Home இலங்கை புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு -செல்வரட்னம் சிறிதரன்

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு -செல்வரட்னம் சிறிதரன்

by admin

யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடைவே ஏற்பட்டிருக்கின்றது என்பதே சரியான மதிப்பீடாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான வலுவானதோர் அரசியல் தலைமையும் அமையவில்லை என்பதையும் யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதி வெளிப்படுத்தியிருக்கின்றது.
இராணுவ சக்திசார்ந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை விடுதலைப்புலிகளின் பொறுப்பில் இருந்த வேளை, அரசாங்கத்துடன் சமநிலைத் தன்மை காணப்பட்டது. சம அந்தஸ்துடனேயே,  விடுதலைப்புலிகளுக்கும் அரச தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. துரதிஸ்வசமாக விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நிலைப்பாட்டில் தோல்விகண்ட ஒரு நிலைமைக்கே தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருந்தது.
யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுடைய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அரசியல் ரீதியாக சமநிலையில் மட்டுமல்ல, பொறுப்பான ஒரு நிலையிலும் கூட தொடர்புகளைப் பேணியிருக்கவில்லை.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்த போதிலும், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என வெளியாருக்குக் காட்டுவதற்காக மட்டுமே அந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஏனெனில் அந்தப் பேச்சுக்களின் போது எட்டப்பட்ட முடிவுகள் அல்லது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை
அரச தரப்பினால் பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்பட்டன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான முடிவுகளை எட்டுவதற்குப் பதிலாக தமிழர் தரப்பை ஏமாற்றுவதற்கான முயற்சிகளிலேயே அரசாங்கத் தரப்பில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இறுதியில் பேச்சுவார்த்தைகளைப் புறந்தள்ளிய அரசாங்கம், ஒரு வருட காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அல்ல. அது தனிப்பட்ட முறையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எனவே அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற குண்டைத் தூக்கிப்போட்டு, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.
அரசியல் நட்பு ரீதியான ஓர் இணக்கப்பாட்டுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்ற நம்பிக்கையிலேயே இரண்டரை வருடகாலத்தைப் போக்கியிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளான எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விருப்பமற்றவராகவே இருந்தார். அதேபோன்று புதிய அரசியலமைப்பின் மூலம், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஊட்டிவந்தாரேயல்லாமல், அதற்குரிய அரசியல் ரீதியான அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது அவர் பிரயோகிக்கவே இல்லை.
எதிர்பார்த்தவாறு தீர்வு கிட்டவில்லை
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்தால், அது, எதேச்சதிகார ஆட்சி நடத்தி தமிழ் மக்களுக்குப் பேரிடர் விளைவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழியேற்படுத்திவிடும் என்று தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான அச்சத்தை எற்படுத்தியிருந்தார். எனவே, நல்லாட்சி அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும், 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு காணப்படும் எனவே, அதுவரையில் அமைதிகாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்துடன் நிபந்தனையுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணங்கிச் செயற்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்த ஆலோசனையை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள வில்லை. அரசியல் ரீதியான புரிந்துணர்வு, அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் கொண்டுள்ள அரசியல் உறவே போதும். அந்த உறவின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இராணுவம் கைப்பற்றி நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும். சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறப்படும். இரகசியமாக ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்படுவதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும், வடக்கில் தேவைக்கு அதிகமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு சிவில் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்படும், ஐநா மனித உரிமை பேரவையிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பது போன்ற நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய பிரச்சினைகளுக்குக்கூட தீர்வு காணப்படவில்லை.
அத்துடன் 2016 ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பம் நிறைவேறவில்லை. மாறாக 2016 ஆம் ஆண்டு முடிவடைந்து 2017 ஆம் ஆண்டும் முடிவடையும் தறுவாயிலும்கூட அரசியல் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கின்றது.
