Home இலங்கை மாதம் 10 லட்சம் செலவு செய்யும் சுவிஸ் குமாருக்கு 2 கோடி ரூபாய் பெரிதல்ல -5 மணித்தியாலங்கள் தொகுப்புரை:-

மாதம் 10 லட்சம் செலவு செய்யும் சுவிஸ் குமாருக்கு 2 கோடி ரூபாய் பெரிதல்ல -5 மணித்தியாலங்கள் தொகுப்புரை:-

by admin
 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
சுவிஸ் நாட்டில் மாதாந்தம் இலங்கை பெறுமதியில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியில் உழைப்பவர், வருடாந்திரம் இலங்கை வந்து 20 இலட்ச ரூபாய் செலவழிப்பவருக்கு 2 கோடி ரூபாய் பெரிய பெறுமதி இல்லை என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும்  எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில்   இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  கூடியது.
சட்டத்தரணிகள் முன்னிலை. 
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் தரப்பில்  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ,  மற்றும் சட்டத்தரணி லியகே  ஆகியோரும்,  5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கேட்டில் திருத்தம். 
அதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன,  முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.
அதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார். அதன் போது ,
 
எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள். 
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒன்பது பேரையும் சட்டமா அதிபர் எதிரிகளாக கண்டு அவர்களுக்கு எதிரான குற்ற சாட்டுக்களை முன்வைத்து , குற்ற பகிர்வு பத்திரத்தை மன்றின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விசேட மன்றிலே எதிரிகளுக்கு  குற்றபகிர்வு பத்திரம் தனித்தனியாக வாசித்து காட்டப்பட்டது. அதன் போது , கடத்த திட்டம் தீட்டியமை , கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை , படுகொலை செய்தமை , உடந்தை அளித்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்து தாம் நிரபராதிகள் என மன்றில் தெரிவித்தனர்.
மகளை காணவில்லை என தேடினார். 
அதனை தொடர்ந்து இந்த மன்றில் நடைபெற்ற சாட்சி பதிவுகளின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் மன்றில் சாட்சியம் அளிக்கையில் , தனது மகள் 13ஆம் திகதி பாடசாலையில் கூட்டு முறை என்பதனால் காலை 7 .15 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை நோக்கி புறப்பட்டதாகவும் , பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் , மாலை மாணவியை தேடி அலைந்த பின்னர் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது , அங்கு முறைப்பாட்டை ஏற்க முடியாது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறியதை அடுத்து தாம் இரவு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாட்சியம் அளித்ததாகவும் ,
மறுநாள் 14ஆம் திகதி காலை வேளையில் மகளை தேடி சென்ற போது பாழடைந்த வீடொன்றின் பின் பகுதியில் உள்ள பற்றைக்குள் மகளின் சடலத்தை முதலில் மகன் கண்டதாகவும் , மகன் சடலத்தை கண்டு கதறி அழுத சத்தத்தை கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மகள் சடலமாக கிடந்தார் என சாட்சியம் அளித்து இருந்தார்.
11ஆவது சந்தேக நபருக்கு பொது மன்னிப்பு. 
அதேபோன்று இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவருக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளித்தார்.
 
