Home இலங்கை அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்

அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்

by admin

வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.

நாட்டின் பிரதான மதத்தவர்களுடைய பண்டிகை என்பதற்கு அப்பால், வெசாக் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பெரும்பான்மை இன மக்களின் இந்த மத உரிமைக் கலாசாரம் என்பது, பிற சமூகங்கள் மீது வலிந்து திணிக்கின்ற அரசியல் மயமான ஆக்கிரமிப்புச் செயற்பாடாக பரிணமித்துள்ள வெசாக் பண்டிகை இம்முறை மத ரீதியான மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமை அரசியலையும் மேவியிருக்கின்றது. அரசியலில் புதிய சிக்கல்களையும் உருவாக்கியிருக்கின்றது.

அஹிம்சையைப் போதித்த புத்த பெருமான் இந்தியாவில் லும்பினி என்றழைக்கப்படும் நேபாளம் என்று இப்போது குறிப்பிடப்படுகின்ற இடத்தில் பிறந்த நாள், புத்தகாயா என்ற இடத்தில் பௌத்த நிலையை அடைந்த நாள் மற்றும், அவர் குசிநகர் என்ற இடத்தில் பரிநிர்வாணம் அடைந்த (இறந்த) நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் குறித்துக் கொண்டாடுவதாக வெசாக் பண்டிகை அமைந்திருக்கின்றது.

இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெசாக் பண்டிகை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இங்குள்ள பௌத்த மக்கள் இந்தப் பண்டிகையை பாரம்பரியமாக வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் 1950 ஆம் ஆண்டு பௌத்தமதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி, வெசாக் பண்டிகையை கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்தையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையில் வெசாக் பண்டிகை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்தக் கொண்டாட்டங்கள் நாட்டின் தலைநகர் கொழும்பு உட்பட தென்பகுதிகளில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் மின் வெளிச்சக் கூடுகள், மின் அலங்காரக் கட்டமைப்புக்கள் என்பவற்றை நிறுவி பலரையும் வசீகரிக்கத்தக்க வகையில் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தக் கொண்டாட்டங்கள் பரவியிருக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வெசாக் பண்டிகைக்கான பெருந் தெருக்களிலான அலங்காரங்கள் புத்த பெருமானின் போதனைகளையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகின்ற இசை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த அலங்காரங்களும் பௌத்த கலாசாரத்தையொட்டிய நிகழ்வுகளும், பார்ப்பவர்களுக்கு பௌத்த மக்கள் இல்லாத இந்தப் பிரதேசங்கள், பௌத்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களாக இருக்க வேண்டும் என்ற மனத்தோற்றத்தை ஏற்படுத்துபவனவாக அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெசாக் பண்டிகையானது, வைகாசி விசாக தினத்தையொட்டியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்களின்போது, தன்சல என்று பௌத்த மக்களால் அழைக்கப்படுகின்ற தண்ணீர்ப் பந்தல்கள் பெருந்தெருக்களில் அமைக்கப்பட்டு, அங்கு தாக சாந்திக்கான குளிர்பானங்களும், உணவும் வழங்கப்படுகின்றது. இந்த இடங்களைச் சூழவுள்ள இக்கள் இவற்றில் பெரும் எண்ணிக்கையில் இவற்றில் விருப்பத்தோடு கலந்து கொள்வார்கள்.

அதேவேளை, வெசாக் பண்டிகை ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள், கைகளில் ஏந்தியுள்ள கொடிகளில் சைகை செய்து வீதிகளில் செல்கின்ற வாகனங்களை நிறுத்தச் செய்து, அவற்றில் பயணம் செய்பவர்களை வழிமறித்து, அழைத்து, குளிர்பானமும், உணவும் வழங்கி விருந்து படைப்பதைக் காணலாம். பெருந்தெருக்கள் நெடுகிலும் ஆங்காங்கே வேறு வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தாகசாந்தி நிலையங்களிலும் இந்த விருந்தோம்பல் இடம்பெறுவது வழக்கம்.