சர்வதேசத்தின் நிரலிலேயே நிகழ்வுகள்
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்பட்ட போதிலும் அந்த இணக்க அரசியலின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஐநாவுக்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின்படி போர்க்கால உரிமை மீறல் விடயங்களில் பொறுப்பு கூறுவதற்கும், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டி, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கும் நம்பிக்கையூட்டத்தக்க நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத் தரப்பிடம் விலைபோய்விட்டதோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்டு அதன் ஆதரவைப் பெற்று காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டதேயொழிய அந்த இராஜதந்திரத் தொடர்புகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதைக் காண முடியவில்லை.
முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், ஐநா மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அணுசரனை பெறப்பட்டிருந்த போதிலும், குறித்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டிய காரியங்கள் அரசாங்கத்தினால் செய்து முடிக்கப்படவில்லை.
சர்வதேசத்தின் ஆதரவு கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கின்றது என கூறப்பட்டபோதிலும், அந்த ஆதரவைப் பயன்படுத்தி, கூட்டமைப்பின் தலைமையினால் அரசாங்கத்திடம் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையிலேயே கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஐநா பிரேரணையில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்குவதில் கூட்டமைப்பினால் சர்வதேசத்தின் ஊடாக, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. மாறாக சர்வதேசத்தின் பிராந்திய அரசியல் ரீதியான நலன்களின் அடிப்படையில். ஐநா பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு, கூட்டமைப்பின் ஒப்புதலுடன் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தலைமை தவறிவிட்டது
ஏனைய பங்காளிக்கட்சிகளுடன் முற்கூட்டியே கலந்தாலோசிக்காமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தார். இந்த விடயம் அமெரிக்க தூதுவரின் கூற்றுக்கு ஊடாகவே வெளியில் கசிந்திருந்தது. அதுவரையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்குக்கூட இந்த விடயம் கூட்டமைப்பின் தலைமையினால் உரிய முறையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
மொத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் பல வழிகளிலும் தீவிரமாகச் செயற்படுவதற்குப் பதிலாக கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியையும் நலனையும் பேணுவதிலேயே கூட்டமைப்பின் தலைமை ஆர்வம் காட்டி வருகின்றது என குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனைக் கட்டமைத்துச் செயற்படுத்துவதிலும் கூட்டமைப்பின் தலைமை ஆர்வம் காட்டவில்லை என்றும் குறை கூறப்பட்டிருக்கின்றது. அந்தக் குறை இன்னும் தொடர்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சி பலத்தைக் கொண்டுள்ள வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை சீரான முறையில் கட்டமைத்துச் செயற்படுத்துவதிலும் கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணத்துக்கான முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை அரசியலுக்குள் பிரவேசிக்கச் செய்திருந்த போதிலும், அவருடைய தலைமையிலான வடமாகாண சபையை நிர்வாகத் திறன் மிக்கதோர் சபையாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முடியாமல் போயிருக்கின்றது. ஏனெனில் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரனும், அதேபோன்று வடமாகாணசபை உறுப்பினர்களும் அரசியலுக்குப் புதியவர்கள். முன் அனுபவமற்றவர்கள். இந்த நிலையில் அவர்கள் உரிய முறையில் அரசியலில் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது அந்த சபையின் செயற்பாடுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை
இத்தகைய ஒரு பின்னணியில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது பல்வேறு குறைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பங்காளிக்கட்சித் தலைவர்களுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முக்கியமான விடயங்களிலும்கூட கலந்தாலோசனை நடத்திச் செயற்படுவதில்லை. அவரும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகிய மூவருமே முக்கியமான முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள் என்று தொடர்ச்சியாகக் குறை கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழலில்தான் தமிழ் மக்களுக்கான அரசியலில் புதிய தலைமைக்கான நாட்டம் வெளிப்பட்டிருக்கின்றது. முதலில் கூட்டமைப்பின் தலைமை இன்னும் திறன் மிக்கதாகச் செயற்படுவதற்கு உதவியாக, தென்னாபிரிக்காவைப் பின்பற்றி, தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான பேச்சுக்களும் நடைபெற்றிருந்தன. