Home இலங்கை இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

by admin

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து…

பகுதி -1

25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

ஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும், இசை உலகும் வியந்து போற்றிய இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும் நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று ஏங்கவைத்த இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்
நூலின் பின் அட்டையில்


‘லய ஞான குபேர பூபதி’ யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்வையும் பணியையும் சிறப்பிக்கும் இந்நூலில் அவரைப்பற்றி இதுநாள்வரை வெளிவந்துள்ள கட்டுரைகள், தகவல்கள், நறுக்குகளும் தரப்பட்டுள்ளன. என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இந்த நூல் உருவாக்கப்படவில்லை.
அதனைத் தெரியப்படுத்துவதற்காக,அந்தநூலில் இடம் பெறாத, தட்சணாமூர்த்தி பற்றி ஏற்கனவே வெளிவந்த பதிவுகளையும், அவர் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் திரிக்கபட்டுச் சொன்ன விடயங்களையும் இங்கு சுட்டிக் காட்டக் கடைமைப்பட்டுள்ளேன். வரலாறுகள் என்றைக்கும் பொய்யாகக் கூடாது அவற்றிற் புனைவுகளும் இருத்தல் கூடாது.

 நூலாசிரியர் –  இணுவையூர்பண்டிதர்கா.செ.நடராசா Source: http://noolaham.org/

இசைவல்லோர்
இசைவல்லார் குடும்பங்கள் பல இணுவையைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். தவில் வித்தகர் சடையரின் குடும்பம் இசைக்கலை வளர்த்த குடும்பம். இவரின் சகோதரர் இரத்தினம் சிறந்த நாதஸ்வர வித்தகர். இசையுடன் பாடல்களைப் பாடுவதிலும் மேடைக்கூத்தினை நடிப்பதிலும் வல்லவர்.

வித்தகர் பெரிய பழனியவர்களை ஈழத்தின் கலையுலகும் – இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால் – சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும். அவரது ஒவ்வொரு உறுப்பும் நாத ஓசைக்கு ஏற்ப அசைவதனையும் – நாத ஓசை அவரின் அசைவிற்கு ஏற்ப ஒலிப்பதனையும் கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப் பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து வந்து இணுவை ஊர்க்கும்,ஈழத்திற்கும் கலை விருந்து படைத்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர்களான திரு. ச. விஸ்வலிங்கம், திரு. பொ. சின்னப்பழனி, திரு. பொ. கந்தையா, திரு. நா. சின்னத்தம்பி, திரு இரத்தினம் ஆகியோருக்கும் கலையிற் பிதாமகராக இருந்தவர். இவர்கள் வழி வந்தவர்கள் இன்று ஈழத்தின் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். சடையரின் வழித் தோன்றல்களான தவில் வித்தகர் ச. சின்னத்துரை, ச. இராசகோபாலன், நாதஸ்வர வித்துவான் ச. கந்தசாமியும் ச. ஆறுமுகமும் தமது வித்தகத்திறத்தினால் வெளிநாடுகளிலும் புகழ் கொண்டவர்கள்.

ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர் திரு. ச. விஸ்வலிங்கம் அவர்களின் மக்களும் – மக்களின் வழி வந்தவர்களும் இன்று இசையுலகில் நன்கு மதிக்கப்படுகின்றனர். இவரின் முதல் மைந்தன் உருத்திராபதி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வித்தகர். பல்லவி வித்துவான். இசைபயிற்றுவதில் சிறந்த ஆசானாகத் திகழ்பவர். இவரின் முதல் மைந்தன் இராதாகிருஷ்ணன் சிறந்த வயலின் வித்துவானாகத் திகழ்கின்றார். ஈழ நாடெங்கணுமே போற்றப்படுகின்றார். திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகனே நாதஸ்வர வித்தகர் திரு. கோதண்டபாணி. இராமனின் கோதண்டம் போன்றது திரு கோதண்டபாணியின் நாதஸ்வரம். நாதஸ்வரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒரு மரபை உருவாக்கியவர். பல்லவி கீர்த்தனம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாதஸ்வர வித்தகர் வேதமுர்த்தியோடு நாதஸ்வரம் வாசித்துத் தன் வித்தகத் திறத்தினை நிலை நிறுத்தியவர். இவர் தமது இளம் வயதில் இயற்கை அன்னையின் அணைப்பிற் துயில் கொண்டு விட்டார். வித்தகர் ச.விஸ்வலிங்கத்தின் மூன்றாவது மைந்தன் திரு மாசிலாமணி பல்கலைப் புலவராகவும் கலைஞராகவும் திகழ்ந்தவர். மேடைக்கூத்து வளர்ச்சியிற் பங்கு கொண்டவர்களில் திரு. வி. மாசிலாமணியே சிறந்த கலைஞராகத் தன்னை உயர்த்திக்கொண்டவர். இவர் எல்லாவகை இசைக்கருவிகளையும் இசைக்கும் வித்தகத்திறன் கொண்டவர். நடிப்பிசைப் புலவராகத் திகழ்ந்த இவர் தன் வாழ்வினை இளம் வயதில் நீத்து இயற்கை எய்தியது கலையுலகின் இணுவையின் பேரிழப்பாகும். ஐந்தாம் மகன் லயஞானகுபேரபூபதி திரு. தட்சணாமூர்த்தி அவர்கள்.

ஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி:-

திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதத்தினைக் கேட்காதவர்கள் இல்லை என்னும்படி தன்னிகரற்றுத் திகழ்பவர். இவர் மணவினையின் தொடர்பால் அளவெட்டியில் வாழ்வினை மேற்கொண்டவர். 1960 இல் சென்னை தமிழ் இசைச்சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலத்துடன் தவில் வாசித்து நாகஸ்வரத்திற்குத் தவில் பக்கவாத்தியம் என்றிருந்த நிலையை மாற்றி, தவில் இசைக்கு நாகஸ்வரம் பக்கவாத்தியம் என்ற நிலையையும் உருவாக்கி உயர்வடைந்தார். இவரைப் பல முறை இந்தியா அழைத்தது.

தமிழகத்தின் தலை சிறந்த வித்துவான் சின்னமௌலானா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குளிக்கரைப் பிச்சையப்பா சேதுராமன் பொன்னுசாமி ஆகியோருடன் தலைசிறந்த திவ்ய சேத்திரங்களாகிய திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களிலும் பிரபலமான வைபவங்களிலும் தவில் வாசித்துப் பெரும் புகழீட்டியுள்ளார். மேடையில் அமர்ந்து மடிமேல் தவிலை வைத்த மாத்திரத்தே தவிலிலே ஒன்றிவிடும் அவர் கைகளிலே சரஸ்வதிதேவி களிநடம் புரிவதைக் காணலாம். அப்படியான ஒர் தவில் வாசிப்பாளன் வேறு எவராலுமே கிட்டமுடியாத ஒப்பற்ற கலைஞன் இத்தகைய மேதை தனது 43 வது வயதில் 13. 5. 75 இல் இறைவனடி சேர்ந்தார்.

திரு ச.வி அவர்களின் மகள் வயிற்று மக்களான இ. சுந்தரமூர்த்தி இ. புண்ணியமூர்த்தி சகோதரர்களும் இசையுலகில் இரட்டையராகப் புகழ் பரப்புகின்றனர். திரு கோதண்டபாணியின் மக்களும் ( கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி) இசையுலகில் புகழ் பரப்புகின்றனர்.

