Home இலங்கை “தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை”

“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை”

by admin


தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கைதிகளில் சிலரை விடுவிப்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்றும் மாறாக, நீதிக்கு உட்பட்டு, அவர்களைக் கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோதமானதும் நெறிமுறையற்ற வகையிலும் செயற்பட்டு, இலங்கையின் அரசமைப்பை நெருக்கடிக்குள் தள்ள, ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லையெனக் கூறியதோடு, நாடாளுமன்ற அதிகாரங்களை, சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் றோ உளவுப் பிரிவு, ஜனாதிபதியைப் படுகொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவிக்கும் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை, அவசர அவசரமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசியதிலிருந்தே புலனாகின்றதென்றும், ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இதேவேளை, நாட்டின் அடுத்த பிரதமராக நியமிப்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரியவுடன், கடந்த 8 மாதங்களாகப் பேசியதாக, ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவருக்கு, தான் அந்தப் பிரதமர் பதவியில் இருப்பது பிரச்சினையென்றால், தன்னிடம் பேசியிருக்கலாமெனக் கூறிய விக்கிரமசிங்க, இந்த 8 மாதக் காலப்பகுதியில் தான், தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பை மேற்கொள்ள வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே கோரிக்கை முன்வைத்துள்ளதென்றும் ஏனைய கட்சிகள், இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறிய அவர், புதிய அரசமைப்புக்கான பரிந்துரைகளில், கூட்டமைப்பினரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளதென்றும் கூறினார்.

இதேவேளை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் இந்த அதிகாரங்கள், அளவானதாகவும் பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும் பகிரப்படும் பட்சத்திலேயே, சமத்துவமானதும் சமாதானமானதுமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்றும் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More