Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் கவனிக்கப்படாமலேயே உள்ளது – சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் கவனிக்கப்படாமலேயே உள்ளது – சம்பந்தன்

by admin

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும்    காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும்  கவனிக்கப்படாமலேயே காணப்படுவதாக  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

காணாமல் ஆக்கப்பட்டுதல் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனக்கவலைகளோடும் துயரத்தோடும் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது இன்னுமொரு சர்வதேச தினத்தை நாம் எதிர்கொள்கிறோம் எனவும்  பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைதி வழியில் தொடர்ந்து  ஆர்ப்பாட்டங்களை நடாத்தி  வருகின்றனர்.

அவர்கள் கோருவதெல்லாம், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென்பதே. ஆயுதக் கலவரங்கள் முடிவுக்கு வந்து ஆண்டுகள் எட்டு கடந்து விட்டபோதும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வருகின்றது.

உலகின் பல்வேறு பாகங்களிலும் இது மிகமோசமான பிரச்சினையாக உருவாகி வருவதாக அங்கத்துவ நாடுகள் உணர்ந்து கொண்டதையடுத்து 2010ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தனது தீர்மானம் ஒன்றினூடாக இப்பிரச்சினைகள் தொடர்பாகத் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களும் பல வருடங்களாகத் தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்து வரும் நிலைமை கவலை தருவதாக உள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்தவிடயம் தொடர்பாக தனது உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு தாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும்  படையினரிடம் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியவர வேண்டும் எனவும் சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவி;த்துள்ளார்.

மேலும் இந்தநாட்டில், பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு மாறாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளைச் செயற்படுத்தப்படுவதனையும் உறுதி செய்யுமாறும்   சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More