Home இலங்கை கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கும் வெள்ளம் :

கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கும் வெள்ளம் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே   வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதென    பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில் சீரான கழிவகற்றல் பொறிமுறை எதுவும் இல்லாத நிலையே தொடர்ந்தும் காண்ப்பட்டு வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளும் சரி  பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும்  சரி இது தொடர்பில் அக்கறையின்றி காணப்படுகின்றனர் எனவும்  பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் கரைச்சி பிரதேச சபை தங்களுக்குரிய   அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும்,  அதுவே தங்களின் கடமையும் என கருதி செயற்பாடுகளை முன்னெடுத்தமை  காரணமாக நகரத்தில் மேற்கொள்ளவேண்டிய கழிவகற்றல்,    வெள்ள நீர்வழிந்தோடுவதற்கான  கால்வாய்களை ஏற்படுத்துதல் போன்ற பிரதேச சபைக்குரிய பணிகளை  மேற்கொள்ள தவறிவிட்டனா் எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்திலே டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வீடு வீடாகச் செல்லும் சுகாதார உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் வீட்டில் நன்னீரில் இருந்தே டெங்கு நுளம்பு பெருக்கம் உருவாகுவதாகவும் அவ்வாறான நிலையில் நீர் தேங்கி நிற்பதை இல்லாதொழிக்குமாறு பரப்புரை விடுத்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தில் மக்கள் நாள்தோறும் கூடுகின்ற பொதுச் சந்தை உட்பட பல இடங்களில் மழை வெள்ளம் தேங்குகின்ற அவலம் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகச் சூழல், தொடரூந்து நிலையப் பகுதி உட்பட பல இடங்கள் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்குகின்ற நிலைமை உள்ளது. இதற்கு காரணம் ஏ-9 சாலை, தொடரூந்துச் சாலை புனரமைப்புகளின் போது நகரத்தின் வெள்ளம் வழிந்தோடுவதற்கான வாய்க்கால்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை.

1990ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரில் ஏற்பட்ட போர்களின் போது அமைக்கப்பட்ட மண் அணைகள் அகற்றப்பட்ட போதிலும் சில இடங்களில் அவை அகற்றப்படாமலும் உள்ளன. இதன் காரணமாக கிளிநொச்சி நகரத்தின் வெள்ளம் வழிந்தோடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே ஆராயப்பட்ட போதிலும் முடிவுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழை காலத்தில் மலசல கூடக் குழிகளை மூடி வெள்ளமும் உணவகங்கள் உட்பட வர்;த்தக நிலையங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் என்பவற்றில் மழை வெள்ளம் தேங்கி நிற்கின்ற நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி நகரத்தில் இருந்து மழை காலத்தில் வெள்ளம் வழிந்தோடுவதற்கான பொறிமுறையினை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் என்பது பொது அமைப்புகளின் வேண்டுகையாக உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More