Home உலகம் பாகிஸ்தான் சிறுமியின் பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான எதிர்வினை – தன்மகளை மடியில் இருத்தி, தாய்மையுடன் செய்திவாசித்த கிரண் நாஸ்….

பாகிஸ்தான் சிறுமியின் பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான எதிர்வினை – தன்மகளை மடியில் இருத்தி, தாய்மையுடன் செய்திவாசித்த கிரண் நாஸ்….

by admin

ஒவ்வொரு முறையும் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார செய்தியை கேட்கும்போதும், பார்க்கும் போதும், வாசிக்கும்போது மகள்களைப் பெற்ற தாய்மார்கள் அனைவரின் மனங்கள் அழாமல் விடுவதில்லை. அந்த அழுகை மவுனத்தில் முடிந்துபோய்விடுகிறது..

ஆனால், பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்திருக்கிறது. பத்திரிகையாளராக பணி புரியும் அந்தத் தாய் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்தார். 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சமா தொலைக்காட்சியைச் சேர்ந்த கிரண் நாஸ், சம்பவ தினம், அவர் செய்தியை வாசிக்கத் தொடங்கியபோது, “இன்று, நான் வெறும் கிரண் நாஸ் ஆக உங்கள் முன் தோன்றவில்லை. நான் ஒரு தாய். 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது” என்று கூறினார். இந்தச் செய்தியைப் பார்த்த பலரையும் நெகிழச்செய்திருக்கிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த ஜனவரி 5-ம் திகதி குரான் வகுப்புக்காக சென்ற பின் அவர் வீடு திரும்பவில்லை. கடத்தப்பட்ட அவர், இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் தொடராக கொலைசெய்யும் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீதி கேட்டு மக்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். நிலைமையை கட்டப்படுத்த காவற்துறை, தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. காவற்துறையின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, “போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்” என வேதனை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்துள்ளது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்கும் பொலீஸாருக்கு, ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்ட குழந்தைகளில், 11-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 4,139 சம்பவங்கள் நடந்துள்ளது என்ற முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More