Home இலக்கியம் ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்!

ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்!

by admin


ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார்.

‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள் பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 

‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்’ என்னும் கவிதைத்தொகுப்பின் முன்னுரைக்குறிப்பில் செழியன் எழுதிய வரிகள்

“மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல் பதினாறு திசைகளிலும் பரவுகின்றது. சோற்றுப் பானைக்குள் இருக்கும் பருக்கையை எண்ணுவதற்குள் குழந்தை செத்துக் கிடக்கின்றது. இரவையும் பகலையும் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். காற்று இடம் பெயர்கின்றது, பிண வாசனையை சுமந்து கொண்டு. சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு. வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும், வயல் வரம்புகளுக்குள்ளும் தொலைத்து விட்டு வந்து பனிப்புலங்களுக்கடியிலும் இயந்திரங்களுக்கிடையிலும் தேடியவர்களும் களைத்துப் போனார்கள். ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும் துடித்துக் கொண்டிருக்கின்றது நம்பிக்கை. கண்ணீரிலும், மூச்சிலும் கரைந்து பிரபஞ்சத்தின் முடிவிலி வரை எதிரொலிக்கின்றது. பூவரசம் காற்றைக் குடித்துக் கொண்டு, புழுதியைத் திரட்டிப் பூசிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை- மனிதனாக வாழ வேண்டுமென்ற ஆசை – மறுபடியும் மறுபடியும் கொழுந்து விட்டு எரிகின்றது. இறுதி மூச்சின் கடைசிச் சொட்டு காற்றிலும் இந்த நம்பிக்கை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.”

2008 இல் ஆத்மன் றவியின் ‘கலையரங்கம்’ நிகழ்ச்சியில் நேரடி ஒலிபரப்பில் பதிவுசெய்யப்பட்டது.. “அகதியில்லை அகதியில்லை என்று சொல்லுங்கள்! நமக்குமோர் தேசம் உண்டு, மழை பெய்த நாள் ஒன்றில் முதலான பாடல்களுடன் ஓர் அருமையான நேர்காணல் – செழியனின் நினைவாக… 

நன்றி – ஆத்மன் றவி..

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More