காதலுக்கு உதவி செய்யவே சென்றனர். 
அதன் போது இந்த குற்றவாளி கூண்டில் 6ஆவது எதிரியாக உள்ள பெரியாம்பி என அழைக்கபப்டும் சிவதேவன் துஷாந்த் , படுகொலை செய்யப்பட்ட மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அக்கால பகுதியில் துஷாந்தின் மோட்டார் சைக்கிளில் தான் பின்னால் இருந்து சென்று , மாணவி பாடசாலை செல்லும் நேரம் , வீடு திரும்பும் நேரங்களில் மாணவியின் பின்னால் செல்வதாகவும் , ஒரு நாள் மாணவி தனது சப்பாத்தினை கழட்டி துஷாந்தை நோக்கி வீசியதாகவும் ,
அதன் பின்னர் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வீட்டில் கள்ளு குடிக்க சென்ற வேளை தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோரிடம் வித்தியா துசாந்துக்கு சப்பத்தால் எறிந்த சம்பவத்தை கூறியதாகவும் , அப்போது , ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோர் 25ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் வித்தியாவை தூக்கி தருவதாக கூறினார்கள்.அதன் பிரகாரம் அவர்களுக்கு 23ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். எனவும் ,
மாணவியை கடந்த 3 நாளாக முயற்சி. 
வித்தியாவை கடத்துவதற்காக 11ஆம் திகதி காத்திருந்த வேளை அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் அன்றைய தினம் திட்டத்தை கைவிட்டோம் , மறுநாள் 12ஆம் திகதி காத்திருந்த போது வித்தியா பாடசாலைக்கு வரவில்லை. மறுநாள் 13ஆம் திகதி தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் ,  3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் மற்றும் மாப்பிள்ளை எனும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் மாணவிக்காக சின்ன ஆலடி எனும் பகுதியில் காத்திருந்தோம்.
அவ்வேளை மாணவி அந்த வீதி வழியாக தனியாக வந்து கொண்டிருந்த வேளை துஷாந்த் மாணவியின் துவிச்சக்கர வண்டியினை மறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினான். அதற்கு மாணவி சம்மதிக்காததால் , மாணவியின் கன்னத்தில் கைகளால் அடித்தான் அதன் போது மாணவி போட்டு இருந்த மூக்கு கண்ணாடி நிலத்தில் விழுந்தது. அதன் பின்னர்,  துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் மாணவியை பலவந்தமாக அருகில் இருந்த  பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்று மாறி,  மாறி  வன்புணர்ந்தார்கள். அவ்வேளை ஜெயக்குமார் மாணவியின் உள்ளாடையை எடுத்து வாய்க்குள் திணித்து தடி ஒன்றினால் வாய்க்குள் தள்ளினார்.
அதன் பின்னர் மாணவியை அங்கிருந்து தூக்கி சென்று அருகில் இருந்த பற்றைக்குள் உள்ள மரம் ஒன்றின் கீழ் வைத்து கால் ஒன்றினை இழுத்து மரத்தில் கட்டினார்கள். அதனோடு நான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன்.
நான் அவர்களுடன் சென்றது காதலுக்கு உதவி பண்ணும் நோக்குடனையே . இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என தெரிந்து இருந்தால் நான் அன்றைய தினம் அவர்களுடன் சென்று இருக்க மாட்டேன் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தான் இவர்களுடன் சென்றது துஷந்தின் காதலுக்கு உதவும் நோக்குடன் தான் ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.
வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். 
இவர்கள் மாணவியை வன்புணர்வு செய்ததை மாறி மாறி பெரிய தொடுதிரை கைத்தொலைபேசியில் (டச் போன்) புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அதனை தனது மச்சானுக்கு அனுப்ப வேண்டும் என துஷாந்த் சந்திரகாசனுக்கு கூறியதை தான் கேட்டார் என சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த குற்ற சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்காவது கூறினால் என்னை படுகொலை செய்வோம் என கூறியதனால் தான் , தான் யாருக்கும் முதலில் சொல்ல வில்லை என சாட்சியம் அளித்தார்.
 
