Home இலங்கை யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பது விசமிகளின் செய்தி என்கிறது ஊடக பிரிவு

யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பது விசமிகளின் செய்தி என்கிறது ஊடக பிரிவு

by admin


யாழில்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பது பொய்யான செய்தி எனவும் அது திட்டமிட்டு விசமிகளால் பரப்பப்பட்டு வரும் செய்தி எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை சென்ற ஜனாதிபதி புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார்.

அன்றைய தினம் குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபரான இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சீஸ் தொடர்பிலான தகவல்களை வழங்க கோரி கல்லூரி பழைய மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது காவல்துறையினர் போராட்டகார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர். ஜனாதிபதிக்கு தாங்கள் சந்திக்க வந்துள்ளதாக காவல்துறையினர்; கடிதம் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்து இருந்தும்; நிகழ்வின் இறுதி வரையில் தங்களை சந்திக்கவில்லை

கூட்டத்தின் இறுதிவரையில் நாங்கள் காத்திருந்தோம் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்க வில்லை. ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்க வில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதகவே கருதுகின்றோம். என அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்திருந்தார்.

அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்த நிலையில் அதனை ஜனாதிபதி ஊடக பிரிவு மறுத்துள்ளது. அத்துடன் குறித்த செய்தி விசமிகளால் திட்டமிட்டு பரப்பபடுவதாக தெரிவித்துள்ளது.

காணாமல்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பதில் எதுவித உண்மையும் இல்லை…

  • ஜனாதிபதி ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை கல்லூரி வளாகத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் சந்தித்தனர்.

குறித்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், காணாமல்போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னறிவித்தலின்றி புனித பத்திரிசியார் கல்லூரியின் வளாகத்திற்குள் வருகை தந்திருந்த, அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட காணாமல் போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை, சந்தித்ததோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கமைய காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தினூடாக நியாயமான தீர்வுகள் அவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்போது தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமல்போனோரின் உறவினர்களால் ஏற்கனவே வேண்டுகோள் எதுவும்  விடுக்கப்பட்டிராத நிலையிலேயே இந்த சந்திப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

ஆயினும் ஜனாதிபதி அவர்கள் காணாமல் போனோரின் உறவினரை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும், ஜனாதிபதி அவர்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவும் இச்செய்தி திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2018.03.22

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More