Home இலங்கை மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு மீதான கட்டளை வெள்ளிக்கிழமை

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு மீதான கட்டளை வெள்ளிக்கிழமை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைகோரிய கோப்பாய் காவல்துறையினரின் மனு மீதான கட்டளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.இந்த மனு இன்று பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

‘கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கோப்பாய் காவல்துறையினர் ; நீதிமன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர். மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே? என்று மன்று கேள்வி எழுப்பிய நிலையில் எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அதனால் மனு மீதான கட்டளையை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வழங்குவதாக மன்று அறிவித்து மனுவை ஒத்திவைத்தது.இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் என்பதன் கீழ் மனுவைக் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக மாவீரர் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என காவல்துறையினர் மனுவில் கேட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More