சம்பவ தினத்தன்று கடமைக்கு தாமதமாக வந்தார். 
அதேபோன்று வேலணை பிரதேச சபை பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில் சம்பவ தினமான 13ஆம் திகதி தமது பிரதேச சபையில் சாரதியாக கடமையாற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் காலை 9.15 மணியளவில் தான் வேலைக்கு வந்தார். என சாட்சியம் அளித்துள்ளார்.
மாணவியின் தாயின் சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் பிரகாரம் மாணவி பாடசாலை செல்லும் நேரத்தில் அதாவது காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
அவ்வாறு எனில் இந்த வழக்கின் 6ஆவது எதிரி இந்த குற்றத்தினை செய்து விட்டு காலை 9.15 மணிக்கு கடமைக்கு சென்று இருக்கலாம். அதேபோன்று 5ஆம் எதிரி சம்பவ தினத்தன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் சாரத்தினை மடித்து கட்டியவாறு வேகமாக நடந்து சென்றதை பெண் ஒருவர் கண்ணுற்று உள்ளார் அவரும் இந்த மன்றில் சாட்சியம் அளித்தார்.
2ஆம் எதிரிக்கு எதிரான கண்கண்ட சாட்சியம் உண்டு. 
அதேபோல இரண்டாம் எதிரியான ஜெயக்குமாரை பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை செல்லும் நேரம் காலை 7.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுள்ளான்.அவனும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தான்.
அதேவேளை 2ஆம் எதிரியின் மனைவியின் அண்ணன் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை சம்பவ இடத்திற்கு அருகில் சம்பவ தினத்தன்று கண்டுள்ளார். அதேபோல் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்டவர்களை வாகனம் ஒன்றில் இருத்ததை கண்ணுற்று உள்ளார். அவரும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்துள்ளார்.
சாட்சியங்கள் முரண்படவில்லை.
இந்த வழக்கில் வழக்கு தொடுனர் தரப்பினால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் எவையும் முரண்பாடாக இருக்கவில்லை.
முதலாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராக வழக்கு தொடுனர் தரப்பினால் சாட்சியங்கள் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) தன்னை தனது தம்பியான மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் பஸ் நிலையம் எற்றி சென்றது தொடர்பில் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.
 
இரண்டாம் எதிரியின் மச்சான் மிரட்டப்படவில்லை. 
இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தனது மச்சான் தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி) சம்பவ இடத்திற்கு எதிராக கண்டதாக கூறியது குற்ற புலனாய்வு பிரிவினர் எனது மச்சனுடையதும் மனைவியினதும் வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதனால் தான் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறினார். அவ்வாறு தாம் மிரட்டப்பட்டதனை மச்சானும் மனைவியும் வவுனியா சிறைச்சாலையில் தன்னை கண்டு கூறியதாகவும் மன்றில் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.
இவ்வாறு மனைவி மச்சான் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் வேறு எங்காவது வாக்கு மூலத்தில் கூறினீரா என கேட்ட போது இல்லை என்றார். இந்த மன்றில் குற்ற புலனாய்வு பிரிவினர் சாட்சியம் அளிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் உமது சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் கேட்டாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதிலளித்ததுடன் , சட்டத்தரணியிடம் தான் கூறியதாகவும் , சட்டத்தரணி கேட்கவில்லை எனவும் கூறினார். அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
மூன்றாம் எதிரிக்கு வித்தியாவை தெரியாது. 
அண்ணாவை எப்படி தெரியும். ?
மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தனக்கு வித்தியாவை தெரியாது என சாட்சியம் அளித்தார். பின்னர் தான் தனது அண்ணாவான இந்திரகுமாரை சம்பவ தினத்தன்று பஸ் ஏற்றி விட சென்ற போது வித்தியாவின் அண்ணா கண்டதாக சாட்சியம் அளித்தார். அவருக்கு வித்தியாவை தெரியாது ஆனால் வித்தியாவின் அண்ணாவை தெரியும் என கூறியுள்ளார்.
 
நாலாம் எதிரி கடற்படை மீது குற்றம் சுமத்தினார். 
நாலாம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் இந்த குற்ற கடற்படை தான் செய்துள்ளது என இந்த மன்றில் சாட்சியம் அளித்தார். சாரதாம்பாள் மற்றும் தர்சினி எனும் பெண்களை தீவகத்தில் கடற்படை தான் படுகொலை செய்தது. அதேபோல இந்த கொலையையும் கடற்படை தான் செய்தது என தெரிவித்தார். அவர் இதற்கு முதல் எந்த வாக்கு மூலத்திலையோ நீதிமன்றிலையோ இந்த தகவலை தெரிவிக்க வில்லை. முதல் முதலாக நீதாய விளக்கத்தில் எதிரிகள் தரப்பு சாட்சியம் அளிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
ஐந்தாம் எதிரி தனக்கு எதிராக சாட்சியம் சொன்னவருக்கும் தனக்கும் முரண்பாடு  என்பது பொய் ?
ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் தான் சம்பவ தினத்தன்று கடற்தொழிலுக்கு சென்று விட்டதாகவும் , தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) காலை கண்டதாக சாட்சியம் அளித்த சாந்த ரூபிணி என்பவருக்கும் தனக்கும் முரண்பாடு இருந்ததலையே அவர் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தார் என தெரிவித்தார்.  அவரும் அதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தகவலை தெரிவிக்க வில்லை. எதிரி தரப்பு சாட்சி பதிவின் போதே தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
ஆறாம் எதிரி வித்தியாவை கண்டதே இல்லை என்பது பொய் ?
ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் தனக்கு வித்தியாவை தெரியாது ஆனால் அவரின் அண்ணாவை நன்கு தெரியும் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.
 
