Home இலங்கை தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

by admin

 

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுவைக்க அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராஜா அதனைப் பெற்றுக்கொண்டார்.

 

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் – 2018
தமிழ்த் தேசியப் பேரவையானது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமவுரிமை இயக்கம், நம்பிகள் நல் வாழ்வுக் கழகம், தமிழர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புக்களின் கூட்டாக இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலை இலங்கையின் வடக்கு கிழக்கில் சந்திக்கின்றது.
“தமிழ் மக்கள் பேரவை”யினால் 10.04.2016 ஆந் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த் தேசியப் பேரவை) இதயசுத்தியுடன் செயற்படும்.
இலங்கையில் தற்போதுள்ள அதிகாரப்பரவலாக்கலின் கீழ் உள்;ராட்சி சபைகளின் ஊடாகவோ மாகாணசபைகளின் ஊடாகவோ மக்களுக்கு சுயாதீனமான சேவைகளை முழுமையாக வழங்க முடியாது என்றாலும் இருக்கின்ற அதிகாரங் களினுடாகவேனும்  எமது தமிழ் தேசத்தின் உட்கட்டமைப்புக்களை ஊழலற்ற நேர்மையான வினைத்திறனுடனான நிர்வாகத்தின் மூலம் கட்டியெழுப்புவதற்காக அதிகூடிய முயற்சிகளை எடுப்பதற்கு எமது வேட்பாளர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
கடந்தகாலத்தில் குறித்த சபைகளை கைப்பற்றி வைத்திருந்த கட்சிகள் தங்களது ஊழல் மோசடி நடவடிக்கைகளினாலும் அர்ப்பணிப்பற்ற, மக்கள் நலன் கருதாத இணக்க அரசியல்களினாலும் கட்சி நலன்சார் அரசியல்களினாலும் மக்களுக்கு தேவையான சேவைகளை சரியான முறையில் வழங்கவில்லை என்ற மக்கள் ஆதங்கத்தையும்; நாம் கருத்தில் கொண்டுள்ளோம்.
எமது முன்மொழிவுகள் “தூய கரங்கள் – தூய நகரங்கள்  மற்றும் தூய கிராமங்கள்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தியதாக அமைந்துள்ளன. பொருத்தமான நடவடிக்கைகளின் மூலம் உலகின் முன்னேற்றமடைந்த நகரங்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டும் மத்திய மாகாண அரசுகளின் ஒத்துழைப்புடனும் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளின் உதவியுடனும் எம்தேசத்தின் அடிப்படை உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தவும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கும் இந்த முன்மொழிவுகள் ஊடாக உறுதி கூறி மக்களின் ஆணையைக் கோரி நிற்கின்றோம்.
‘தூய கரங்கள்; தூய நகரம்;’
‘Clean Hands & Clean City’
தமிழ் தேசிய விடுதலை உணர்வோடு துடிப்புடன் செயற்படும் ஊழலற்ற நேர்மையான புதிய இளைஞர்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் சபைகளில்; கீழ்வரும் பணிகளை சாதி, மத பேதமின்றி ஆற்றுவதற்கு எமது கட்சிக்கு ஓர் சந்தர்ப்பத்தை தாருங்கள்.
நிர்வாகமும் நிதிகையாளுகையும்
● மக்களின் பங்களிப்புடனும் விருப்புடனும் சகல அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்படும்
● ஒவ்வொரு சபையிலும் சிவில் பிரதிநிதிகள் துறைசார் வல்லுனர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று நியமிமிக்கப்பட்டு அவ்வப்போது ஆலோசனைகள் பெறப்பட்டு  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்
● இலஞ்ச ஊழல் அற்ற நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.
● பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றோடு செயற்படல்.
● சபைகளின் வருமானங்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிதிகள் உரிய முறையில் திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்படும்.
● நிதிகளை வீண்விரயம் செய்தலோ அல்லது பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்புதலோ இடம்பெறமாட்டாது.
● பதவிகளுக்கு சண்டையிடாத கட்டுக்கோப்பான நிர்வாகத்தை உருவாக்கல்.
● அங்கத்தவர்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்பாகவும் மக்களால் எழுப்பப்படும் குற்றசாட்டுக்கள் உடனுக்குடன் வெளிப்படையாக விசாரிக்கப்படும்.
● வருடம் முழுவதும் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய மக்கள் குறைகேள் நிலையம் ஒன்று நவீன தொடர்பாடல்
  வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.
● மக்களின் முறைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் என்பன பெறப்பட்டு அதற்குரிய தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொடுக்கப்படும்.
● சபைகளின் செயற்பாடுகள் மிக மிக இலகுவாக்கப்பட்டு துரித கதியில்; சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படும்.
