Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு ?

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு ?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள்  இன்றைய தினம்  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.

குறித்த வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த நாலாம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டது. அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை 28ஆம் திகதி எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இடம்பெற்று இன்றைய தினத்துடன் எதிரிகள் தரப்பு சாட்சியங்களை முடிவுறுத்துவதாக , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பு தொகுப்புரைக்காக எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வாய் மொழி மூலமாக இரு தரப்புக்களும் தமது தொகுப்புரைகளை மன்றில் வழங்க வேண்டும் எனவும், மேலதிக சமர்ப்பணங்கள் செய்வதாயின் அதனை அன்றைய தினமே இரண்டு தரப்பினரும் எழுது மூலம் மன்றுக்கு வழங்க வேண்டும் எனவும்  எழுத்து மூலம் வழங்கப்படும் சமர்ப்பணம் மூன்று பிரதிகளாக மன்றில் வழங்கப்பட வேண்டும் எனவும் மன்று கட்டளையிட்டது.

அதனை தொடர்ந்து 9 எதிரிகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.

அதேவேளை எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி இரு தரப்பு தொகுப்புரைகளும் முடிவடைய தீர்ப்புக்கு மன்று திகதியிடும். அது பெரும்பாலும் அடுத்த மாத இறுதி வாரத்திற்கு முன்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More