Home இலங்கை யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூபா 7 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவு

யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூபா 7 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குற்றவாளிகளாக காணப்பட்ட நிலையில் மூவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்று இன்று தண்டனை  தீர்ப்பளித்துள்ளது.  யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில்  கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் , கொள்ளையிட்ட நகைகளை குறித்த வங்கி உத்தியோகஸ்தர் பணிபுரியும் வங்கியில் அடகு வைப்பதற்கு முயற்சித்துள்ளார்கள். அதன் போது குறித்த நகைகளை அடையாளம் கண்டு கொண்ட வங்கி உத்தியோகஸ்தர் அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண காவல்துறையினர் நகைகளை அடகு வைக்க வந்தவர்களை கைது செய்து கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  அதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். அவர்கள் நால்வர் மீதும் நகைகளை கொள்ளையடித்தமை , கொள்ளையடித்த நகைகளை உடமையில் வைத்திருந்தமை , அவற்றை அடகு வைக்க முற்பட்டமை  உள்ளிட்ட குற்றசாட்டுக்களை முன் வைத்து குற்றப்பத்திரிக்கையை யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் காவல்துறையினர்  தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் தடுத்து வைத்து நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் பின்னர்  நால்வரும் ஆள்பிணையில் செல்ல நீதிமன்று அனுமதி அளித்தது.  அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதிஸ்தரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த நால்வர் மீதான கொள்ளை குற்ற சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால்,  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்து இருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மூவர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்களுக்கான தண்டனை தீர்ப்பினை நீதிவான் அறிவித்தார். ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 குறித்த வழக்கில் குற்றவாளியாக இன்றைய தினம் காணப்பட்ட  யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் மேலும் ஒருவருக்கு  3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை  வழங்கப்பட்டது.
அதேவேளை குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.
யாழ்.மாநகர சபையின் உறுப்பினராக தெரிவாகியுள்ள சுதர்சிங் விஜயகாந்த் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருந்தார்.  அக்கால பகுதியிலையே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டத்தை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி விஜயகாந்தை உறுப்பினரில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை உருவாக்கி அதன் செயலாராக தற்போது உள்ளார்.  குறித்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More