Home இலங்கை மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் மறைந்தார்!

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் மறைந்தார்!

by admin

கோபு என்றும், எஸ்.எம்.ஜி. என்றும் நன்கு அறியப்பட்ட  தனித்துவமான பத்திரிகையாளராக விளங்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று காலமானார்.  ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபாலரத்தினம் 1950களில் வீரகேசரியில் தனது பத்திரிகைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1956களில் ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். அப்  பப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார்.

இவர் பத்திரிகை ஆசிரியராக செயற்பட்ட காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்றது. 1981இல் இலங்கை இராணுவத்தால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்டபோது கோபாலரத்தினம் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.

அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார். அந்தச் சிறை அனுபவங்கள் குறித்து இவர் எழுதிய ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை என்ற நூலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றினார். 2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக வழிநடத்தினார்.

 இலங்கையின் பத்திரிகைத்துறையில் பல சிறந்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இவர் உருவாக்கினார். தமிழ் தேசியம் சார்ந்து இவர் ஆற்றிய பணிகளுக்காக புலிகளின் தலைவர் பிபாகரன் 2006இல் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
கடந்த சில வருடங்களாக சுகவீனமான நிலையில் இருந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், இன்று காலமாகியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More