● சபைகள் அனைத்திலும் உள்ள உள்ளக வளங்கள் அதிகரிக்கப்படும்.  கழிவ கற்றல் தீயணைப்பு போன்ற சகல துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சீருடைகள் கட்டாயமாக்கப்படும். உரிய பாதுகாப்பு கருவிகள் சுகாதாரம் பேண் கருவிகள் வழங்கப்படும். தற்போதுள்ள திறந்த கழிவகற்கும்  வாகனங்கள் அகற்றப்பட்டு நவீன வாகனங்கள் இணைக்கப்படும்.
● வரிக்கொள்கை சிறப்பாக மீளமைக்கப்படும் சுற்றுலாமையங்கள் மற்றும் இதர விடயங்களின் ஊடாக வருமானத்தை  பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்படும்
●   சபைகளின் ஆதனங்கள் முறையாக பராமரிக்கப்படும்
●  பொதுமக்கள் சபையின் சேவைகள் தொடர்பில் இணையவழியில் விண்ணப்பிக்கவும் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கவும் வழி செய்யப்படும்
● சபைகளில் காணப்படும் மக்கள் சேவை வழங்குவதற்கான காலம் கடந்த நிர்வாகப் பொறிமுறைகள் களையப்பட்டு புதிய முறைகள் உட்புகுத்தப்படும்
● உள்;ராட்சிகளில் மேற்குறித்த நடவடிக்கைகளினை செய்வதற்கு தடையாக உள்ள காரணிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான உபசட்டங்களை நிறைவேற்றி  அமுல்படுத்த ஆவன செய்யப்படும்.
●  சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டு அதன் ஊடாக கிராம மட்ட தலைமைத்துவம் உருவாக்கப்படுவதுடன் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.
●   இரட்டை நகர உடன்படிக்கைகள் மூலம் கலை, கலாச்சார, பொருளாதார உறவுகள் மேம்படுத்தப்படுவதுடன் தொழில்நுட்ப உதவிகள் பெறப்படும்.
●  ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்த அபிவிருத்தி இலக்கை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுத்து செயற்படுத்தப்படும்.
குடியிருப்பாளருக்கான சேவைகள்
கழிவகற்றல்
● சபை ஊழியர்களின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக அனைத்து நாட்களிலும் திண்ம கழிவகற்றல் நடைமுறையை அமுல்படுத்தல்.
●  வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் எமக்கு பொருத்தமான திண்ம கழிவகற்றல் முறையொன்றை இனங்கண்டு நடைமுறைப்படுத்தப்படும்.
●  நீர் மற்றும் மலசல கழிவுகளை அகற்ற சீரான நடைமுறை ஒன்று கொண்டு வரப்படும்.
●  சகல இடங்களிலும்  கழிவுகள் சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் பொருத்தமான முறையில் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும்
● தவறான முறையில் கழிவகற்றம் செய்யும் விடயத்தில் தடுப்பதற்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும்
●       தெரு முனைகளில், வீதிகளில் குப்பைகளை வீசியெறியப்படுவதை தடுக்கும் விதமாக பொருத்தமான
      நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு கமெரா பொருத்தப்படும் குடிநீர் வசதி:
● குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக வழி முறைகள் அமுல்படுத்தப்படுவதோடு மழைநீர் சேகரிப்புத் திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும்.
●  சகல குடியிருப்பாளர்களுக்கும் குடிநீர் வசதி உறுதி செய்யப்படும் குடியிருப்பு
● வாடகைக் குடியிருப்பாளர்களின் நலன்கருதியும் மக்களின் தரமான இருப்பிட வசதியை உறுதி செய்வதற்காகவும்  வாடகை குடியிருப்பு தொடர்பில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும். அதன் மூலம் மக்களின் இருப்பிட வசதிகளில் உள்ள தடைகள் அகற்றப்படும்.
● குடிமனைகளுக்குள்  பொருத்தமற்ற விடுதிகள் அமைவது தடைசெய்யப்படும்
●  கட்டாக்காலி நாய்கள் மற்றும் கால்நடைகள் விடயத்தில் உள்ள அசௌகரியங்களை தடுக்கும் வகையில்
      நடைமுறைகள் கொண்டுவரப்படும்
● சட்டங்களில் திருத்தப்பட்டு ஐந்து குடும்பங்களுக்கு மேற்பட்டவை உள்ள அனைத்து வீதிகளும் சபைகளின்
     கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
உட்கட்டுமானம்
● நகரமெங்கும் நவீன பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்படும். இவை சரியாக பராமரிக்கப்படும்
● உள்;ர் வீதிகள் பாராபட்;சமின்றி செப்பனிடப்பட்டு திருத்தப்படுவதோடு வடிகாலமைப்பும்; சீர்செய்யப்படும்
● சகல வீதிகளுக்கும் தெருவிளக்குகள் பொருத்தப்படும்.