வித்தகர் பொ கந்தையாவின் மருமக்களான திரு கனகசபாபதி (கனகர்) திரு. இ. சண்முகம் ஆகியோர் தமது மாமனார் வழிவந்த வித்தகர்களாகத் திகழ்கின்றனர். திரு கந்தசாமியின் மகன் வயிற்று மக்களான திரு என் ஆர். சின்னராசா திரு என் ஆர். கோவிந்தசாமி ஆகிய இரு சகோதரர்களுள் முன்னவர் நாதஸ்வரத்திலும் பின்னவர் தவிலிலும் புலமை மிக்க வித்தகராவர். வெளிநாடுகளிலும் ஈழத்தின் புகழை நிலை நிறுத்தியவர். இவர்களின் தாய் மாமன்மாரான திருவாளர்கள் க. சண்முகம், க கணேசன் என்போர் கலைச் சிறப்புப் பெற்ற வித்தகர்கள். முன்னவர் மிருதங்க வித்தகராக இலங்கை வானொலியில் பணிபுரிகின்றார். பின்னவர் தன்னை நாச்சிமார் கோவிலுடன் இணைத்துக் கொண்டு நாச்சிமார் கோயில் கணேசன் என்று தவில் வித்தகராகப் புகழ் பரப்புகின்றார். இக்கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசை விழாக்களிற் பங்கு கொண்டு ஈழத்தின் புகழை உயர்த்திய பெருமக்களாவர். இவர்கள் அனைவரும் மரபால் ஒன்றிணைந்தவர்கள். இணுவையின் கலைக்குழந்தைகளாகப் பிறந்து ஈழமும் – இந்தியாவும் – மலேசியாவும் பாராட்டும் வித்தகர்களாக வளர்ந்துள்ளனர். ஈன்றபொழுதிலும் பெரிதுவந்து – சான்றோர் எனத் தம்மக்களை உலகு பாராட்ட அதனைக் கண்டு அவர்களை ஈன்று புறந்தந்த மண்ணவள் உளம் மகிழ்கின்றாள். அம்மண்ணிற் பிறந்த அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.

சிறப்பாக இணுவிலில் தங்கியிருந்தவர்கள்

இந்தியாவில் இருந்து பிரபலமான நாதஸ்வர தவில் வித்துவான்களை வருடாவருடம் அழைப்பித்து அவர்களுடைய இசைவிருந்தை அருந்தினர். இணுவிலில் தங்கியிருந்த நாதஸ்வர வித்துவான்களில் சக்கரபாணி, நாராயணசாமி, காஞ்சிபுரம் சுப்ரமணியம் சண்முகசுந்தரம் திருச்சடை முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி, சிதம்பரம் கதிர்வேல், சேகவ், சோமு, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாகூர் இராசு, அறந்தாங்கி மணியம், ஆண்டிக்கோவில் கறுப்பையா, ஆலங்குடி வேணு. பசுபதி முதலியோர் பிரதானமானவர்கள். தவில் வித்துவான்களில் மலைப்பெருமாள். பக்கிரிசாமி. திருநகரி நடேசன் பாளையங்கோட்டை வீராச்சாமி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருவாளப்புத்தூர் நடேசன் என்பவர்கள் பிரதானமானவர்கள்.

சங்கீதபூஷணம் திரு. இராமநாதன் அவர்கள்

சங்கீத பூஷணம் திரு ஏ.எஸ் இராமநாதன் அவர்கள் 1949 ஆம் ஆண்டு நாட்டிய நிகழ்விற்குப் பாடுவதற்காகவும், மிருதங்கம் வாசிப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மிருதங்க வாசிப்பினால் யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவையும் அன்பையும் பெற்று அந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணத்திலேயே தங்கி அங்கு தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தினை நிறுவி அந்த மன்றத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு முப்பத்தைந்து வருட காலங்கள் மிருதங்கத்தினை கற்பித்துள்ளார். யாழ்பாணம் இராமநாதன் அக்கடமியிலும் மிருதங்க விரிவுரையாளராகக் கடைமை புரிந்து ஏராளமான வாரிசுகளை உருவாக்கியுள்ளார். யாழ்பாணத்தில் மிருதங்கக் கலை நிலைகொள்வதற்கும் வளர்வதற்கும் திரு ஏ. எஸ். இராமநாதன் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.


