Home இலங்கை குமார் ஆனந்தனின் நினைவாக நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பது இலங்கையர் அனைவருக்கும் கௌரவம் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாகும்

குமார் ஆனந்தனின் நினைவாக நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பது இலங்கையர் அனைவருக்கும் கௌரவம் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாகும்

by admin

கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி H.M.M.ஹரிஸ் அவர்களே, வடமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ குருகுலராஜா அவர்களே, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, கௌரவ வடமாகாண சபை அவைத்தலைவர் அவர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, அமைச்சின் செயலாளர்களே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களிலேயே வெளிநாட்டு வர்த்தகத்தின் பிரபல இறங்குதுறையாக விளங்கிய வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் நாம் அனைவரும் இணைந்து இன்று குமார் ஆனந்தனின் நினைவாக ஒரு நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடாத்துவது வல்வெட்டித்துறை மக்களுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு பெருமையையும் கௌரவத்தையும் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.
ரேகு என்றால் போர்த்துக்கேய மொழியில் சுங்கம் என்று பொருள் படும். இங்கு சுங்கத்திணைக்களமும் ஒரு காலத்தில் இருந்ததால் இவ்விடம் ரேகு-அடி என்று கூப்பிடப்பட்டு மதகு10அடி யானது மதவடி என்று ஆனது போன்று, ரேகு அடி என்பது ரேவடி என்று மருவியதாகக் கூறப்படுகின்றது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி விவேகானந்தனுக்கும் இராஜரத்தினம்மாள் விவேகானந்தனுக்கும் சிரேஷ;ட புதல்வனாக 1943ம் ஆண்டில் வல்வெட்டித்துறை மாநகரில் அவதரித்த ஆனந்தன் அவர்கள் சிறுவயதில் இருந்தே எந்தவொரு காரியத்தை முன்னெடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும் அதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்பட்டார். கின்னஸ் புத்தகத்தில் குறைந்தது பத்து பதிவுகளையாவது உட்புகுத்த வேண்டும் என்பது அவரின் இளவயது கனவாக இருந்தது. மீன்குஞ்சுக்கு நீந்தக்கற்றுக் கொடுக்க வேண்டுமா என்பது போல இவர் சிறுவயதில் இருந்தே கடலில் நீச்சல் அடிப்பதில் வல்லவராக இருந்தார். அத்துடன் கல்வியிலும் சிறப்புறப் பயின்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம் பெற்று அதன்பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டம் பெற்று சட்டத்தரணியா சித்திபெற்று சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றிய போதும் அத்துறையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டு வணிகத்துறையில் கால் பதித்தார்.

1971ல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊரிற்கு அவர் நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954ம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.

இவரின் இந்த சாதனையை அக்காலத்தில் வீரகேசரி குழுமம் ‘ஆழிக்குமரன் கோடிக்கரையினிலே’ என்ற தலையங்கத்துடன் மிகச் சிறப்பாக வர்ணித்திருந்தது மட்டுமல்ல அதனைப் புரிந்த குமார் ஆனந்தன் அவர்களுக்கு ‘ஆழிக்குமரன் ஆனந்தன்’ என்ற சிறப்புப் பெயரையும் வழங்கிக் கௌரவித்தது. அதற்கும் மேலாக கோடிக்கரையில் இருந்து மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பி வந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கால அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் கடற்கரையில் நின்று அவரைக் கௌரவித்து வரவேற்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டமை அவரின் பெருமையை உலகறிய செய்தது.

ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் 20ற்கும் மேற்பட்ட சாதனைகளை புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும் முதலாவது சாதனையாக 1963ல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக்கடந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.

சகோதரியார் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியது போன்று
1. முதன்முதலாக தலை மன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஸ்கோடி எனும் ஊரிற்கு 1971ம் ஆண்டில் நீந்திச் சென்று அங்கு பத்தே நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின் (சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப) மீண்டும் அங்கிருந்து தலை மன்னாருக்கு மொத்தம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்களில் அவர் நீந்திக் கடந்தார்.
2. 1979ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் 187 மணித்தியாலங்கள் மிதிவண்டியில் தொடர்ந்து இடைவிடாது பிரயாணம் மேற்கொண்டார்.
3. 1979ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் பந்தொன்றை தொடர்ந்து கைகளால் அடித்து சாதனை படைத்தார். (Non Stop Ball Punching)

4. 1980ம் ஆண்டு மே மாதத்தில் 165 Sit ups களை 2 நிமிடங்களில் செய்து ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினார்.

