Home இந்தியா 2050ல் சென்னை – அதை சுற்றியுள்ள பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும் – ஆய்வு

2050ல் சென்னை – அதை சுற்றியுள்ள பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும் – ஆய்வு

by admin

உலக வெப்பமயமாதலால் 2050-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடற்பகுதிக்குள் சென்றுவிடும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ்  செயற்பட்டு வருகின்ற பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற  அமைப்பின் ஒரு பிரிவான தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.

பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்திய ஆய்வில் உலக வெப்பமயமாதலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.

உலக வெப்பமயம் அதிகரிப்பின் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன என தெரிவிப்பட்டுள்ளது.   மேற்கு அண்டார்டிகா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பெரிய அளவில் பனிப்பாறைகள்   கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன எனவும் இதன் காரணமாக 2050ல் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது.

அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக உலகம் முழுவதுமே கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும்  இதனால் தமிழ்நாட்டில்   ஏற்படும் பாதிப்புகள் குறித்து  ஆய்வு செய்ததில் 2050-ம் ஆண்டில் தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது.

இதனால் சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகளை கடல் விழுங்கி விடும் எனவும்  சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் வாழும் 10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடல் மட்டம் உயருவதால் கடல் அரிப்பு இனிவரும் காலங்களில்  அதிகமாகும் எனவும்  இதனால் கடற்கரை பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் அலையின் சீற்றமும் அதிகரித்து  ராட்சத அலைகள் ஊருக்குள் புகும் எனவும்  சூறாவளி, புயல் காலத்தில் இதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும் எனவும் கடல்நீர் நிலத்தடி நீருக்குள் புகுந்து உப்பத்தண்ணீராக மாறும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More