இந்த விருந்தோம்பல் பயணிகளின் தாகத்தையும் பசியையும் தணித்து மகிழ்விக்கின்ற போதிலும், அன்புத் தொல்லையாகவும், எல்லை மீறிய வகையில் பயணிகளை மத அனுஸ்டான கலாசர ரீதியில் சங்கடப்படுத்துகின்ற சம்பவங்களாகவும் அமைந்துவிடுகின்றன. இது, வெசாக் பண்டிகையைக் கொண்டாடுபவர்களின் தாராள சிந்தனையுடன் கூடியதாக ஏனையவர்களை மகிழ்விப்பதற்குப் பதிலாக மனம் கோணச் செய்துவிடுகின்றன. இந்த விருந்தோம்பலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களிடம் வீதிகளில் பயணம் செய்பவர்கள் தமது மனச் சங்கடங்களை வெளிப்படுத்த முடியாமலும், விருந்தோம்பலை நாகரிகமாக மறுக்க முடியாமலும், அவர்களின் மத அனுஸ்டானம் சார்ந்த ஆக்கிரமிப்பில் சிக்கித் திண்டாடுவது வெசாக் பண்டிகை நேரத்தில் சாதாரண நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இது ஒரு வழமையான நிகழ்வாகத் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான நிலைமைக்குள்ளேயும், வடக்கில் வெசாக் பண்டிகையையொட்டி நிறுவப்படுகின்ற அலங்காரங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்காக மக்கள் பெரும் எண்ணி;க்கையில் கூடுகின்றார்கள். வெசாக் பண்டிகை அரச பண்டிகை என்பதனால், அதன் ஆரம்ப நிகழ்வுகளிலும், முக்கிய நிகழ்வுகளிலும் பிற மதங்களையும், பிற சமூகங்களையும் சார்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வதையும் காண முடிகின்றது. இவர்கள் அரச வைபவம் என்ற காரணத்திற்காகவா, அல்லது வெசாக் பண்டிகை ஏற்பாட்டாளர்களின் நிர்ப்பந்தத்திற்காகவா இவ்வாறு கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

அதேவேளை, வெசாக் பண்டிகையின் அலங்காரங்களையும் மின்னொளிக் கூடுகள், மின்னொளி அமைப்புக்களையும் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடுகின்ற பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டமானது, நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும், சமத்துவமும் சமாதானமும் ஏற்பட்டிருக்கின்றது என்று பிரசாரம் மேற்கொள்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.

வெசாக் பண்டிகையும் உலக தொழிலாளர் தினமாகிய மேதினமும்

வழமையான வெசாக் தின ஆரவாரங்கள் இந்த 2018 ஆம் ஆண்டில் உலக தொழிலாளர் தினமாகிய மேதினத்துடன் சேர்ந்து அமைந்து அரசியல் ரீதியான அமளியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

வழமையாக வைகாசி மாத வைகாசி விசாகம் என குறிப்பிடப்படுகின்ற பூரணை தினத்தில் கொண்டாடப்படுகின்ற வெசாக் பண்டிகை இம்முறை சித்திரா பருவம் என அழைக்கப்படுகின்ற சித்திரை மாதத்துப் பௌர்ணமி தினத்தில் அமைந்துவிட்டமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.

தமிழ் சிங்கள புத்தாண்டு சித்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே வருவதுண்டு. , சித்திரைப் புத்தாண்டு கோலாகலத்தின் பின்னர் அதற்கு அடுத்த மாதத்திலேயே வெசாக் பண்டிகையின் விழாக்கோலத்தில் பௌத்த மக்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இம்முறை அது மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது,

பௌத்த மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வருகின்ற பூரணை தினம் முக்கியமானது. அவற்றில் ஆங்கிலேய வருடத்தின் படி மே மாதத்தில் வருகின்ற பூரணை தினமாகிய வெசாக் பண்டிகையும், அதற்கு அடுத்ததாக வருகின்ற பொசன் பூரணை தினமும் முக்கியமானதாகும். ஆனால் இம்முறை ஜனவரி மாதத்தில்; இரண்டு பூரணை தினங்கள் இடம்பெற்றுவிட்டன. அதன் காரணமாகவே வருடத்தின் ஐந்தாவது பூரணை தினமாகிய வெசாக் பண்டிகை ஏப்ரல் மாதத்தில் முந்தி வந்துவிட்டது என்று பௌத்த மதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் விளக்கமளித்தார்.