03.03.2013 அன்று வெளிவந்த சங்கீதபூஷணம் திரு. ஏ. எஸ் இராமநாதன் அவர்களுடைய விவரணப்படத்தில் ‘1948 ஆம் ஆண்டு நண்பர் பரம் தில்லைராசா அவர்களின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்வதற்காக நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பிரபல தவில் வித்துவான் யாழ்ப்பாணம் திரு. தட்சணாமூர்த்திக்கும் எனக்கும் ஒரு போட்டி மாதிரி வைத்தார்கள். அந்த கச்சேரியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமானவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் மிக நல்ல நிலையில் தட்சணாமூர்த்தியும் வாசித்தார் நானும் வாசித்தேன். நான் திரு .தட்சணாமூர்த்தியை விஞ்ச ஆசைப்பட்டேன். திரு. தட்சணாமூர்த்தி என்னை விஞ்ச ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒன்றும் பண்ணமுடியவில்லை’. என்று திரு தட்சணாமூர்த்தியுடன் வாசித்த அனுபவத்தைத் திரு இராமநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

‘பொன்னிப் புனல் பாயும் தஞ்ஞை மாவட்டத்தைச் சேரந்த நாகஸ்வர, தவிற் கலைக் குடும்பங்கள் பல இலங்கை – யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்துவந்துள்ளன. இவ்விதமாக, காரைதீவு என்னும் பகுதியிற் குடியேறிய குடும்பம் ஒன்றில் விஸ்வலிங்கத் தவிற்காரர் என்பவர் இருந்து வந்தார்’. என்று ‘யாழ்ப்பாணம் தட்சணாமூரத்தி’ என்ற கட்டுரையிற் பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.


மேலும் ‘யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினால் அவரை யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அவருடைய முன்னோர்; எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூருக்கு அருகிலே உள்ள திருப்பயிற்றங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் அவருடைய தந்தையார் விஸ்வலிங்கம்பிள்ளை என்ற ஒரு பெரிய தவில் வித்துவான். யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் திருவிழாக்களுக்குத் தவில் வாசிக்கச் சென்று அங்கு குடியேறிய குடும்பங்களில் ஒன்று தான் தவில்கார விஸ்வலிங்கம் குடும்பம். சாப்பிடுவதற்கு வழியில்லை என்ற நிலைமையில் அவர் குடும்பம் இருந்தது. பனங்கிழங்கை மட்டும் தான் சாப்பிடுவார். அதைச்சாப்பிட வைத்துத் தனது தோளிலே தூக்கிக் கொண்டு யாழ்ப்பாணத்திலே ஒவ்வொரு ஊரிலும் நடக்கின்ற ஆலயத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று தமிழகத்திலிருந்து அங்கே வந்து மிகச் சிறப்பாக நாதஸ்வரம் தவில் வாசிக்கின்ற அத்தனை பேருடைய வாசிப்பையும் கேட்க வைப்பார். குறிப்பாகத் தவில். ஒரு பெரிய வித்துவான் தவில் வாசித்தால் உடனே வீட்டுக்கு வந்து இந்தச் சின்னக் குழந்தை தூங்கக் கூடாது. தூங்க விடமாட்டார். அவர் வாசித்ததை இவர் வாசிக்க வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு கவனத்தோடு எவ்வளவு ஞாபக சக்தியோடு அந்த வித்துவான் வாசித்து இருப்பதை கேட்டிருக்கலாம். அதன் காரணமாகத்தான் இவர் வாசிக்க வேண்டும் என்றொரு நிலை’ இவ்வாறு 2015 இல் நடைபெற்ற ‘பரிவாதினி சீரிஸ்’ என்ற நிகழ்வில் திரு பி.எம் சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (Privadini Music Series Youtube, 2015). இரண்டு இடங்களிலும் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விதமாக விஸ்வலிங்கம் அவர்களின் வதிவிடம் பற்றிக் கூறியுள்ளார். தட்சணாமூர்த்தியின் இளமைக்காலம் பற்றியும் சில கதைகள் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன?

