Home இலங்கை திருமலையில் விசேட அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது….

திருமலையில் விசேட அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது….

by admin

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி  மாலை, திருமலை நிலாவெளி கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நண்பர்களான, 21 வயது நிரம்பிய மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமசந்திரா, லோஹிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றிய இந்த  மாணவர்கள் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தனர்.

அக்காலப்பகுதியில், விசேட அதிரடிப்படையின்கட்டுப்பாட்டில் இருந்த திருமலையில் இடம்பெற்ற இந்தக் கொலைகள், இனம்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டது எனவும், புலிகயால் மேற்கொள்ளப்பட்டது எனவும் அரச ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், விசேட அதிரடிப்படையினரே இவர்களை சுட்டுக்கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.  இதன்பின், அதிரடிப்படையினரை தாக்க முயன்ற வேளையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என மஹிந்த அரசாங்கம், வியாக்கியானம் அளித்திருந்தது.

இவ்வாறு மிலேச்சத்தனமாக, மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக பல மனித நேய அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இச்சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 2013ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக வலுவான சாட்சிகள் இல்லையென வழமைபோன்று விடுவிக்கப்பட்டனர்.

பிள்ளைகளை பறிகொடுத்து நீதியும் கிடைக்காத நிலையில், அந்த ஐந்து மாணவர்களினது பெற்றோரும் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர். எனினும் கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் துணையுடன், நீதிக்காக தொடர்ந்து போராடி வரும்    நிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் தற்போதும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை அவர்கள் கொல்லப்பட்ட பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள்! குளோபல் தமிழ் செய்தியாளர்:-

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127447/language/en-US/——.aspx

திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

Bookmark and Share
திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

 

தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது.

இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

2006 சனவரி 2 ஆம் நாள்  திருகோணமலை,  கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்.

இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 யூலை 5 அன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அப்பாவி மாணவர்கள் மீதான இப் படுகொலைகள் இடம்பெற்று ஒரு தசாப்தத்தை கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in: HomeSrilankan News

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99823/language/ta-IN/—-.aspx

திருமலை ஐந்து மாணவர்கள் படுகொலை வழக்கு ஒத்தி வைப்பு:-

Bookmark and Share
திருமலை ஐந்து மாணவர்கள் படுகொலை வழக்கு ஒத்தி வைப்பு:-

 

2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்ட 12 அதிரடிப்படையினரும் இன்று (03.12.13) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எல். அஸ்ஹர் முன்னிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிவரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் வைத்து 5 மாணவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டே 12 படையினர்; மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் சார்பில் சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய சுபாசினி தனது சாட்சியத்தினை முன்வைத்தார்.

கொலை செய்யப்பட்ட மாணவரில் ஒருவர் தனது அக்காவின் மகன் எனக் கூறி தனது சாட்சிகளை முன்வைத்ததுடன் தான் உறவினர் என்று மட்டுமல்லாது பதில் நீதவானாகவும் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு திட்டமிட்ட கொலைதான் நடந்தது எனவே சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்க வேண்டும் எனவும் கூறினர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93680/language/ta-IN/article.aspx

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

Bookmark and Share
திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

 

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற் கரையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளிலும் மாணவர் படுகொலை விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More