Home இலங்கை போலியான அனுமதிப் பத்திர மூலம் மணல் கடத்தல் – இருவருக்கு தண்டம்…

போலியான அனுமதிப் பத்திர மூலம் மணல் கடத்தல் – இருவருக்கு தண்டம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

போலியான அனுமதிப் பத்திரத்தை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (10) வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோப்பாய் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி கஹந்தவல தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மையில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது மணல் ஏற்றி வந்த வாகனமொன்று பரிசோதிக்கப்பட்டது. அச்சமயம் வாகனத்தின் சாரதியால் மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதாக தெரிவித்து அனுமதிப்பத்திரமொன்று முற்படுத்தப்பட்டது.

எனினும் காவற்துறையினரின் விசாரணையின் போது அந்த அனுமதிப்பத்திரம் போலியானது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மணல் கொண்டு வரப்பட்ட வாகனமும் வாகனத்தின் சாரதி மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்றுவரை ஒத்திவைத்தது.

அவர்களுக்கெதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது சந்தேகநபர்கள் இருவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக தமது சட்டத்தரணியூடாக மன்றுக்கு தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் 53 ஆயிரம் ரூபாவை தண்டமாக செலுத்துமாறும் மணலை பறிமுதல் செய்யுமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More