இணுவிலைச் சேர்ந்த தவில் வித்துவான் திரு சங்கரப்பிள்ளைக்கும் அன்னமுத்து தம்பதிகளுக்கும் மகனாக 1880 ஆம் ஆண்டு இணுவிலிற் பிறந்தவரே தவில் வித்துவான் திரு விஸ்வலிங்கம் அவர்கள். இவருக்கு தந்தை சங்கரப்பிள்ளையே ஆரம்ப குருவாக இருந்து தவிலைக் கற்பித்துள்ளார். இதன் பின் ஈழத்தின் பிரபல தவில் வித்தவானாக இருந்த பெரிய பழனி அவர்களிடம் மிகச் சிறப்பான முறையிற் தவிற் கலையைக் கற்றுக்கொண்டவர். அது மட்டுமன்றிக் குருகுலக்கல்வி மூலம் நல்ல தமிழ், சமய அறிவினையும் பெற்றுக்கொண்டவர். திரு. பெரியபழனி அவர்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். ஒப்பந்த அடிப்படையில் நாதஸ்வர தவில் கலைஞர்களை ஈழத்திற்கு அழைத்தவர். விஸ்வலிங்கத்தின் பாட்டன் சுப்பர் என்பவரும் இணுவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

திரு. விஸ்வலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈழத்தின் மிகப் பிரபல்யமான தவில் வித்துவானாகவும் நல்ல வாழ்க்கை வளமுள்ளவராகவும் மிகவும் கண்டிப்பு நிறைந்தவராகவுமே வாழ்ந்துள்ளார். அவர் மாட்டு வண்டியிலே கச்சேரிக்குச் செல்லும்போது அவருக்கு முன்னும் பின்னும் மாட்டு வண்டியில் உதவிக்கும் ஆட்கள் செல்வார்கள். அவரது குடும்பம் மிகப் பெரியது. ஆயினும், ஒரு நாட்டாமை போன்று, வாழும் வரை கௌரவமாக வாழ்ந்த ஒரு கலைஞன். அவர் தனது வீட்டிற் பசு மாடுகளையும் வளரத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. விஸ்வலிங்கத்தின் தவில் திறமையைக் கேள்வியுற்று அந்த நாளில் அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்துக் அங்கு கச்சேரி செய்வித்துச் ‘சிங்கமுகச்சீலை’ போர்த்திக் கௌரவித்துள்ளனர். இந்தச் ‘சிங்கமுகச்சீலை’ படச்சட்டத்தினுட் போடப்பட்டு அவரது மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களாற் பேணப்பட்டது.

