Home இலங்கை திருமலை தென்னைமரவாடியில் பழமையான முருகன் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு!

திருமலை தென்னைமரவாடியில் பழமையான முருகன் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு!

by admin

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இப் பிரதேசத்தை ஆட்சி செய்த தென்னன் என்ற அரசன் காலத்தில் கந்தசாமி மலை என இம் மலை அழைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஆலயத்தை பௌத்த இடமாக்கும் முயற்சிகளை ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

1984ஆம் ஆண்டில் இப் பகுதி மக்கள்மீது இன வன் செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் இப் பகுதி மக்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதன்போது குறித்த மலைப் பகுதியில் காணப்பட்ட ஆலயமும் அழிக்கப்பட்டது.

மீண்டும் தமது ஊரில் மீள்குடியேறிய போது குறித்த பகுதியில் முருகன் சிலை மற்றும் வேல் என்பவற்றை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். அண்மையில் குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வருகைதந்தபோது கிராம மக்கள் இணைந்து அதனை எதிர்த்து தடுத்து நிறுத்தினர்.

தற்போது குறித்த மலையடிவாரத்தில் தொல்பொருள் திணைக்களம் தமது பெயர்ப்பலகையை நாட்டி கட்டடம் ஒன்றை அமைத்து வருகின்றது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலய தலத்தை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து பௌத்த தலமாக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனை உரிய தரப்பினர் கருத்திற்கொண்டு தமது மலையையும் தமது முருகன் ஆலயத்தையும் மீட்டுத்தந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்தி தர வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவர் கந்தையா பரமநாதன் இது குறித்து கூறுகையில், 1952இல் குறித்த கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த தாம் தமது கிராமத்தில் இதுவரையில் பௌத்த மத குரு ஒருவரோ, பௌத்த தலமோ இருக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

அத்துடன் குறித்த ஆலயத்தோடு இணைந்த தமது காணிகளுக்கு 1803 ஆம் ஆண்டு பிரித்தானியர் காலத்து அரசினால் உறுதி ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் குறித்த பகுதி பெரும்பான்மை இனத்தவரால் சுவீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் பலவும் அபகரிக்கப்பட்டு இன்று போர் முடிந்து மீள்குடியேற்றம் வந்த நிலையிலும் நிலங்களை மீட்க முடியாது திண்டாடுவதாகவும் தென்னைமரவாடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது இந்த வரலாற்றுத் தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தென்னைமரவாடி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More