Home இலங்கை வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

by admin
கௌரவ. இரா.சம்பந்தன், பா.உ.,
தலைவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அன்பின் ஐயா,
வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றிற்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்திற்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.
வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிற்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில்; ஒரு ஆசனமானது,  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவிற்கமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன.
மேலதிக ஆசனமாக கிடைத்த ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் அவர்கள் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.
மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி; விலகிய நிலையில், கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் தமிழரசுக் கட்சியை தழுவி செயற்படலாயினர். அந்தவகையில,; முதல் வாய்ப்பைப் பெற்ற மேரிகமலா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்;. பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் அவர்களை பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரிகமலா அவர்கள் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உப தலைவராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளரான மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்குமாறு கோரியதாகவும் அதற்கு சாதகமான பதிலை தமிழரசுக் கட்சி வழங்கியிருந்ததாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். ஆயினும் ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன் அவ்விடத்துக்கு அவசர அவசரமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரம் அவர்களை நியமித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள்.
ஏற்கனவே வட மாகாணசபையின் முல்லை மாவட்ட உறுப்பினராகவிருந்த கனகசுந்தரசுவாமி அவர்களின் மறைவையடுத்து பதவி வெற்றிடமாகியபோது, அடுத்த நிலையில் இருந்த எமது அமைப்பின் க.சிவநேசனின் பெயரை, பலமுறை நாம் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும்கூட, தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் மூன்று மாதகாலமாக தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்துவந்தது. இறுதியாக தேர்தல் ஆணையாளரே தனது பதவிக்குரிய அதிகாரவழியில் தற்துணிவுடன் சிவநேசனின் உறுப்புரிமையை அறிவித்திருந்தார். கூடவே, தமிழரசுக்கட்சியின் செயலாளரின் பொறுப்பற்றதன்மையை தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆக, தார்மீக நெறிகளைமீறி, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களின் நியமனங்களில் தன்னிச்சையுடன் செயற்பட்டுவருகின்றமை அப்பட்டமான உண்மை.
ஐக்கியத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கூட்டமைப்பின் சகல கட்சிகளும் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட முடிவின்படி இவ் ஆசனம் எமது அமைப்பின் உறுப்பினருக்கே வழங்கப்படல் வேண்டும். இதுவே ஒப்புரவானதும் நீதியும் பண்பும் நிறைந்த தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக இருக்குமென நான் நம்புகிறேன். இது குறித்து பல சந்தர்ப்பங்களில் தங்களிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தேன்.
கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் திட்டமிட்டு புறம்தள்ளப்பட்டு வருகின்ற சூழலில், ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாக கருதி தமிழரசுக்கட்சியின் அடையாளத்தையும், பெயரையும் நாம் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவாகவே தற்போதைய நிலைமையை நாம் பார்க்கிறோம். ஓற்றுமைக்கான விலையான எமது விட்டுக்கொடுப்புகளை எமது பலவீனமாக கருதும் செயற்பாடுகள் கண்ணியமானவையோ, அரசியல் நாகரீகம் நிறைந்தவையோ அல்லது தமது பலம் என்று பெருமை கொள்ளக்கூடியவையோ அல்ல.
தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் இன்னும் பல உயர்ந்த பண்புகள் நிறைந்த தலைவர்களாலும் அவர்களின் தியாகத்தினாலும், அவர்களுடன் சமகாலத்தில் திருகோணமலையில் தங்களாலும், இளைஞரணி தலைவராக மாவை அண்ணராலும் கட்டிக்காத்து வழிநடாத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால போக்குகள் மக்களின் உணர்வுகளை மதிக்காதிருப்பதை தாங்கள் உணராமலிருக்க முடியாது. உதாரணமாக,  வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்தை அறிந்தவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பாதகமான விமர்சனங்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகின்றபோதிலும், தமிழ் தேசிய பிரச்சனைக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் வரையிலாவது கட்டிக்காக்க வேண்டிய ஒற்றுமை குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை நேர்மையானது. உண்மையான ஐக்கியத்திற்கு முரணான நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக நாம் செயற்படவில்லை.
எவ்வாறிருப்பினும், தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவர்கள் பாரம்பரியமாக வெளிப்படுத்தி வந்த தலைமைத்துவப் பண்புகளையும், தமிழ் மக்களை ஓரணியில் ஒற்றுமைப்படுத்தி முன்கொண்டு செல்லும் பக்குவத்தையும் இன்று உங்களிடம் நான் காண்கிறேன். அதேவேளை கூட்டான ஓர் அமைப்புக்குரிய அடிப்படைப் பண்புகளை தூக்கிநிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு தஙகளையே சாரும் என நம்புகிறேன்.
எனவே, தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட  தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
த.சித்தார்த்தன் (பா.உ)
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
28ஃ07ஃ2017.
பிரதிகள்:
1. கௌரவ முதலமைச்சர், C.V. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை.
2. கௌரவ மாவை. சேனாதிராஜா, பா.உ, தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி.
3. கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பா.உ, தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்.
4. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் நாயகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
5. கௌரவ. சி.வி.கே.சிவஞானம், தவிசாளர், வடக்கு மாகாண சபை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More