Home இலங்கை தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 7 தசாப்தங்களாக தமிழ் மக்கள் காத்திருப்பு!

தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 7 தசாப்தங்களாக தமிழ் மக்கள் காத்திருப்பு!

by admin

தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து ஏழு தசாப்தங்களாக எமது மக்கள் காத்திருக்கின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதன்படி நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டுமென கோரி மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்குகூட நிறைவேற்று அதிகாரமே காரணம் என்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, இல்லாத ஒரு அதிகாரத்தை பயன்படுத்த முயற்சித்துள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்19இற்கு முன்னர் இருந்த அதிகாரத்தை, வழமைப்போல் கொண்டுசெல்ல முயற்சித்தபோதும், அரசியலமைப்பின் ஒவ்வொரு உறுப்புரிமையும் எழுத்தில் தெளிவாக உள்ளபோதும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார். கடந்த மாதத்தில் எதிர்கொண்ட விடயங்கள் மீண்டும் எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருக்க அதனை நீக்க வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 3 தசாப்தகாலமாக இரத்த ஆறு ஓடியதால் இழந்தவற்றை மீண்டும் திருப்பித்தர முடியாது என்றும் இந்நாட்டில் இரண்டாம் பட்ச மக்கள் என எவரும் இருக்க முடியாது என்றும் அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 7 தசாப்தங்களாக அவர்கள் காத்திருப்பதாகவும் பிரச்சினை தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ தயாராக உள்ளபோதும் சிலர் அதற்கு தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இந்நாட்டின் பிரச்சினை தொடருமாக இருந்தால் அவ்வாறு தடுப்பவர்களே காரணம் என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும்போது எமது கோரிக்கைகள் கணக்கிற்கொள்ளவேண்டும் என்றும் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More