எட்டாம் எதிரி 12 ஆம் திகதி புங்குடுதீவில் நின்றார். 
எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தன்னை போலீசார் சித்திரவதை புரிந்து வீடியோ வாக்கு மூலம் எடுத்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்கேயும் அது தொடர்பில் குறிப்பிடவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்து வித்தியாவை பார்த்தார் என இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்தார்.
ஆனால் தான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாகவும் , அன்றைய தினம் நெட்கபே ஒன்றிக்கு சென்று மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியதாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.  ஆனால் இதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் 12ஆம் திகதி தான் கொழும்பில் நின்ற என்ற விடயத்தினை கூறவில்லை.
சுவிஸ் குமாருக்கு 2 கோடி பெரிய காசில்லை. 
ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 17ஆம் திகதி தன்னை பொதுமக்களிடம் இருந்து காப்பற்றி விட்டது.எனவும் பின்னர் தான் வீட்டுக்கு சென்றதாகவும் சாட்சியம் அளித்தார். அது பொய் ஏனெனில் வீ.ரி.தமிழ்மாறன் தனது சாட்சியத்தில் சுவிஸ் குமார் என்பவர் வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை எனவும் அவருடைய மனைவி மகாலக்சுமி தான் நின்றதாகவும் சாட்சியம் அளித்தார்.
அதேவேளை சிறைச்சாலையில் தான் இப்லான் என்வருடன் கதைத்த விடயத்தினை ஒப்புக்கொண்டு உள்ளார். இப்லான் தான் தன்னிடம் 25இலட்சம் பணம் கேட்டதாகவும் , தான் அதனை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அது தொடர்பில் ஏன் எங்கும் முறையிடவில்லை என கேட்டதற்கு , தானும் கைதி ,அவரும் கைதி , அதனால் சக கைதியை தான் மாட்டிவிட விரும்பவில்லை என தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் சமையலளராக வேலை செய்வதாகவும் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் பத்து இலட்சம் வரை சம்பாதிப்பதாகவும் , அங்கு மாதாந்தம் 5 தொடக்கம் 6 இலட்சமே செலவு எனவும் சாட்சியம் அளித்தார். அத்துடன் வருடத்திற்கு ஒரு தடவை இலங்கை வந்து போவதாகவும் , அதன் போது 20இலட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் சாட்சியம் அளித்தார்.
அவ்வாறான ஒருவருக்கு 2 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையில்லை எனவே சுவிஸ் குமார் இந்த வழக்கில் இருந்து தப்பி செல்ல இப்லான் ஊடாக குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்,
 
7 எதிரிகளுக்கு எதிராகவும் குற்றசாட்டு நிரூபணம். 
இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.
ஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான ,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான  பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் எதிரியான  மகாலிங்கம்  சசிதரன் , ஐந்தாம் எதிரியான     தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான  சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
 
நாளை எதிரி தரப்பு தொகுப்புரை. 
நாளைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் நாளைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.
ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை. 
வழக்கு தொடுனர் தரப்பில் , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை நிகழ்த்தி இருந்தார். அதன் போது வழக்கு தொடுனர் தரப்பினரால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிரிகள் மீதான குற்ற சாட்டை நிரூபிக்கும் முகமாக வாதங்களை முன்வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More