குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் தனிநாட்டை கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும் என தான் அவுஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சன் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சந்திப்பின் நிறைவில் சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
அவுஸ்திரேலியாவில் உள்ளூராட்சி அலகு, மாகாண அலகு மற்றும் சமஷ்டி முறைமையில் அரசாட்சி என அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தான் தமிழ் மக்கள் இங்கு கோருகின்றனர். அதற்கு ஒவ்வொரு அரசும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளன.
சமஷ்டியை வழங்க மறுப்பதற்கு அவர்களின் அச்சநிலையும் காரணமாக அமைகின்றது.
சமஷ்டி அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.
ஆனால் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்காதுவிடின்தான் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குச் செல்வர். தமிழ் மக்களின் சுயாட்சிக்கு இடையூறு விளைவிக்காதுவிடின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படாது என தூதுவரிடம் எடுத்து கூறி இருந்தேன் என மேலும் தெரிவித்தார்.
Add Comment