Home இலங்கை யாழ் வட்டுக்கோட்டையில் பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு

யாழ் வட்டுக்கோட்டையில் பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியிலுள்ள வயல் காணி ஒன்றின் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை மீட்கப்பட்டன. வயல் கிணறிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர் இறைக்கப்பட்டது. அதன்போது கிணற்றுக்குள் வெடிபொருள்கள் கிடப்பதை வயல் உரிமையாளர் கண்டுள்ளார். அது தொடர்பில் அவரால் வட்டுக்கோட்டைப் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று, சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அவற்றை நேற்று மீட்டனர். சுமார் 2 ஆயிரம் துப்பாக்கி ரவைகள், பரா லைற், மோட்டார் எறிகணைக் குண்டின் துண்டுகள், மிதிவெடிகள் உள்ளிட்டவையே இவ்வாறு மீட்கப்பட்டன.

கடந்த வருடம் அந்தக் கிணறை இறைத்த போது எந்தவொரு வெடிபொருள் இருக்கவில்லை என காணி உரிமையாளர் தெரிவித்தார். வெடிபொருள்கள் எவ்வாறு போடப்பட்டன என்ற விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கடந்த மூன்று மாதங்களுக்குள் மூன்றாவது இடத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ். காக்கை தீவுப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் பயன்படுத்ததக்க நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அவை உரைப்பையில் சுற்றப்பட்டு வாய்க்காலுக்குள் போடப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து பண்ணைப் பகுதியிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. தற்போது வட்டுக்கோட்டையில் மீட்கப்பட்டுள்ளன.மூன்று இடத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்களும் அண்மையிலேயே வீசப்பட்டுள்ளன’ என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More