Home இலங்கை லலித் – குகன் வழக்கு – தொலைபேசி தரவுகளை சமர்ப்பிக்க மன்று உத்தரவு

லலித் – குகன் வழக்கு – தொலைபேசி தரவுகளை சமர்ப்பிக்க மன்று உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் கைபேசி இணைப்புக்களின் தரவுகளை நீதிமன்றில் சமர்பிக்குமாறு இணைப்பு வழங்குனரான டயொலக் நிறுவனத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று கட்டளை வழங்கியது.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் சாட்சியமளித்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்தனர். அத்துடன், கடந்த தவணையின் போது, லலித், குகன் காணாமல் காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியமளித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனு தாரர்களின் சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.

லலித் வீரராஜின் அலைபேசி இணைப்பின் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதிவரையான விவரங்களை சமர்பிக்குமாறு டயலொக் நிறுவனத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது. அதனை சமர்பிக்க அந்த நிறுவனத்துக்கு நீதிமன்று அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் டயலொக் நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று நீதிமன்றில் தோன்றினார்.

‘லலித் வீரராஜின் அலைபேசி இணைப்பிலிருந்து 2011ஆம் ஆண்டு டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து டிசெம்பர் 31ஆம் திகதிவரை வெளிச்சென்ற அழைப்புக்கள் மற்றும் உள் வந்த அழைப்புக்களின் தரவுகளை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்படுகின்றது. அதனைப் பெற அவகாச வழங்கவேண்டும்’ என்று டயலொக் நிறுவன அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

‘லலித் வீரராஜின் அலைபேசி இணைப்பு விபரங்களுடன் குகன் முருகானந்தனின் விவரங்களையும் பெற்றுக்கொள்ள மன்று கட்டளையிடவேண்டும்’ என்று மனு தாரர்கள் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர். இரண்டு தரப்புகளின் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்று வழக்கை வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More