Home இலங்கை ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும் :

ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும் :

by admin


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து  திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் அரசியல் சட்ட அத்துமீறல்

“இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலையாகும். இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனச்சாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கின்றது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி – அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மாற்றி, வருகின்ற 14ஆம் திகதி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – ஜனாதிபதியின் அரசியல் சட்ட அத்துமீறல்!

தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கின்றது.

முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை – மனித உரிமை மீறல்கள் – சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு ‘ஹிட்லர்’ போல் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டபோது இந்திய மத்திய அரசு அமைதி காத்தது.

ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தையும் தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது இந்திய மத்திய பா.ஜ.க. அரசு.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக பலாத்காரத்தையும், படுகொலையையும் கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டு கடுந்தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டிய மஹிந்த ராஜபக்ஷ, திட்டமிட்டு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்கியதையும் கண்டுகொள்ளாமல் இந்திய மத்திய பா.ஜ.க. அரசு கண்மூடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மௌனம் இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது.

தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, மைத்திரி – மஹிந்த சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது.
ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய மத்திய அரசுக்கு இருக்கின்றது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணர வேண்டும் என்றும், இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு மு.க. ஸ்டாலினின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More