Home இலங்கை சில பக்கங்களை காணோம், ஆதாரங்கள் மறைப்பு, விசாரணையாளர்களுக்கு மிரட்டல்…

சில பக்கங்களை காணோம், ஆதாரங்கள் மறைப்பு, விசாரணையாளர்களுக்கு மிரட்டல்…

by admin

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் காவற்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை  மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  விசாரணைகளை தொடர்ந்து துரிதமாக முன்னெடுக்கவும்,  விசாரணை அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கவும்,   உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் தொடர்புள்ள வழக்குகள் பல வருடங்களின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணையுடன் தொடர்புடைய  கோப்புகள் மறைக்கப்பட்டும் பக்கங்கள் கிழிக்கப்பட்டும் உள்ளன. சில அதிகாரிகள்  நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கொலை, கடத்தல் தாக்குதல் என்பன தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளதா என வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,  விசாரணைகள் முடக்கப்படவில்லை எனவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது நிறுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். குறிப்பாக இந்தக் குற்றங்கள் தொடர்பில்  தாம் நடவடிக்கை எடுக்கும்போது படையினரை பழிவாங்குவதாக சிலர் கூப்பாடு போடுகின்றனர். யுத்தத்திற்கு முடிவு கட்டவே படையினர் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஊடகவியலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்த இவர்களுக்கு முடியாது. விசாரணை அதிகாரிகளை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன  எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. சில அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சி.ஜ.டி மற்றும் இளம் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் இந்த விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உச்ச அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சில நிறுவனங்களில் விசாரணையுடன் தொடர்புள்ள கோப்புகள் காணாமல் போயுள்ளதாகவும், பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி உரையாடல்களை வழங்க மறுப்பதாகவும் குறிப்பிட்டார். இருந்தாலும் விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More