Home இலங்கை கொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம்

கொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம்

by admin

கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதியின் பென்ரித் தோட்டத்தில், குளோரின் வாயுவால் நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் நிலையத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழ்கின்ற மக்களுக்கு, அதே தோட்டப்பகுதியில் மாற்றுக்காணி வழங்கி தனி வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியை கோரி, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவரால்வெளியிடப்பட்டுள்ள ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்; கூறியுள்ளதாவது,

அவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது. இதுபற்றி அப்போது நாம் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து இருந்தோம். தற்போதும் அந்த லயன் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்ந்து குடியிருந்து வருவதால், மீண்டும் வாயுக்கசிவு ஏற்படுமானால், பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.

இவற்றை கருத்தில் கொண்டு, அந்த லயன் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு, மாற்றுக்காணி வழங்கப்பட வேண்டும் என்றும், அப்படி வழங்கப்படும் காணியில் அம்மக்களுக்கு தனி வீடுகள் அமைத்துக்கொடுக்க ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி   சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை சில வாதப்பிரதிவாதங்களின் பின், அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை   அறியத்தருகிறேன்.

அதே தோட்ட பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து அவசியமான அளவு தள்ளி ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நமது மக்களுக்கான  குடியிருப்பு வசதிகள் அமைக்கப்படும். இந்த குடியிருப்பு தனி வீடுகளாகவே அமைக்கப்பட வேண்டும் என்பதையும் நான் எனது அமைச்சரவை பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு, அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். எனது அமைச்சின் செயலாளர், இது தொடர்பில் தொடர்புள்ள அனைத்து அரச நிறுவன பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடலை நடத்தி செயற்பட வேண்டும் எனவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்படி காரியங்களை முன்னெடுக்கும்படி எனது அமைச்சு செயலாளரை நான் பணித்துள்ளேன் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More