Home இலங்கை வடக்கு முதலமைச்சர் சிறந்தவர்களை அமைச்சர்களாக்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் சிறந்தவர்களை அமைச்சர்களாக்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறந்ததாக தேர்வு செய்ய தவறி விட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த வருடத்திற்காக எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலை திட்டம் இன்னமும் முடிக்கப்படாத நிலையில் உள்ளது. இந்த செயற்பாடானது எனது நன்மதிப்பை கெடுக்கும் வேலையாகவே நான் கருதுகிறேன்.

ஏனைய உறுப்பினர்களுடைய வேலை திட்டங்கள் அனைத்தும் முடிக்கபட்டு உள்ள நிலையில் என்னுடைய வேலை திட்டம் மாத்திரம் முடிக்க ப்படவில்லை. அதற்கான காரணம் என்ன எனது தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் விசாரித்து அறிய வேண்டும். அமைச்சர்களால் அதிகாரிகளை கொண்டு வேலை வாங்க முடியவில்லை என்றால் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்ய வில்லை.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் முகங்களை பார்க்காது சேவை செய்பவர்களை பார்த்து வாக்களியுங்கள் என மக்களிடம் கோரியுள்ள முதலமைச்சர் அமைச்சர்களை தேர்வு செய்யும் போது சிறந்தவர்களை தேர்வு செய்ய தவறிவிட்டார் என்றே நான் கருதுகிறேன். என தெரிவித்தார்.

உறுப்பினரின் குற்ற சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் , உறுப்பினர்களின் ஒதுக்கீட்டிற்கான வேலை திட்டங்கள் தொடர்பில் கடந்த 2 மாதங்களில் 3 தடவைகள் அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறோம். அதன் போது அனைத்து வேலைத்திட்டங்களும் முடிக்கபப்ட்டு விட்டதாகவே தெரிவித்தனர்.

உறுப்பினரின் குற்ற சாட்டு தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரித்து அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அவ்வேளை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை எனவும் , பயனாளிகள் கேட்கும் பொருளை கொள்வனவு செய்து கொடுக்காது , தாம் சொல்லும் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகவும் பயனாளிகள் தன்னிடம் முறையிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More