5. 1979ம் ஆண்டு மே மாதத்தில் 33 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒற்றைக்காலில் நின்று சாதனை புரிந்தார்.
6. 1980ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் உயர உதைத்து (High Kicks) 9100 உதைவுகளை 7 மணித்தியாலம் 51 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
7. 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் பாதங்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தும் (Treading in Water) சாதனை படைத்தார்.

மேற்கூறிய 07 சாதனைகளும் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக கொழும்பு காலி முகத்திடலில் 128 மணித்தியாலம் 16 நிமிடங்கள் இடைவிடாது Twist நடனமாடி சாதனை புரிந்தபோது அன்றைய ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் நேரில் சென்று பாராட்டியிருந்தார்.

1980ல் திரு.ஆனந்தன் அவர்கள் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட அதே வேளையில் அவரின் இளைய சகோதரி ரங்கா விவேகானந்தன் சிறந்த குச்சுப்பிடி நாட்டியக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டார்கள். ஒரே குடும்பத்தில் இருந்த இருவர் சாதனையாளர்களாக ஒரே ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டமை இன்னோர் சாதனையாகும்.

ஆங்கிலக் கால்வாயை மூன்று தடவைகள் நீந்திக்கடக்க முயன்ற போது கடும் குளிர் காரணமாகவும் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு Hyperthermia  என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு குருதி அழுத்தம் மிகவும் குறைந்து சுவாசம் தடைப்படுகின்ற வேளையிலும் மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல்களை மீறி நீந்திக் கொண்டிருக்கும் போது மயக்கமுற்ற நிலையில் உடனடியாக உலங்;குவானூர்;தி மூலம் அவசரமருத்துவ பிரிவுக்;கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியன்று அவரின் உயிர் பிரிந்தது.

இந்த நிகழ்வில் இன்னொரு துன்ப நிகழ்வு என்னவெனில் ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்கு இளமைக் காலத்தில் இருந்தே முயற்சி செய்த போதும் அக்கால பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துக்கு தடை விதித்திருந்தமையால் காலம் கடந்தே அவரின் முயற்சி மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.

சீதோஷ;ண நிலை சீராக இருக்கக்கூடிய காலங்களில் செலவீனங்கள் மிக அதிகம் என்ற காரணத்தினால் பணத் தட்டுபாட்டின் நிமித்தம் ஆகஸ்ட் மாதத்திலேயே தனது நீச்சல் முயற்சியை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் கடல்நீரின் கடுமையான குளிரே இவரின் இனிய உயிரை காவு கொண்டது.

இத்துணை சிறப்புக்களும் உடைய ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் நினைவாக இந்த நீச்சல் தடாகத்தை அமைப்பதற்காக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமாகிய கௌரவ மங்கள சமரவீர அவர்கள் கொழும்பில் இருந்து இங்கே வருகை தந்திருக்கின்றார்கள். ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவியார் திருமதி மானெல் ஆனந்தன் அவர்கள் மங்கள சமரவீர அவர்களின் கிட்டிய உறவினர் என்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரியுமென்று நினைக்கின்றன்.

ஆழிக்குமரனின் இரண்டு புத்திரர்களுள் முதலாவது மகன் இராஜன் ஜே.ஆனந்தன் அவர்கள் இன்று இந்திய கூகுல் நிறுவனத்தின் அதியுயர் வரிசையில் கடமையாற்றுகின்றார். அவர் இன்று இங்கு பிரசன்னமாகியுள்ளார். அதே போன்று இரண்டாவது மகன் இராஜேஸ் அபிமன்யு அவர்களும் மின்னியல் இலத்திரனியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்பத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்று யுனிசெப் நிறுவனத்தில் சிரேஷ;ட உதவிக் தலைவராக பணியாற்றுகின்றார்கள் என அறிகின்றேன்.

இத்துணை சிறப்புக்களும் கொண்ட ஆனந்தனின் குடும்பத்தினர் அரசுடன் இணைந்து விளையாட்டுத் துறை ஊடாக ஆனந்தன் அவர்களின் நினைவாக சுமார் 08 கோடி ரூபா செலவில் அமைக்கும் இந்த நீச்சல் தடாகம் சிறப்புற அமைய வேண்டும். இங்குள்ள மக்களும் சுற்றுலாப்பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதனை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நிலையமாக பராமரிக்கும் பணி வல்வெட்டித்துறை பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். பராமரிப்பின்றேல் எல்லாமே வீணாகி விடும்.

இன்றைய இந்த நிகழ்வு சிறப்பாகவும் அந்நியோன்னியமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத்தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும். இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதை இந்தக் கூட்டு கட்சி அரசாங்கத்தினால்;த்தான் முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.

ஆனந்தன் குடும்ப உறவுகளுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக! இன்றைய நிகழ்வுக்கு நாயகனாக விளங்கும் கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More