Home இலங்கை தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்

by admin


மக்களிடம் செல்லுங்கள்.
மக்களுடன் வாழுங்கள்.
மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
மக்களை அன்பு செய்யுங்கள்.
அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள்.
அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள்.
ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட
வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும்
மக்கள், ‘நாம் இவற்றை செய்தோம்’ என்று கூறுவார்கள்.
-சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ

இரண்டு தரப்பிற்கும் நோகாமல் வடமாகாண சபை விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் தனது நீதியையும், பதவியையும் தக்கவைத்துக் கொண்டார். சம்பந்தர் தமிழரசுக்கட்சியை பாதுகாத்துக் கொண்டார்.

பதவி கவிழ்க்கப்பட்டால் அடுத்தது என்ன என்பது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் துணிகரமான தரிசனம் எதுவும் இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. தன்னை சந்தித்த மதகுருக்கள் சிலரிடம் தான் யாழ்ப்பாணத்தில் நிற்கத் துணிந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த மக்களை விட்டு போகப் போவதில்லை என்ற தொனிப்படவும் கதைத்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு நிறுவன உருவாக்கி அல்ல. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்கி ஒரு கட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான வாழ்க்கை ஒழுக்கம் அவரிடம் இல்லை. எனினும் தமிழரசுக்கட்சி ஏற்படுத்திய நிர்பந்தம் அவரை மாற்று அணியை நோக்கி தள்ளிவிடக் கூடாது என்று சம்பந்தர் சிந்தித்திருக்க முடியும்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விக்னேஸ்வரனை கதாநாயகராக்கிவிட்டது. அவர் கவிழ்க்கப்பட்டால் ஒரு  தியாகியாக்கப்பட்டிருப்பார். அது அவருக்குள்ள ஜனவசியத்தை மேலும் கூட்டியிருந்திருக்கும். சாதாரண தமிழ் மனோநிலைக்கூடாக பார்த்தால் விக்னேஸ்வரன் தியாகி என்றால் அவரை கவிழ்க்க முயன்ற தமிழரசுக்கட்சி துரோகி என்றுதானே பொருள்? எனவே தனது கட்சியின் பெயர் கெடுவதை தவிர்ப்பதற்கும் அல்லது தமிழரசுக்கட்சி உடைவதை தடுப்பதற்கும் அதே சமயம் விக்னேஸ்வரன் தியாகியாக்கப்படுவதை தடுப்பதற்கும் சம்பந்தருக்கிருந்த ஒரே வழி ஏதோ ஒரு புள்ளியில் இணக்கத்தை காண்பதுதான்.

கொழும்பில் உள்ள சக்திமிக்க நாடுகளின் தூதுவர்கள் விக்கினேஸ்வரனை அகற்றுவதற்கு இது பொருத்தமான நேரமல்ல என்றும் அதற்குக் கூறப்படும் காரணமும் பொருத்தமானதல்ல என்றும் கருதியதாக தெரிகிறது. விக்னேஸ்வரனை அரங்கில் இருந்து அகற்றுவது மேற்படி நாடுகளுக்கும் விருப்பம்தான். ஆனால் அவரை தியாகியாக்கும் விதத்தில் கவிழ்ப்பது சில சமயம் அவரைப் பலப்படுத்திவிடக் கூடும் என்று அவர்கள் சிந்தித்திருக்கலாம். இரண்டு சக்தி மிக்க நாடுகளின் தூதுவர்கள் கூட்டமைப்பின் தலைவரோடு தொடர்பு கொண்டதாக ஒரு தகவல் உண்டு. இத்தகைய ஓர் பின்னணிக்குள் தான் சம்பந்தர் விக்னேஸ்வரனோடு ஓர் இணக்கத்திற்கு வர எத்தனித்தார்.