● சபைகளின் எல்லைக்குள் சிலைகள் நினைவுச்சின்னங்கள் தொடர்பில் பொதுக்கொள்கை வகுக்கப்படும்
● வீதிகளின் பெயர்களில் உள்ள தவறுகள் நீக்கப்பட்டு சீர்செய்யப்படும்.
● பேருந்து தரிப்பிடங்கள் யாவும் நவீன முறையில் புனரமைக்கப்படும்
●     மின்சாரசபை, தொலைத்தொடர்பு சேவை மற்றும் கேபிள் தொலைக்காட்சி வழங்குனர்களின்  ஒத்துழைப்புடன்
      வீதிகளில் இடையூறாகவும் அழகினை கெடுக்கும் வகையிலும் உள்ள  தேவையற்ற வயர்கள் தூண்கள்
      அகற்றப்பபடும்
● போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய நவீன வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு இறுக்கமான
      நடைமுறைகள் பின்பற்றப்படும்
● மாநரசபைகளின் எல்லைக்குள் பொதுப்போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
● சபை எல்லைக்குள் சேவையில் ஈடுபடும் சகல வாடகை போக்குவரத்து வாகனங்களுக்கும் கட்டண அறவீட்டு
       அளவுக்கருவி பொருத்தப்படுவது கட்டாய மாக்கப்படும்
● வீதிப்போக்குவரத்துக்கு இடையூறாக தனியாராலோ அரச அமைப்புக் களாலோ குவிக்கப்படும் கல் மண்
       உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
● தீயணைப்பு  சேவை விஸ்தரிக்கப்படும்
பொருளாதார மேம்பாடு – சந்தை முகாமைத்துவம்
● நடை பாதைக்கடைகள் விடயத்தில் பொதுக்கொள்கை வகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன் மூலம் உள்ளூர் ஏழை மக்களின் தொழில் முயற்சிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்
● உள்ளூர் வியாபாரிகளுக்கு பருவகால வியாபாரத்தின்போது முன்னுரிமை
அளிக்கப்படும்.
● முறையற்ற விதத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளியூர் வியாபாரிகள் கட்டுப்படுத்தப்படுவர்.
● உள்ளூர் சந்தைகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு சுகாதார மற்றும் பொது வசதிகளுடன்  நவீனமயப்படுத்தப்படும்.
● வர்த்தக கட்டடத்தொகுதிகள் கட்டப்படும்போது கடைப்பிடிக்கவேண்டிய பொதுக்கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக அமுல்படுத்தப்படும். சகல வசதிகளும் கொண்டிருப்பதும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் உறுதிப்படுத்தப்படும்
● மாலை நேர சந்தைகள் பண்டிகைக்கால, பருவகால தற்காலிக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு உரிய முறையில் வருமானங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
● சந்தைகளில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் உள்ள பத்திற்கு ஒன்று என்ற  கழிவு நடைமுறை இல்லாதொழிக்கப்படும். சந்தை நிர்வாகம் தொடர்பில் சகல தரப்பினருக்கும் நன்மையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
● சந்தை உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் சந்தை வாய்ப்புக்
களை பெருக்கி அதன் மூலம் உள்ளுர் விவசாயிகள், உற்பத்தியாளர்களின் வருமானங்களை அதிகரிக்கப்படும்.
பூங்காக்களும் பொழுதுபோக்கு மையங்களும்
● தற்போது காணப்படும் அனைத்து சிறுவர் பூங்காக்களும் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்படுவதோடு புதிய பூங்காக்களும் அமைக்கப்படும்.
● விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதோடு முதியவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்களும் உருவாக்கப்படும்.
● நகருக்கு உட்பட்டு சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்
குளங்கள் மற்றும் மயானங்கள் புனரமைப்பு
● மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் ஓய்விடம் என்பன அமைக்கப்படும்.
● மயானங்கள் யாவும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் அபிவிருத்தி செய்யப்படுவதோடு சமூக அபிவிருத்தி மன்றங்கள் அனைத்தும் புதியவைகள் உள்ளடங்கலாக கட்டியெழுப்பப்படும்
தொழில் வாய்ப்பு
● சபைகளின் வரையறைக்கு உட்பட்ட வகையில் சபைகளில்; ஏற்படும் பதவி
வெற்றிடங்களை நிரப்பும்போது சபை எல்லைக்குட்பட்ட வரியேற்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
● சபைகளில் தற்போதுள்ள ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்;படுவதற்கும் அமைய அடிப்படையிலான தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவதற்கும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்
● சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்களில் வேலைவாய்பினை சபையின் வருமானமீட்டும் சேவைகள் ஊடாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்;
சுகாதாரமும் பெண்கள் நலனும்
● ஆரம்ப பிள்ளை பராமரிப்பு நிலையங்களை அபிவிருத்தி செய்வதோடு தாய் சேய் நலன்கள் மீதும் அக்கறை செலுத்தப்படும்.
● பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கான அபிவிருத்தித் திட்டம் உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும்
● தொற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுதல்.
● உணவங்களில் சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யப்படும். குறிப்பாக தற்போதுள்ள சட்டங்கள்  முறையாக அமுல்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தப்படும்
● சுதேச வைத்தியத்தை மேம்படுத்தும் வகையில் சபைகளின் கீழ் உள்ள சித்த வைத்திய நிலையங்கள் மேம்படுத்தப்படும் நவீன வசதிகள் செய்யப்பட்டு அவற்றின் உடகட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
கல்வி மேம்பாடு
●  நூலகங்களை தற்கால தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப நவீன  மயப்படுத்துவதோடு புதிய நூலகங்களும் உருவாக்கப்படும்.
● மாணவர்களின் கல்விக்கு தேவையானவசதிகளை நூலகங்களில் ஏற்படுத்தல்.
● பழமை வாய்ந்த நூல்களை பாதுகாத்து ஆவணப்படுத்தல்.
● சபை எல்லைகளுக்குள் உள்ள கல்வி நிலையங்களின் வசதிகள் மாணவர்களுக்கு
உரியவகையில் வழங்கபடுகின்றமை தொடர்பில் கவனமெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
● மாணவர்களின் தொகைக்கேற்ற மலசலகூட வசதி மற்றும் உட்கட்டமைப்புக்கள் இல்லாத கல்விக்கூடங்கள் குறித்து மத்திய மாகாண அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்
பாரம்பரியம் தொன்மை பாதுகாத்தல் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு:
● எமது பிரதேசங்களில் காணப்படும் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாக்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அத்துடன் நகர அபிவிருத்திகளின்போது பழைமைகள் பாதுகாக்கப்படும்.
● புராதன சின்னங்கள் யாவும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டு வருமானம் ஈட்டப்படும்.
● சபை எல்லைக்குள் வரும் கடற்கரையோரங்கள் யாவும் சுத்திகரிக்கப்படும். பொருத்தமான இடங்கள் சுற்றுலா மையங்களாக மாற்றப்படும்.
● நகரின் மையத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய பயணிக்களுக்கான தகவல் மையம் ஏற்படுத்தப்படும் (Information Center)
● சுற்றுலா மையங்கள் பொழுதுபோக்கு மையங்கள்  பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சந்திகளில் கலாச்சாரசீர்கேடுகளை தவிர்க்க,  அசம்பாவிதங்களை தவிர்க்க கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்
படுத்தப்படும்
பசுமை நகரம் மற்றும்  பொதுவான மக்கள் நலன் சம்பந்தமானவை
● பொலித்தீன் பாவனை சகல மட்டத்திலும் தடைசெய்யப்பட்டு மாற்றீடுகள் அறிமுகப்படுத்தப்படும்
● கழிவுகள் மீள் சுழற்சிக்குட்படுத்தவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்
● வீதியோரங்களில் மரநடுகைத்திட்டம் மேற்கொள்ளப்படும். அவற்றை பராமரிப்பதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படும்
● வணிக நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் விளம்பரப்பதாகைகள் தொடர்பில்  பொதுக்கொள்கை வகுக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படும்.
● அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மக்கள் நலன் திட்டங்களில் ஈடுபடல்
● உள்;ர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான பொருத்தமான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல்
எமது தேசியக்கொள்கைகள்
தேசத்தின் அபிவிருத்திசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை எமது தேசியக்கொள்கைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புமின்றி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
● தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுதிட்டத்தை   அடைவதை   இலக்காக கொண்டு செயற்படுவதோடு, தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கில்  பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதான ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரித்தல்.
● தமிழின அழிப்புக்கான சர்வதேச நிதி கோரல்.
● அரசியல்  கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தல்
● காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இராணுவ வெளியேற்றம் என்பவற்றை கோரி நிற்றல்.
● மீனவர் பிரச்சனை தீரப்பதற்காக அர்பணிப்புடன் செயற்படுதல்.
● தியாகிகளின் நினைவிடங்களை பாதுகாத்தலும் கட்டியெழுப்புதலும்.
       மேற்படி முன்மொழிவுகளின் ஊடாக ஊழலற்ற ஆட்சியை உறுதிப்படுத்தி மக்களின் பங்களிப்புடனும் விருப்புடனும் கூடிய உள்ளுராட்சி நிர்வாகத்தை எமது வேட்பாளர்கள்  வழங்க வாய்பளித்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வடக்கு கிழக்கு வாழ் வாக்காளர்களை அன்புரிமையோடு வேண்டுகின்றோம்.
 தமிழ்த்தேசிய பேரவை
 17.01.2018

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More