Home இலங்கை மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் – பொ.ஐங்கரநேசன்

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் – பொ.ஐங்கரநேசன்

by admin

பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.  யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவுப்பகுதியில் கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இப்படி, ஓசோன்படையில் ஓட்டை, காடுகள் அழிப்பு, காலநிலையில் மாற்றம் என்று பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் பூமி இன்று முகங்கொடுத்து வருகிறது. இந்தச் சூழற் பிரச்சினைகளுக்கெல்லாம் மனிதர்களது பேராசைகொண்ட நுகர்வுப் பெருவெறியே மூலகாரணம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்; இன்ரறக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (10.01.2018); பூமாதேவி என்ற பேருயிரி என்ற தலைப்பில் பொ.ஐங்கரநேசன் மாணவர் மத்தியில் உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரு மாடு தனக்குத் தேவையான புல்லை மாத்திரமே உண்கிறது. தன் வயிற்றுப்பசி அடங்கிய பின்னர் ஒருவாய் புல்லைத்தன்னும் அது மேலதிகமாக மேய்வது கிடையாது. அனால், ஒரு சிங்கம் தனக்கு வேண்டிய உணவின் அளவைவிட மிகப் பன்மடங்கு எடைகொண்ட விலங்கையே வேட்டையாடுகிறது. இந்த வேட்டைக் குணாம்சம்தான் மனிதர்களிடமும் உள்ளது.

கண்முன்னே தென்பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடிய ஆதி மனிதனில் இருந்தே இன்றைய மனிதர்கள் பரிணாமித்தவர்கள். இதனால் ஆதி வேட்டைக்குணாம்சங்கள் மனிதர்களது பாரம்பரியத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால்தான் இன்றைய மனிதர்கள் இயற்கை வளங்கள் அத்தனையையும் தமக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதிச் சுரண்டிவருகிறார்கள். தம் வாழ்நாளுக்கு மாத்திரம் அல்லாமல், தம் சந்ததிகளுக்கும் சொத்துச் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறார்கள்.


மனிதர்கள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். மற்றைய விலங்களிடம் இல்லாத பல சிறப்பியல்புகள் மனிதர்களிடம் இருக்கின்றன. இதனால், ஏனைய உயிர்கள் அனைத்தையும்விடத் தாமே உயர்ந்தவர்கள் என்ற அகங்காரம் மனிதர்களிடம் இருக்கிறது. ஆனால், பூமித்தாயின் பார்வையில் புல்லும், பூண்டும், மண்புழுக்களும், மனிதர்களும் ஒன்றே. எல்லா உயிரினங்களையும் ஏற்றத்தாழ்வு இன்றி ஒரே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றது அவற்றுக்கும் சேர்த்தே வளங்களை படைத்திருக்கிறது.


மனிதர்கள் நுகர்வு வெறியைக் குறைத்தால் மாத்திரமே பூமியும் ஏனைய உயிர்களும் காப்பாற்றப்படும். இதற்கான முயற்சியில் முன்னுதாரணர்களாக மாணவர்கள் இருக்கவேண்டும். ஒரு பொருளை வாங்கும்போது அது கட்டாயம் தேவைதானா என்று பலமுறை சிந்தியுங்கள். வாங்கிய பின்னர், அதன் ஆயுட்காலம் முடியும்வரை அதனை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எறிவதற்கு முன்னர் இன்னமும் கொஞ்சநாட்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். பயன் படுத்த இயலாத நிலையில் அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு இன்றே இந்த பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். இயற்கை அன்னை கட்டாயம் உங்களை ஆசிர்வதிப்பாள் என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More