Home இலங்கை விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி – கார் தப்பியோட்டம்

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி – கார் தப்பியோட்டம்

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த 17.06.2017ந் திகதி காரினால் மோதப்பட்டு படுகாயங்களுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 21.06.2017 இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ந் திகதி அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏ-32 வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவனை பின்புறமாக கார் மோதியதில் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் தரம் 7,ல் கல்வி பயிலும் அ.அபினாஸ் வயது 12 உடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு குறித்த சிறுவன் கொண்டு வரப்பட்ட நிலையில் மயக்க நிலை தெளியாமலே இன்று உயிரிழந்து உள்ளார்.

இவ்விபத்தினை ஏற்படுத்திய காரின் இலக்கம் SG-CAJ.1171 ஆகும். சிறுவனை மோதிய கார் நிறுத்தாமலே  தப்பிச் சென்றுவிட்டது. இது தொடர்பாக முழங்காவில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் தகுந்த நடவடிக்கை பொலிசார் எடுக்கவில்லை என்பதனைக் கண்டித்து முழங்காவில் பொது அமைப்புகளினால் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 22.06.2017 முற்பகல் 10.00 மணிக்கு முழங்காவில் நகரத்தில் நடாத்தப்படவுள்ளது.

குறித்த கார் மதுபோதையிலேயே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்ததை நேரில் கண்ட மக்கள் பொலிசாரிடம் தெரிவித்திருந்தனர். காரினால் மோதப்பட்ட சிறுவன் பதினைந்து மீற்றர் தூரம் வரை தூக்கி எறியப்பட்டிருந்தார். மோதப்பட்ட வேகத்தில் காரின் இலக்கத் தகடு கழன்று வீழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More