ஆனால், மேதினமும் இம்முறை ஏப்ரல் மாதத்து பூரணைதின வாரத்திற்குள் அமைந்துவிட்டதனால், மேதினத்தையும் வெசாக் பண்டிகையையும் ஒரே சமயத்தில் கொண்டா முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும் அவர் விபரித்தார்.

வெசாக் பண்டிகை உலகெங்கும் பௌத்தர்களினால் கொண்டாடப்படுகின்ற பண்டிகை. அந்தப் பண்டிகையை வேறு தினத்தில் கொண்டாட முடியாது. அதேபோன்று உலக தொழிலாளர் தினமாகிய மேதினம் மே மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்படுகின்றது. அதை வேறு தினத்தில் அனுட்டிக்கப்படுவதில்லை.

இனங்கள், மதங்கள் என்ற எல்லைகளைக் கடந்து வர்க்கரீதியான கூட்டிணைவைக் கொண்ட மேதினமா அல்லது உலகத்தில் வாழ்கின்ற பௌத்த மக்களின் முக்கிய பண்டிகையாகிய வெசாக் பண்டிகையா எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இலங்கையில் எழுந்தது. இந்தக் கேள்விக்குத் தீர்வு காண்பதற்காக பௌத்த மத பண்டிகை அனுட்டானத்தை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவினால் அரசியல் ரீதியான சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.

வெசாக் பண்டிகை அதற்குரிய பூரணை தினத்தை உள்ளடக்கியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுவதே வழமை. அதற்கமைய 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பூரணை தினமாகிய 29 ஆம் திகதி வெசாக் தினத்தை உள்ளடக்கி மே மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி; கொண்டாட்டத்திற்கான வெசாக் வாரமாக மகாசங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டது, எனவே, மே தினத்திலும் பார்க்க வெசாக் பண்டிகையே முக்கியமானது. வெசாக் பண்டிகைக்கான வாரத்தில் மேதினம் வருவதனால், அதனைப் பின்போட வேண்டும் என்பது மகாசங்கத்தினருடைய முடிவாகும். இந்த வகையில், பௌத்த மகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மே முதலாம் திகதிய மேதினத்தை ரத்துச் செய்து, அது 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்;டதாக பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பௌத்த மகாசங்கத்தினருடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேதினத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேதினத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்து, அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டு அரச வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிட்ட போதிலும், இந்த விடயம் குறித்து அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமலேயே முடிவு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேதினம்

உலக தொழிலாளர்கள் 12 தொடக்கம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய 8 மணித்தியால வேலை நேரத்திற்கான போராட்டத்தின்போது இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்ப்பலி கொள்ளப்பட்ட அந்தப் போராட்டத்தின் விளைவாகவே மேதினம் சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மேதினம் என்பது சர்வதேச தொழிலாளர் தினமாக 1880 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், எட்டு மணித்தியால வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டு 1886 ஆம் ஆண்டிலேயே முதலாவது மேதினம் கொண்டாடப்பட்;டது.

சிக்காகோ நகரில் நடைபெற்ற இந்த மேதினத்தில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தொழிலாளர்களது ஒற்றுமையின் வலிமையையும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து உலக நாடுகளில் தொழிலாளர்களினால் மேதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்iயில் 1956 ஆம் ஆண்டிலேயே மேதினம் அரச ஊழியர்களுக்கும் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான பொது விடுமுறை தினமாக அப்போதைய அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது.

