Home இலங்கை இணைப்பு 2 – யாழில். போதை பொருள் விற்பனை நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் மறியல்.

இணைப்பு 2 – யாழில். போதை பொருள் விற்பனை நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் மறியல்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய மாவா போதைப் பொருள் விற்பனை நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட 7 பேரை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மாவா போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நபர் புத்தளத்தில் உள்ளார் எனவும் அவர் உள்பட மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மன்றுக்கு அறிவித்தனர்.

வடக்கு மாகாண மூத்த காவல்துறை மா அதிபர் பாலித பெர்னாண்டோவின் பணிப்புக்கமைய, யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய மாவா போதைப் பொருள் விற்பனை நிலையம் சிறப்புப் காவல்துறை குழுவால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு விற்பனைக்கு தயாராகவிருந்த பெருமளவு மாவாப் போதைப் பொருள் பொட்டளங்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டது. அத்துடன், அந்த வியாபார நிலையத்தில் கடமையாற்றிய குற்றச்சாட்டில் 3 பேரும் மாவா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில், சந்தேகநபர்கள் 7 பேருக்கும் எதிராக தனித்தனியே முதல் அறிக்கை முன்வைத்து காவல்துறையினர் முற்படுத்தினர்.

‘இந்த போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை மாகாண மூத்த காவல்துறை மா அதிபரின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மாவா போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டில் முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வியாபாரத்தில் ஈடுபடும் புத்தளத்தில் வசிக்கும் முக்கிய சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். எனவே இந்த சந்தேகநபர்கள் 7 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்றிடம் கோருகின்றோம்’ என்று காவல்துறையினர் விண்ணப்பம் செய்யதனர். முதல் அறிக்கையை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் 7 பேரையும் வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழில் கேக் கடை என்ற போர்வையில் இயங்கிய மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

Apr 11, 2018 @ 02:23


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் கடை என்ற போர்வையில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

‘அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. வடக்கு மாகாணசிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் றொசான் பெர்னாண்டோவில் பணிப்புக்கமையவே இந்த முற்றுகை சிறப்பு காவல்துறை பிரிவால் முன்னெடுக்கப்பட்டது.

அந்த நிலையத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More