கொலை என்றும் அதற்கு சர்வதேச பொறிமுறை ஊடாக தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை வடக்கு கிழக்கில் நடந்த அரசியல் கருத்தறியும் அமர்வின்போதும் சரி, நல்லிக்கண பொறிமுறைக்கான  செயலணியின்  அமர்வின்போதும் நீதியையும் உண்மையையும் வழங்க வேண்டும் என்றும் அதனை சர்வதேச விசாரணை ஊடாகவே வழங்க வேண்டும் என்றும் தம் நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை வடக்கு மாகாண சபை 2015இல் ஒரு மனதான தீர்மானமாக நிறைவேற்றியிருந்த நிலையில் தற்போது

“இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஏற்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த பூரணமான சுயாட்சி புதிய அரசியல் அமைப்பில் பிரகடனம் செய்யப்பட வேண்டும்”  என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் நீதீயை வழங்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது இருப்பதுடன் நீதியை வழங்க மறுக்கும் வகையிலேயே பின்னகர்கிறது.

காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கிளிநொச்சியில் இருபத்தைந்தாவது நாளாகவும் போராட்டம் நடைபெறுகிறது. இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் எண்ணற்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தி கண்ணீருடன் வீதியில் இருக்கும் மக்களை 25 நாட்கள் கடந்த பின்னரும் திரும்பியும் பார்க்காத அரசாங்கம் எப்படி நீதியை வழங்கும்?   தங்கள் உறவுகள் திரும்பி வருவார்கள் என்று பனியிலும் மழையிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பேராாட்டத்தில் ஈடுபடும் மக்கள்.
யாழ்ப்பாணம் வந்த மைத்திரிபால சிறிசேன, வடக்கில் நடக்கும் போராட்டங்கள் இலங்கை அரசாங்கத்தையும் மக்களையும் பிரிக்கும் போராட்டங்கள் என்று கூறினார். மைத்திரிபாலவுக்கும் வடக்கு கிழக்கில் நிலங்களை விடுவித்தால் புலிகள் மீண்டும் வந்துவிட்டனர் என்று குறிப்பிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பேச்சுக்கு இக் கருத்து ஒப்பானவை. வடக்கு கிழக்கில் மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் போராடுகின்றார்கள். இவை இன்றைய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் நடைபெறவில்லை. மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் நடைபெற்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்களுக்கான தீர்வை, அவர்களுக்கான நீதியை மகிந்த ராஜபக்ச எவ்வாறான காரணங்களை கூறி நிராகரித்தாரோ, அவ்வாறே நடக்க முற்படும் இச் செயலுக்காகவா தமிழ் மக்கள் தங்கள் வாக்குப் பலத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினர்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் உண்மையை சொல்ல ஒரு நிமிடம் போதும். அவர்கள் உள்ளனரா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை சொல்ல இரண்டு வருடங்கள் தேவையா? இன்னும் இரண்டு வருடங்களுக்கு அந்த மக்களை கண்ணீர் விட்டு வீதியில் அலையச் சொல்கிறதா இவ் அரசு?
உண்மையில் இவ்வாறான போக்குகளை பார்க்கின்ற போது, இலங்கை அரசாங்கம் உண்மையையும் நீதியையும் வழங்கும் அதன் மூலம் தமிழ் மக்களின் காயங்கள் ஆறும் என்று காத்திருப்பது முட்டாள்தனமானது. அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த கால அவகாசத்தை கோரவில்லை. தன்னை பாதுகாக்க தன்னுடைய இராணுவத்தை பாதுகாக்க, தன்னுடைய அரசை பாதுகாக்கவே கால அவகாசம் கோருகிறது. தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கான நீதி இன்றிய வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது. யுத்தத்தின் இரகசியங்களை அவிழ்க்காமல் அவர்களின் மனங்கள் அமைதி  கொள்ளாது.
எனவே நடந்த இனப்படுகொலைக்கான நீதிக்காக எப்படியோ போராடியே ஆக வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிர்பந்தம். இலங்கை அரசின் கால அவகாசம் கோரும் முகத்தின் திரையை கிழிப்பதுவே முதல் போராட்டமாய் இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக இலங்கை அரசு சொல்கிறது. இனப்படுகொலைக்கான நீதி நிலைநாட்டப்பட்ட அடிப்படைக் கட்டுமானத்திலிருந்தே, அமைதியிலிருந்தே, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டியது அவசியமானது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More