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. அதன் பின்பே, தமிழ் மக்கள் பேரவை உருவாகியது.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அரசியல் சக்தியாகவே தமிழரசுக் கட்சியினரும் வேறு சிலரும் நோக்கினார்கள். அது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரானதோர் அரசியல் சக்தியாகப் பரிணமிக்கப் போகின்றது என்ற எண்ணப்பாட்டையும் தோற்றுவித்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையானது ஓர் அழுத்த சக்தியாகவும், வழிகாட்டல் அமைப்பாகவுமே செயற்படும் என்பதை அந்த பேரவையைச் சார்ந்தவர்கள் வலியுறுத்திக் கூறிய போதிலும், ஒரு சிலர் அரசியலில் பிரவேசிப்பதற்கானதோர் அரசியல் அமைப்பு என்ற பார்வையை முழுமையாக மாற்ற முடியவில்லை.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக  அதில் இணைந்திருப்பது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்த வெளியேறி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியுள்ள பொன்னம்பலம் கஜேந்திரகுமார், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பேரவையில் இணைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். பேரவையில் புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தனும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் தலைமை
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அல்லது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை செயற்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு ஒரு புதிய அரசியல் தலைமை தேவை என்ற உணர்வு இப்போது வெளித்தெரியும் வகையில் தோன்றியிருக்கின்றது.
புதிய தலைமையை உருவாக்குவது தொடர்பில் யாழ்ப்பாணம், மன்னார், ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆயினும் இறுதி முடிவு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை. புதிய தலைமைக்குத் தலைவராக முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கொண்டு வரவேண்டும் என்பதில் அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாட்;டம் இருப்பதாகத் தெரிகின்றது. ஆயினும் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவர் தயாராக இல்லை என்ற தகவலும் அண்மையில் வெளிப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையில் புதிய அமைப்பானது ஒரு குழுவாக – ஓர் அமைப்பாக மட்டுமே செயற்படும் என்ற தீர்மானத்தில் ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதாகத் தெரிகின்றது. தலைவர் என்று ஒருவர் இருக்கமாட்டார் என்றும், குழுவாகவே அந்த அமைப்பு செயற்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான யாப்பு வரைபு உள்ளிட்ட ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்த அமைப்பு உருவாக்கப்படுவது குறித்து ஊடகங்களுக்குத் தகவல்கள் வெளியிடுவதில்லை என்பதில் இறுக்கமான முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டும் என்பதில் பலருக்கும் ஆவலும் ஆர்வமும் இருந்த போதிலும், அதற்குத் தலைமை தாங்குவது யார் என்பதில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரந்து செல்பவர்களை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது பொதுவானதோர் அரசியல் நம்பிக்கையாகும். கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட அல்லது பிரிந்து சென்ற பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றார். ஆயினும் கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.
இது கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளிலும், அதன் போக்கிலும் அதிருப்தியடைந்துள்ளவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மக்களுடைய ஆதரவை இழந்துவிடுவார்கள் என்பதே பொதுவான அரசியல் அனுமானமாக உள்ளது,
இதனால்தான் வடமாகாண சபைத் தேர்தலில் அமோகமாக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனவசிய ரீதியில் தலைவராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் அவர் அதற்குத் தயாராக இருக்கவில்லை.
எனவே, தலைவராக ஒருவர் இல்லாமல் புதிய அரசியல் தலைமையொன்று எவ்வாறு உருவாகப் போகின்றது என்பது இப்போதைக்கு அரசியல் ரீதியாக சுவாரஸ்யமான விடயமாகவே காணப்படுகின்றது.
எது எப்படியாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர்கொண்டுள்ள இப்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கான செயற்திறன் மிக்கதோர் அரசியல் தலைமை அவசியம் – அதுவும் அவசரமாக அவசியம் என்ற உணர்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வலுவான அரசியல் வழிநடத்தலின்றி காணிக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவும் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்ற மக்கள் மத்தியிலும் ஏனையோர் மத்தியிலும் வலுவாகத் தென்படுவதைக் காண முடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More