விக்னேஸ்வரனுக்கு எதிரான அணி சம்பந்தரைச் சந்தித்த பொழுது அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருக்கிறார். ‘சபை குழப்பிகளாக’ இருக்கக் கூடாது  என்று  சுட்டிக்காட்டியுள்ளார். நாங்களே கொண்டுவந்த ஒருவரை நீக்கச் சொல்லி ஏன் போய் ஆளுனரிடம் கேட்டீர்கள்? என்ற தொனிப்பட கேட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனைப் பற்றிய முறைப்பாட்டுக்களை கேட்டுவிட்டு அவற்றை மாகாண சபைக்குள்ளேயே தீர்த்திருக்க வேண்டும்  என்ற தொனிப்படக் கதைத்திருக்கிறார். இப்படி பார்த்தால் சம்பந்தருக்கு தெரியாமலேயே அல்லது அவருடைய பூரண சம்மதம் இன்றியே ஓர் உள்ளோட்டம் ஓடியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சம்பந்தருக்கு முழுமையாக தெரியாமல்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னகர்த்தப்பட்டது என்று கூறப்படுவது குறித்தும் விக்கினேஸ்வரனுக்கு மாவை.சோனாதிராசாவின் தொலைபேசி எண் தெரியாது என்று கூறப்படுவது குறித்தும் இக்கட்டுரைக்குச் சந்தேகங்கள் உண்டு. கடந்த சில வாரங்களுக்குள் கூறப்பட்ட நம்பக்கடினமான இரண்டு கூற்றுக்கள் இவை.

எதுவாயினும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய தேவை இரண்டு தரப்பிற்குமே ஏற்பட்டது. யார் இறங்கி வருவது என்பதில் பரஸ்பரம் தயக்கம் காணப்பட்டது. எனவே மதப்பெரியார்கள் தலையிட்ட பொழுது இரண்டு தரப்புமே அதை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டனர்.

எனினும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மாகாண நிர்வாகத்தைக் கொண்டிழுப்பதில் விக்கினேஸ்வரன் மேலும் பல தத்துக்களைக் கடக்க வேண்டியிருக்கும். புதிய அமைச்சர்கள் நிர்வாகத்தை கொண்டிழுப்பதில் நடைமுறை சவால்கள் சிலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஒரு முன்னாள் அமைச்சர் சொன்னார். ஊழல் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கையுணர்வுடன் அமைச்சர்கள் செயற்பட வேண்டியிருக்கும். இது அவர்களை எப்போதும் தற்காப்பு நிலையிலேயே வைத்திருக்கும் என்றும் அவர் சொன்னார். அவர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் பயப்படவேண்டியிருக்கும். இப்படி பயந்து பயந்து அமைச்சை நடாத்த முடியாது. எனவே ஒன்டரை வருடத்தை எப்படியாவது ஓடிக் கடந்து விடுவோம் என்றே அவர்கள் சிந்திப்பார்கள் என்று ஒரு மூத்த அதிகாரி சொன்னார்.

விக்கினேஸ்வரனால் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் என்று முன்பு வர்ணிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பதின்மூன்று உறுப்பினர்கள் தான் அவரோடு பக்க பலமாக நின்றார்கள். தூய மிதவாதிகள் என்று தங்களைப் பெருமையாகக் கூறிக்கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக நின்றார்கள். சமரச முயற்சிகளின் போதும் மூன்று முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களே முன்னின்று உழைத்தன. மாகாணசபை இப்பொழுது இரண்டாகப் பிளவுண்டு காணப்படுகிறது. தீர்க்கப்படாத கோபம், அவமானம் வெப்பியாரம் என்பன உள்னே கனன்றுகொண்டேயிருக்கின்றன. மாகாண சபை அது இழந்த கூட்டுணர்வை இனிமேலும் திரும்பப் பெறுமா என்பது சந்தேகமே. ஓர் ஆன்மிகவாதியாகவும், நீதிபதியாகவும் விக்னேஸ்வரன் எந்தளவிற்கு விட்டுக் கொடுத்து மன்னித்து நடப்பார், பழிவாங்காமல் அரவணைத்து நடப்பார் என்பவற்றில்தான் எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டு காலம் தங்கியுள்ளது. எனினும் பதவி விலகாத இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை முடிவுகள் மற்றொரு நெருக்கடியை கொடுக்கக்கூடும். அப்பொழுதும் அவர் ஒரு நீதிபதியாக செயற்படுவாரா? இல்லையா?

