Home இலங்கை கர்ப்பிணி பெண் கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றை பிழையாக வழிநடத்த முற்படுவதாக குற்றச்சாட்டு

கர்ப்பிணி பெண் கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றை பிழையாக வழிநடத்த முற்படுவதாக குற்றச்சாட்டு

by admin


குளோபல் டதமிழ்ச் செய்தியாளர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் நீதிமன்றை தவறாக வழிநடத்த முற்படுவதாக பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ் மன்றில் தெரிவித்தார். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சகோதர்களான இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , படுகொலை நடந்த சமயத்தில் தாம் மருதனார் மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றதாக கூறி மன்றில் சி.சி.ரி.வி காணொளியை மன்றில் சமர்ப்பித்து இருந்தனர்.

குறித்த காணொளி மருதனார் மடத்தில் எடுக்கப்பட்டது இல்லை எனவும் , அவை ஊர்காவற்துறை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட காணொளி எனவும் , தவறான காணொளியை மன்றில் சமர்ப்பித்து , மன்றினை பிழையாக வழிநடத்த முயற்சிகின்றார்கள் என குற்றம் சாட்டினார்.

சந்தேக நபர்கள் மன்றினை பிழையாக வழிநடத்த முயற்சித்தால் அதற்கான பலன்களை அனுபவிப்பார்கள் என நீதவான் தெரிவித்தார். அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை காலமும் ஊர்காவற்துறை பொலிசாரினால் மேற்கொள்ளபப்ட்ட அனைத்து புலன்விசாரணை அறிக்கைகளையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் வரையில் இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.   அதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.  குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள்   அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More