யாழ்ப்பாணத்திலே அன்று நிலவிய இசை வேளாளர்களின் குருகுலவாசக் கல்வியின் அமைப்புப் பற்றி, மாவை நா.சோ.உருத்திராபதி, மாவை சு.க.இராசா, மூளாய் வை.ஆறுமுகம், இணுவில் பெரிய பழனி, இணுவில் ச.விஸ்வலிங்கம், இணுவில் சின்னத்துரை ஆகியோர் கூறிய விபரங்களைத் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிலும்,’இசையும் மரபும்’;,’கலையும் மரபும்’ என்பவற்றிலும் த.சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதில்,’இசை வேளாளர்கள் சிறுவயதில் இருந்தே திண்னைப் பள்ளிக்கூடங்களிற் தமிழைக் கற்றனர். அவர்களுடைய பாடத்திட்டத்திற் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ் போன்ற சமய நூல்கள் இடம்பெற்றுள்ளன. தவில் நாதஸ்வரம் இதில் எவற்றைக் கற்றாலும் அவர்கள் வாய்ப்பாட்டையும் அவசியம் கற்கவேண்டும். மேலும் தமிழ் நாட்டில் இருந்து இளைஞர்கள் தவில் கற்பதற்தாக இணுவில் பெரியபழனி, இணுவில் சின்னத்துரை, இணுவில் விஸ்வலிங்கம் ஆகியோரிடம் வந்தனர். அப்போது இலங்கை இந்தியப் பிரயாணத்திற்குத் தடை இல்லை. அத்துடன் யாழ்ப்பாணத்து வாழ்க்கை வளமுடையதாக இருந்துள்ளது. சிட்சைக்கு வருகின்ற பிள்ளைகளுக்கு இலவச உணவு, உடை வழங்கப்படும். அவர்கள் தாளக்காரராக அல்லது ஒத்துக்காரராகப் பணிபுரிவதற்குச் சன்மானமும் வழங்கப்படும். ஆகவே தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு வித்துவான்களும் தவில் நாதஸ்வரம் மட்டும் பயின்றவர்களாக அல்லாமற் பல்கலை வல்லுனர்களாக இருந்துள்ளனர்’;. என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் ‘இணுவில் விஸ்வலிங்கத்தின் தவில் வாசிப்புத் திறமையைப் பாராட்டிச் சிங்கமுகச் சீலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்கமுகச் சீலை இவரின் குடும்பத்தவரால் விலை மதிக்க முடியாத சொத்தாகப் பாதுகாக்கப்படுகின்றது’ என்றும் யாழ்ப்பாணத்து இசை வேளாளர் என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்தமகன்; நாதஸ்வரவித்துவான். திரு. உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய வாத்தியங்கள் வாசிப்பதிலும் வல்லவர் இவற்றைக் கச்சேரிகளிலும் வாசித்துள்ளார். பாடக்கூடியவர். மிகச் சிறந்த இசை ஆசான். இவரின் மூத்த மகனே ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் இசை ஞான திலகம் அமரர் இராதாகிருஸ்ணன் அவர்கள்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன் நாதஸ்வர வித்துவான் கோதண்டபாணி இவர் வாழந்த காலத்தில் (1918 – 1968) ஈழத்திற்கு வருகை தந்திருந்த இந்தியக் கலைஞர்கள் அனைவருடனும் நாதஸ்வரம் வாசித்துத் தன் புகழை நிலை நாட்டியவர். இவர் பல்லவிகளையும், தமிழ்க் கீர்த்தனைகளையும் வாசிப்பதிற் தன்னிகரற்றுத் திகழ்ந்தவர். கோதண்டபாணியின் பொருளுணர்ந்த வாசிப்பிலே அவை பாகாய்க் கரைந்தோடும். அவருடைய நாதஸ்வரத்திலிருந்து எழும் ஓசையைப் போன்று வேறு எங்கும் நான் கேட்டதில்லை இத்தகைய சிறந்த வித்துவான் தனது இளம் வயதில் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்து விட்டது இசை உலகிற்குப் பெரும் இழப்பே. என எனது தந்தையார் கூறியுள்ளார். இவரின் புதல்வர்களே ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான்களாகிய கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.

விஸ்வலிங்கததின் மூன்றாவது மகன் மாசிலாமணி (1920 – 1959) இசையை வரன் முறையாகக் கற்றவர். அண்ணாவி ஏரம்புவிடம் நாட்டுக்கூத்தினையும் முறைப்படி பயின்றவர்.அற்புதமாகன குரல் வளத்தையுடைய (நாலரைக்கட்டை சுருதி) மாசிலாமணி அவர்கள் பாடியபடி நடிக்கவும், ஹார்மோனியம் வாசித்தபடி பாடவும் வல்லவர். ‘யாழ்ப்பாணத்து நாட்டுக்கூத்து, இசை, நாடகம், முதலியவற்றை ஆராயும்போது இணுவிலில் வாழ்ந்த விசுவலிங்கம் மாசிலாமணி என்ற பெரும் கலைஞரின் பங்களிப்பு தனித்துவமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.இக்காலப் பகுதியில் வாழ்க்கை உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட விடுதலை உந்தல், வாய்ப்பாட்டு வடிவில் மாசிலாமணி அவர்களிடத்திற் கிளர்ந்தெழுந்தது. உலக இசை மேதை பீத்தோவனிடம் காணப்பெற்ற வாழ்க்கையின் துன்பியலாகும் எதிர்மறைகளின் புலப்பாடு மாசிலாமணியிடத்தும் காணப்பட்டது. பன்முக ஆற்றல் கொண்டவராகவும் பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைக் கையாளும் திறமை மிக்க அற்புத ஆற்றல் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். தவில், மத்தளம், சுத்தமத்தளம், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, சாரங்கி, வயலின், ஹார்மோனியம் முகர்சிங் ஆகிய இசைக் கருவிகளை மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் இசைத்துக் காட்டியுள்ளார்’; எனத் திரு சபா ஜெயராசா அவர்கள் தனது ‘ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்’ என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வரவித்துவான் திரு சுந்தரமூர்த்தி அவர்களும்,ஈழத்தின் புகழ் பெற்ற தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்களும் திரு. விஸ்வலிங்கத்தின் மகளான திருமதி கௌரி ராஜூ அவர்களின் புதல்வர்களாவர்.