எனினும் மேதினமும், வெசாக் பண்டிகையும் ஒரே நாளில் வருவதில்லை. ஆனால் வெசாக் வாரத்தில் வருவதனால் குழப்பகரமான நிலைமை ஏற்படும்போது சமயத்திற்கான உரிமையே முன்னிலை பெறுவதுண்டு. ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்க காலத்தில் 1967 ஆம் ஆண்டு இத்தகைய நிலைமை ஒன்று ஏற்பட்டு, மேதினம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அரசாங்கத்தின் அந்த நடவடிக்கையை சீனசார்புடைய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துக் குரல் எழுப்பியிருந்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது ஜனாதிபதியாக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மேதினத்திற்கு எதிராக சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று ஐலண்ட் பத்திரிகை சாடியுள்ளது.

மத உரிமைக்காக வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேதினத்தை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதென்பது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறல். அது மட்டுமல்ல. யை அது அவர்களுடைய ஜனநாயக உரிமையை மறுப்பதாகும் என்று தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றன. இருப்பினும் இந்த உரிமை மறுப்புக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்புக்கொடி காட்டவில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்காக அரசியல் கட்சிகள் மீது அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுமில்லை. அரசாங்கத்திடம் ஒன்றிணைந்த எதிர்ப்பை வெளியிடவும் இல்லை. அநேகமான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கப் பிரிவுகளாகச் செயற்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் எதிர்த்தும் அறிக்;கைகளை வெளியிட்டிருக்கின்றன.

அரசியல் ரீதியான சிக்கல்கள்

அது மட்டுமல்லாமல், மேதினத்தை பின்போட்டுள்ள அரசாங்கம் மே முதலாம் திகதிய அரச வர்த்தக வங்கி விடுமுறையையும் ரத்துச் செய்து 7 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளது. அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கொழும்பு மாநகர சபை அதன் எல்லைக்குள் மே முதலாம் திகதி மேதினத்திற்காக எவரும் பேரணிகள் நடத்தக் கூடாது என தடைவிதித்துள்ளது.

மேதினம் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ள போதிலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அன்றைய தினத்திலேயே மேதினத்தை அனுட்டிப்பதற்கு முடிவெடுத்திருந்தன. ஜேவிபி யாழ்ப்பாணத்தில் தனது மேதினத்தை பேரணியுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தின் வெசாக் பண்டிகை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யாழ் நகருக்கு வெளியில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருந்தது.

மேதினம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தையும் முடிவையும் எதிர்த்து, மேதினத்தில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களில் சிறிலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் முக்கியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்டு வருகின்ற சிறிலங்கா நிதாஸ் சேவக சங்கமய என்று அழைக்கப்படுகின்ற இந்தத் தொழிற்சங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டுச் செயற்படும் வகையில் மேனதினத்தன்று மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.

இந்தத் தொழிற்சங்கம் 90 ஆயிரம் அரச சேவையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அதிக சக்தி வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர மேதினத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து கருத்து வெளியிடுகையில் மகாசங்கத்தினர் அதிக அளவு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர் என சாடியுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகளும் அரச முக்கியஸ்தர்களும்கூட பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராக மிகவும் அரிதாகவே கருத்துரைப்பார்கள். ஆனால் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிசங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு கருத்துரைத்திருப்பது தீவிரமான தொழிற்சங்கச் செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.

மேதினத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டியுள்ள அவர், இது தொடர்பான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்த லெஸ்லி தேவேந்திர இந்த விடயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் தன்னுடன் கலந்தாலோசிக்கவில் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் என்ற தனது பதவியை இராஜிநாமா செய்துள்ள லெஸ்லி தேவேந்திர அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால், பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் தொகையையும் மூன்று லட்சம் வாக்குப் பலத்தையும் கொண்டுள்ள தொழிலாளர் சக்தி மிக்க இந்தத் தொழிற்சங்கத்தின் ஆதரவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார்.

இவ்வாறு சக்தி மிக்க ஒரு தொழிற்சங்கம் ஜனாதிபதியின் கையில் இருந்து நழுவியிருப்பது, நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில் அவரை மேலும் அரசியல் ரீதியாகப் பலவீனமாக்கி உள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளிலும், அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் இந்த நிலைமை பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More