Home இந்தியா மறுத்தார்கள் – பின் ஏற்றார்கள் – மீண்டும் நிராகரித்தார்கள் – தேர்தல் ஜனநாயகம் ?

மறுத்தார்கள் – பின் ஏற்றார்கள் – மீண்டும் நிராகரித்தார்கள் – தேர்தல் ஜனநாயகம் ?

by admin


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 10 மணி நேர இடை வெளியில் மறுத்தார்கள் – பின் ஏற்றார்கள் மீண்டும் அதிகாரபூர்வமாக நிராகரித்தார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

எனினும் , விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்து இருந்தார்.

இதனைத்தொ டர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து சென்ற நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஓடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துசென்ற பொலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஓடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார். மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த ஓடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர் அவரை முன்மொழியவில்லை எனவும், வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை எனவும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து தேவையான முன்மொழிவோர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின்னரே விஷாலின் வேட்புமனு நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது எனவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More