ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரித்தானியர் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 34 வயதுடைய அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயதுடைய எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல் இருந்த கடைசி உறுப்பினர்கள் என அறியப்படுகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த நால்வரும் லண்டனைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களின் பிரிட்டிஷ் உச்சரிப்பால் “பீட்டல்ஸ்” என்று அழைக்கப்பட்டனர்.
மேற்கத்திய பணய கைதிகள் 27 பேரின் தலையை வெட்டியுள்ளனர் என்றும் பலரை சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவின் தலைவராக கருதப்பட்டவர் எம்வாசி, பணய கைதிகளை தலைவெட்டி கொல்லும் வீடியோக்களில் முகமூடி அணிந்து மேற்கத்திய அதிகாரத்தை திட்டிபேசும் தீவிரவாதி எம்வாசி என தெரிவிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இவர்களின் கைதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர். தனிப்பட்ட வழக்குகள் மற்றும் விசாரணைகளில் எந்த கருத்தும் கூறுவது இல்லை என பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களை கைது செய்த சிரியா போராளிகள் அதனை அமெரிக்க அதிகாரிகளிடம் ஜனவரி மாதத்தில் தெரிவித்துள்ளனர். பின் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளம் கை விரல் ரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டது. செய்தி ஊடகங்களில் தகவல் வெளியான பின்பே கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் அதனை தெரிந்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Add Comment