Home இலங்கை இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு :

இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு :

by admin


70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.  தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை வரவேற்றனர்.

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றியமைக்காக எட்வர்ட் இளவரசருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரித்தானிய மகாராணியின் இலங்கைக்கான விஜயத்தையும் இளவரசர் சார்ள்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயங்கள் குறித்தும் நினைவுபடுத்தினார்.


சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமான விக்டோரியா நீர்த்தேக்கம் இன்று இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டார்

இங்கு கருத்துத் தெரிவித்த இளவரசர் எட்வர்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள கிடைத்ததையிட்டு குறிப்பாக 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்குபற்றக் கிடைத்ததையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.  சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையைப் பாராட்டிய இளவரசர் எட்வர்ட் ஒரு தேசத்தின் எதிர்காலம் எப்போதும் அத்தேசத்தில் கற்றவர்கள் அதிகரித்திருப்பதிலேயாகும் என்றும் கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதை நினைவுகூர்ந்ததுடன், இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையில் கல்வித்துறையில் விசேட தொடர்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

இவ்வருடம் பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மீண்டும் சந்திப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணைத்து நாடுகளினதும் தலைநகரங்கள் சுற்றாடல் நட்புடைய வகையில் நடைபாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்திலும் அத்தகைய நடைபாதைகளை அமைப்பதற்கான திட்டத்திற்கான அடையாளச் சின்னமொன்றை இளவரசர் எட்வர்ட் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இதே நேரம் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்திருந்த ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியான அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும் ஜப்பான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக்குழுவின் தலைவருமான வட்டரு டொகஷிட்டாவும் இன்று ஜனாதிபதியை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைகுமிடையிலான வரலாற்று நட்புறவை நினைவுபடுத்தியதுடன் எதிர்காலத்தில் இந்த உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.  இதேநேரம் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்திருந்த சீன மக்கள் குடியரசின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபையின் உபதலைவர் வாங் கின்மின் அவர்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More