Home இலங்கை புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம்.

புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம்.

by admin

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னனர் நீதிவான் ஏ.யூட்சன் மாயனத்தை சுற்றி சுற்றுமதில் அமைத்த பின்னர் சடலங்களை எரியூட்டுங்கள் என்றும் மிக விரைவில் மின் தகன மயானத்தை உருவாக்குங்கள் எனவும் கட்டளையிட்டார்.  அதன் பிரகாரம் மயானத்தை சூழ சுற்று மதில் அமைக்கும் பணியில் மயான அபிவிருத்தி சங்கம் ஈடுபட்டது. அதற்கு மயானத்தை சூழ உள்ளவர்கள் கடும் எதிர்ப்புக்களை காட்டி வந்தனர்.

கடந்த 16 ஆம் திகதி மதில் கட்டட பணியில் ஈடுபட்ட மேசன் தொழிலாளியான இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக மல்லாகம் நீதிமன்றில் மதில் கட்ட அனுமதி பெற்ற வழக்காளிகள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது.  குறித்த இரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை எனவும் , தாகுதலாளிகளை கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்நிலையில் , கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு மாயனத்தை சுற்றி அமைக்கபட்டு இருந்த சுற்று மதில் உடைத்து வீழ்த்தப்பட்டது. அது தொடர்பில் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் மயான அபிவிருத்தி செயலாளார் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் நள்ளிரவு 26ஆம் திகதி செயலாளரினதும்  அவரின் உறவினர் ஒருவருக்கும் சொந்தமான வாழைத்தோட்டத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த சுமார் 400 க்கும் அதிகமான வாழைகளை வெட்டி சாய்த்துள்ளனர். அது தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்றைய தினம் மாயானம் அமைந்துள்ள பகுதிகளை சூழவுள்ள மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்க சென்று இருந்த அச்சுவேலி போலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசாரும் அப்பகுதி மக்கள் முரண்பட்டதை அடுத்து போலீசார் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தவாறே அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

போலீசார் வெளியேறிய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட்ட மதில்கள் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் அவற்றின் அத்திபரத்தினையும் சிலர் கிளறி எறிந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதனை அடுத்து , நிலைமையினை கட்டுப்படுத்த நெல்லியடி , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய போலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இரவு வேளைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனும் எதிர்பார்ர்பில் விசேட போலிஸ் அதிரடிப்படையினரும் மயானத்தை சூழ உள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  அதனால் புத்தூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More