அவர் ஒரு நீதிபதியாகவோ ஆன்மீகவாதியாகவோ மட்டும் செயற்பட்டால் போதாது. அதற்குமப்பால் அவர் ஓர் உறுதியான தலைவராகவும் செயற்பட வேண்டியிருக்கிறது என்பதைத்தான் கடந்த  சில வாரகால நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன.மாகாண நிர்வாகத்துக்கு மட்டுமல்ல,தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் அது அவசியம். அவர் கவிழ்க்கப்படப் போகிறார் என்று கேள்விப்பட்டதுமே மக்கள் அவரை நோக்கிக் குவிந்தார்கள். சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்து சில மணி நேரங்களில் 300க்கும் குறையாதோர் கைதடியில் கூடினார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் நல்ல பொறுப்பிலுள்ள அரச ஊழியர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அடுத்த நாள் கர்த்தால் என்று அறிவிக்கப்பட்டது. அதே சமயம் ஓர் எதிர்ப்பு பேரணி நல்லூரில் இருந்து புறப்பட்டு விக்கினேஸ்வரனுடைய வசிப்பிடத்தைச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டது. யாழில் தற்போது வெளிவரும் பிரதான பத்திரிகைகளில் இரண்டு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செய்திகளையும், கருத்துக்களையும் பிரசுரித்துக்கொண்டிருந்த ஒரு பின்னணியில், கடையடைப்பின் காரணமாய் தனியார் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்த ஒரு பின்னணிக்குள் 1000க்கும் குறையாத பொதுமக்கள் நல்லூரடியில் திரண்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் படித்த அரசியல் விளக்கமுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், கருத்துருவாக்கிகள் ஊடகவியலாளர்கள் என்று பலதரப்பட்டோரையும் காண முடிந்தது.

அன்றைய தினமும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் யாழ். கோவில் வீதியில் அமைந்திருந்த விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்திற்கு முன்னால் வாகனங்களையும், ஊடகவியலாளரையும் தொடர்ச்சியாக காண முடிந்தது. சமய பெரியார்களும், புத்திஜீவிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் அவரை தொடர்ச்சியாக சந்தித்தனர். நாங்கள் உங்களோடு நிற்போம் எனும் செய்தி விக்கினேஸ்வரனுக்கு அழுத்தமாகவும், உணர்ச்சிகரமாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான சந்திப்பு ஒன்றின் பொழுது தான் கவிழ்க்கப்பட்டாலும் வடக்கை விட்டு போகப்போவதில்லை என்பதை விக்கினேஸ்வரன் தன்னைச் சந்தித்த சமய பெரியார் சிலரிடம் கூறியிருக்கிறார்.

அதே சமயம் இதற்கு முற்றிலும் முரணான ஒரு காட்சியை தான் யாழ். மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் காண முடிந்தது. அங்கே பெருமளவிற்கு அரசியல்வாதிகளையும், கட்சி உறுப்பினர்களையும்தான் காண முடிந்தது. பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும், மத அமைப்புகளைச் சேர்ந்தவரையும் அங்கே பெரும்பாலும் காண முடியவில்லை. இந்த காட்சி முரணை இன்றைய காலகட்டத்தின் அரசியல் குறிகாட்டி எனலாம். கோவில் வீதியில் கூடியவர்கள் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தமது அனுதாபத்தையும், ஆதரவையும், சகோதரத்துவத்தையும் தெரிவிப்பவராய் காணப்பட்டார்கள். அதே நேரம் மாட்டின் வீதியில் கூடியோர் ஏதோ ஒரு அரசியல் வியூகத்தை வகுக்க எத்தனிப்பவர் போல் காணப்பட்டார்கள். இவ்வாறு கோவில் வீதியில் கூடிய உணர்ச்சிவசப்பட்ட ஆதரவாளர்களில் ஒரு தொகுதியினர் மாட்டின் வீதியை முற்றுகையிடப் போவதாக ஒரு வதந்தியும் கிளப்பப்பட்டது. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை.

எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு வேண்டிய பலத்தை விக்கினேஸ்வரனுக்கு குறிப்பாக மூன்று தரப்புக்கள் வழங்கின. முதலாவது அவரை நோக்கிக் குவிந்த மக்கள். இரண்டாவது அவரை ஆதரித்த முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும். மூன்றாவது தமிழ் மக்கள் பேரவையும் ஏனைய சிவில் மற்றும் மத அமைப்புக்களும் ஊடகங்களும்;. இவை தவிர மற்றொரு தரப்பும் உண்டு. அது தமிழரசுக்கட்சிக்குள் காணப்பட்ட முதலமைச்சரின் ஆதரவாளர்கள். இவர்களிற் பலர் அக்கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள். ஒரு கட்சியாகச் சிந்திக்கும் பொழுது அவர்கள் விக்கினேஸ்வரனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனால் ஊழலுக்கெதிரான நீதியை நிலைநாட்டிய காரணத்திற்காக அவர் கவிழ்க்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சில சமயம் முதலமைச்சர் கவிழ்க்கப்பட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்குள் இருந்தும் ஓரணி அவரை வெளிப்படையாக ஆதரித்துக் கொண்டு அவர் பக்கம் வந்திருக்கும். இப்படிப் பார்த்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையொட்டி ஒரு புதிய அணித்திரட்சிக்கான சூழ்நிலை கனியத் தொடங்கியது. அதற்குப் பின்பலமாக பொதுசன அபிப்பிராயமும் உணர்ச்சிகரமாக திரளத் தொடங்கியது. விக்கினேஸ்வரன் அதற்குத் தலைமைத் தாங்கத் தயாராக இருந்திருந்தால் ஒரு மாற்று அணிக்குரிய ஒப்பீட்டளவில் பலமான ஒரு அடித்தளம் போடப்பட்டிருந்திருக்கும்.

ஆயின் நம்பிக்கையில்;லாத் தீர்மானத்தை பின்னெடுத்ததன் மூலம் ஒரு மாற்று அணியை நோக்கிய வேகத்திரட்சி வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியொரு மாற்று அணி உருவாகுவதை தமிழரசுக் கட்சி மட்டுமல்ல அரசாங்கமும் வெளித்தரப்புக்களும் விரும்பவில்லை. யாப்புருவாக்க முயற்சிகள் மெது மெதுவாக அவற்றின் அடுத்த கட்டங்களை நோக்கி போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஓர் அரசியல் சூழலுக்குள் விக்கினேஸ்வரனை எப்படிப் பலவீனப்படுத்தலாம் என்றே மேற்படித் தரப்புக்கள் சிந்தித்திருக்கலாம்.

இத்தகையதோர் பின்னணிக்குள் தனது மெய்யான நண்பர்கள் யார்? தனக்கு உண்மையான ஆலோசகர்கள் யார்? தன்னோடு நிலைத்து நிற்கும் அமைப்புக்கள் எவை? சாதாரண சனங்களின் அன்பு எப்படி இனிக்கும்? எப்படிக் கண்ணீரை வரவழைக்கும்? என்பவற்றை கண்டுபிடிக்கத் தேவையான ஓர் அனுபவத்தை விக்கினேஸ்வரன் கடந்த இரண்டு வாரங்களில் பெற்றிருப்பார் என்று நம்பலாம். வடமாகாண ஆளுநர் குரே எள்ளலாகக் கூறியது போல நடந்த குழப்பங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியைப் போன்றவையல்ல. அவை தெளிவான இரண்டு அரசியல் செயல் வழிகளுக்கு இடையிலான மோதல்களே.
மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கினார்கள். கடந்த இரு வாரங்களின் போதும் தமிழ்மக்கள் அவருக்கு மற்றொரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணைகளுக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். தன்னை நம்பித் தெருவில் இறங்கிய மக்களுக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். பொறுத்த நேரத்தில் தன்னைப் பாதுகாத்த இயக்கங்களுக்கும், அமைப்புக்களுக்கும் ஊடகங்களுக்கும் தனி நபர்களுக்கும் அவர் பொறுப்புக் கூற வேண்டும்.அல்லது  அவருடைய கொள்ளளவை விடக் கூடுதலாக அவரிடம் எதிர்பார்த்து ஏமாந்து விடக்கூடாது என்பதையாவது அவர் தமிழ் மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More