Home இலங்கை கோப்பாய் காவல் நிலையத்தின் கடுமையான சித்திரவதைகளும் இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளும்..

கோப்பாய் காவல் நிலையத்தின் கடுமையான சித்திரவதைகளும் இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளும்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கோப்பாய் காவல் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இரு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிவானின் முன்னிலையில் முற்படுத்தாது, 72 மணி நேரம் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அந்நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை காவல்துறையினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதிஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தியுள்ளனர்.

அதன் போதே குறித்த இரு இளைஞர்களும் சட்டவிரோதமான முறையில் தாம் 72 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளைஞர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதன் போது , தம்மை திருட்டு வழக்குடன் தொடர்பு என கூறி கடந்த திங்கட்கிழமை  கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள். அதனால் தனது இரண்டு கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. காவல்துறையினரின்; சித்திரவதையினை தாங்க முடியாது புதன் கிழமை இரவு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே வியாழக்கிழமை காவல்துறையினர் தம்மை நீதிமன்றில் முற்படுத்தினார்கள் எனவும் இல்லையெனில் தொடர்ந்தும் தம்மை தடுத்து வைத்து சித்திரவதை புரிந்திருப்பார்கள் என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிவானிடம் முறையிட்டார்.

அதேவேளை மற்றைய நபரும் தானும் சட்டவிரோதமான முறையில் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாக நீதிவானிடம் முறையிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த இரு நபர்களையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியதனால் மன்றினால் குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் குறித்த சந்தேக நபரை கைது செய்த கோப்பாய் காவல்துறையினர் அந்நபரை மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சித்திரவதை தாங்க முடியாத குறித்த நபர் தனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். அந்நிலையில் குறித்த நபரை காப்பற்றி வைத்திய சாலைக்கு காவல்துறையினர் கொண்டு சென்று சிகிச்சை வழங்கினார்கள்.

சிகிச்சையின் பின்னர் குறித்த நபரை காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்திய போது கழுத்து மற்றும் கைகளில் காயங்களுக்கு கட்டு போட்டு இருந்தமை தொடர்பில் நீதிவான் கேள்வி எழுப்பிய போது , குறித்த நபர் தனக்கு எதிராக காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் நீதிவானிடம் முறையிட்டனர்.

அதனை அடுத்து குறித்த நபரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்த நீதிவான் காவல்துறையினரை கடுமையாக எச்சரித்து இருந்தார். அந்நிலையில் மீண்டும் இளைஞர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரினால்; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் யாழ்.மாவட்ட காவல் நிலையங்களில் காவல்துறையினரினால் சித்திரவதைக்கு உள்ளாகியதாக 31 முறைப்பாடுகளும் , சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமை தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More