Home இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்! நீதியை காக்கும் பொறுப்பு கருவுக்கு – ஹக்கீம்…

ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்! நீதியை காக்கும் பொறுப்பு கருவுக்கு – ஹக்கீம்…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2233319933572162/

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமாக்குவதற்காக பாராளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதனூடாகத்தான் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமர் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்தக் கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை, நீதி நியாயத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கு சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய உரிமைகளை பாதுகாக்கின்ற நபரென்ற அடிப்படையில் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென தாங்கள் எல்ரோலும் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது பெறுமதியான வாக்குகளின் மூலம் அரசியல் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார் என்னும் குற்றச்சாட்டை மாத்திரமே தாங்கள் அனைவரும் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமருடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதற்காக தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நாடளுமன்றத்தினை கூட்டாமல் இடைநிறுத்தி வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி செய்துள்ள செயல் மிக மோசமான ஜனநாயக மீறல் எனவும் அதனை தாம் வன்மையாக கண்டிக்கின்றோபம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே எமது உரிமைகளை பாதுகாக்கின்ற சபையின் தலைவர் என்ற அடிப்படையிலே இந்த நாட்டின் சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்திலே பாரிய தார்மீகப் பொறுப்பு மாத்திரமல்ல, நீதியின் கடமையும் உள்ளதென்பதை நாங்கள் அவருக்கு வலியுறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் தமது வற்புறுத்தல்களினால் ஜனாதிபதியுடன் பேசி, நாடாளுமன்றினை கூட்டுவதற்கான ஒப்புதலை தந்திருந்தாலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லையெனவும் அதனை மிகவிரைவில் செய்வதற்குத் தவறினால் நாடாளுமன்றின் சபாபீடத்திற்குள் நுழைவதற்கும் தவறமாட்டோம் என தாங்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தேவையான தலைகளை இன்றும் சேகரிக்க முடியவில்லை என்பதனால் கூடுதலான தலைகளுக்கு விலைபேசிக்கொண்டிருப்பதனால்தான் காலத்தை தாமதித்துக்கொண்டு போகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயற்பாடு சட்டவிரோதமானது – எம்.ஏ சுமந்திரன் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயற்பாடு சட்டவிரோதமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்தக் கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இவ்வாறு புதிய ஒரு பிரதமரை நியமித்தமையானது சட்டவிரோதமானது என குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்தமையானது சட்டவிரோதமானது என்பதனால் உடனடியாக கூட்ட வேண்டும் என்னும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்னும் தீர்மானம் எவையும் குறித்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More