Home இலங்கை யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்….

யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது ,  குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் போது பதிலளித்த யாழ் மாநகர ஆணையாளர் குறித்த கட்டடத்தில் உள்ள 54 கடைகளில் 32 கடைகளை யாழ் மாநகரசபை பொறுப்பேற்றுவிட்டதாகவும். கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கியபோது ஒப்பந்தகாரர் கட்டடத்தைக் கட்டி ஏனையவர்களுக்கு விற்பது எனவும் அதன்பின்னர் யாழ் மாநகரசபை அக்கட்டடங்களை பொறுப்பேற்று அதனைக் கொள்வனவு செய்தவர்களிடம் வாடகைப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் மணிவண்ணன் அப்படியானால் குறித்த கட்டடத்தில் யாழ் மாநகரசபை பொறுப்பேற்றிருக்காத தொகுதிகள் இன்னமும் அதனைக் கட்டிய ஒப்பந்த காரரான மனோகரன் என்பவர் வசம் உள்ளதா? அவர் அதனை தான் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்கிறாரா உள்ளிட்ட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவேண்டும் என கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த கட்டடம் தொடர்பில் தானும் ஆராய்ந்ததாகவும் குறித்த கட்டட ஒப்பந்தகாரர் தான் சில சிக்கல் நிலைகளில் சிக்குண்டிருப்பதாக குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டதோடு யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சி ஒன்றினால் குறித்த கட்டடத்தின் சில பகுதிகள் கட்டட ஒப்பந்தகாரரான மனோகரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டிப்பதாகவும் அதனை தான் சபைக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் அதற்குப் பதிலுரைத்த உறுப்பினர் மணிவண்ணன் மனோகரனை அழைத்து இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு கால தாமதமின்றி குறித்த தொலைக்காட்சி பயன்படுத்தும் கட்டடத்தை யாழ் மாநகரசபை கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More