திரு விஸ்வலிங்கம் அவர்களின் எட்டாவது குழந்தையே 1933 இல் அவதரித்த எட்டாவது உலக அதிசயமான திரு தட்சணாமூர்த்தி அவர்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாகத் திரு விஸ்வலிங்கம் அவர்கள் ‘பெரியசன்னாசியார்’ என இணுவை மக்களாற் போற்றப்படும் அருட்திரு சுப்ரமணியசுவாமிகளிடம் அருளுறவு கொண்டவர். அவரின் அனுக்கத் தொண்டர்களுள் ஒருவராக விளங்கியவர். ‘1917 ஆம் ஆண்டு இறை நிலை எய்திய பெரியசன்னாசியாரின் சமாதிக் கட்டிடம் கட்டும் பணியினை இணுவை இசை வேளாளர் பரம்பரையில் வந்த தவில் வித்தகர் திரு விஸ்வலிஙகம் அவர்களே செய்தார்கள். இவர் பெரிய சன்னாசியாரிடம் கொண்ட அருளுறவே இசையுலகில் அவர் பரம்பரை புகழ் பூக்க ஏதுவாக அமைந்ததெனலாம்’. என ‘இணுவை அப்பர்’; என்ற நூலிற் பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இணுவிலின் இசைவரலாற்றில் ஈழத்தின் இசை வரலாற்றிற்; திரு. விஸ்வலிங்கம் அவர்களின் பங்களிப்பும், அவருடைய குடும்பத்தினருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதொரு இடத்தினை வகிக்கின்றது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

ஆகவே வாசகர்களே!!! கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உலகின் பல பாகங்களில் வெளியிடப்பட்ட தட்சணாமூர்த்தியின் ஆவணப்பதிவுகளிற் திரு பி.எம்.சுந்தரம் அவர்களும், வேறு பலரும் குறிப்பிடுவதைப்போல தவில் வித்தகர் விஸ்வலிங்கம் காரைதீவிற் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவரோ, தஞ்சாவூரைச் சேர்ந்தவரோ அல்லது திருப்பயிற்றங் குடியைச் சேர்ந்தவரோ,புகழுக்காக ஏங்கியவரோ அல்லர். அவரும் அவர் குடும்பதத்தவர்களும் வறுமையில் வாடியவர்களும் அல்லர். தட்சணாமூர்த்தியைப் பாடசாலைக்குச் சென்று படிப்பைக் குழப்பி இடையிற் கூட்டிக்கொண்டு வரக் கூடிய அளவுக்கு அவர் கல்வியறிவு அற்றவரும் அல்லர்என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

1. திரு விஸ்வலிங்கம் அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைவேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்.2. அவர் நல்ல வளமான வாழ்க்கை வசதியுடன் வாழ்ந்தவர்.
3. ஈழத்தைக் தாண்டியும் அவரின் தவில் வித்தகத் திறமை பேசப்பட்டுள்ளது.
4. அவர் வரன் முறையாகக் குரு குலக் கல்வி மூலம் தமிழ் சமய அறிவினையும் பெற்றுக் கொண்டவர்.
5. திரு விஸ்வலிங்கம் மட்டுமல்ல அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லோருமே இணுவிலிற் சிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களாகவே திகழ்ந்தனர். இன்றும் திகழ்கின்றனர். தற்போது ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களும் புகழோடு மேற் கிழம்புகின்றனர் உதாரணம் இணுவில் பஞ்சாபிகேசனின் மகன் விபுர்ணன் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே தவிற் கச்சேரி செய்ய ஆரம்பித்துத் தற்போது சிறந்த வித்துவானாக வளர்ந்து வருகின்றார் (வயது 20)

தொடரும்….

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More