Home இலங்கை சிறுமியை வன்புணர்ந்தபின், தலைமறைவாகியவர், மூன்றரை வருடங்களின் பின்  கைது…

சிறுமியை வன்புணர்ந்தபின், தலைமறைவாகியவர், மூன்றரை வருடங்களின் பின்  கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர் தலைமறைவாகி இருந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளின் பின் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி வழங்கப்படும் எனவும் அதுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்

சாவகச்சேரியில் கடந்த 2007ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருவரையும் எதிரியாக கண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் நிறைவில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் எதிரிகள் இருவரும் குற்றவாளிகளாக நீதிமன்றால் காணப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வழங்கப்படும் கால பகுதியில் இரண்டாவது எதிரி தலைமறைவாகியதால் அவரைக் கைது செய்ய காவற்துறையினருக்கு  மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரி கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டார். அவரை இன்று வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைத்திருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் குற்றவாளி இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு தண்டனைத் தீர்ப்பு வாசித்துக் காண்பிக்கப்படவேண்டும். அதன் பின்னரே தண்டனைக் காலம் ஆரம்பிக்கப்படும். தற்போது மேல் நீதிமன்ற பருவகால விடுமுறை நடைமுறையில் உள்ளதால் குற்றவாளியை எதிர்வரும் 9ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More