Home இலங்கை தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை கவிதாவின் மரணம் தொடர்பாகத் துரித விசாரணை வேண்டும்…

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை கவிதாவின் மரணம் தொடர்பாகத் துரித விசாரணை வேண்டும்…

by admin

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை  கவிதா ஜெயசீலனின் மரணம் தொடர்பாகத் துரிதமாக விசாரணை மேற்கொண்டு யா/ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் நேரடியாகவே கவனம் செலுத்தி எவ்வித அரசியல் தலையீடுமற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த அதிபர், அமரரான ஆசிரியையின் கடந்த கால தரக் கணிப்பீட்டுப் படிவத்தில், புதிய அதிபராகிய நான் கையொப்பமிட முடியாது போனமையே காரணம், என்பது போல மரணமான ஆசிரியை மட்டில் தான் மேற்கொண்ட கொடுமைகளை மறைத்து ஊடகங்களூடாக நடிக்க முயன்றுள்ளார்.

ஆனால், மரணமான ஆசிரியை 2017-2018 ஆம் ஆண்டுக்கான தரக்கணிப்புப் படிவத்தையும், தான் புதிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதற்கான, கோரிப்பெறல் கடிதத்தினையுமே அதிபரிடம் கோரியிருந்தார் என, குறித்த ஆசிரியை 01.05.2018 அன்று யாழ் வலயக்கல்விப் பணிமனைக்கு சமர்ப்பிக்கவென, ஆசிரியையின் கையொப்பத்துடன் எழுதிவைத்திருந்த குடும்பத்தவர்களிடமுள்ள கடிதத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அமரரான ஆசிரியைக்கு வேண்டுமென்றே அதிபர் துன்புறுத்தியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமரரான ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கியது கல்வித்திணைக்களமாகும் . ஆயினும்,இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியைக்கு அதிபர் கோரிப்பெறல் கடிதத்தையும், குறித்த ஆண்டுக்கான தரங்கணிப்பையும் வழங்கவில்லை என யாழ்.வலயக்கல்வி பணிமனையில் வாய்மூலம் ஆசிரியை முறையிட்டபோது வலயக்கல்வி அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்காத அசமந்தப்போக்கும் ஆசிரியையின் மரணத்துக்குக் காரணமாகும்.

இத்தகைய தவறு செய்யும் தமக்குக் கீழான அதிகாரிகளுக்கே நடவடிக்கை எடுக்கத் தெரியாத திராணியற்ற நிலையிலேயே வடமாகாணக் கல்வி ஊழல்களிலும் முறைகேடுகளிலுமிருந்தும் மீள முடியாதுள்ளது.

இடமாற்றங்களை வழங்கும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் இடமாற்றங்கள் தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அதிபர்கள் செய்யாததை கூட தீர்த்துவைக்க முடியாத செயற்பாட்டால் இன்று ஒரு பெறுமதிமிக்க ஆசிரியைத் தாய் தற்கொலை புரிந்துள்ளார். அவரது கணவன் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கவலையளிக்கிறது.

ஆனால், குறித்த ஆசிரியையின் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அதிகாரி ‘வழமையாக பாடசாலைகளில் நடக்கும் விடயங்கள்’ என கூறி ஆசிரியை தவறிழைத்தவர் போல நியாயப்படுத்த முயன்றமையையும் ஒரு ஆரோக்கியமான ஆசிரியையை நோயாளியாகக் காட்ட முயன்றமையையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறான கருத்தினூடாக முறையற்ற விதமாகவும் வேண்டுமென்றும் ஆசிரியர்கள் அதிபர்களால் துன்புறுத்தப்படும் போதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரத் தரப்புக்கள் பொய்யான காரணங்களைக் கூறி குற்றவாளிகளை நியாயப்படுத்த முயற்சித்ததன் மூலம் ஆசிரியையின் மரணத்துக்கு மறைமுகக் காரணியாக இருந்திருக்கின்றனர்.

ஆசிரியையை அதிபர் மிக மோசமாக நடத்தியிருந்த போதும் கூட ஆசிரியை பண்பான முறையிலேயே தனது இயலாமையை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் வெளிப்படுத்த முயன்ற தன்மையூடாக ஒரு பண்பான, திறமையான ஆசிரியையை கல்விச்சமூகம் இழந்துள்ளமை மிகுந்த வேதனையளிக்கிறது.

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் கொட்டடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பம் தொடர்பாக கடந்த மாதம் ஆசிரியர்கள் முறையிட்டபோதும் இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முறையிட்டும் அதிகாரிகள் அதிபர் சார்பாகவே செயற்படும் நிலையே காணப்படுகிறது. இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவரை இப்பிரச்சினை சென்றுள்ளது. வடமாகாணத்தின் இப்படியான மோசமான நிலையே ஆசிரியர்களை விரக்திக்கு கொண்டுசென்று தவறான முடிவுகளை ஆசிரியர்களை எடுக்கத் தூண்டுகின்றது.

எனவே, குறித்த ஆசிரியையின் மரணம் தொடர்பான பொருத்தமற்ற திசைதிருப்பல் மூலம் கல்வி அதிகாரிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை விடுத்து மேற்படி பாடசாலை அதிபர் தொடர்பாக உடனடி விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதிபரின் தலையீடு அப்பாடசாலையில் உள்ளதால் நீதியான விசாரணையின் பொருட்டு அதிபர் உடனடியாக இடமாற்றப்பட்டு அல்லது வலயக்கல்விப்பணிமனையில் இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு விசாரணை மேற்கொள்வதனூடாகவே ஒஸ்மானியாக் கல்லூரியில் அச்சுறுத்தல் எதுவுமில்லாமல் ஆசிரியர்கள் சுதந்திரமாக சாட்சியம் அளிக்கும் நிலை உருவாக்கப்படும். இவ்விடயத்தில் கௌரவ முதலமைச்சர், கௌரவ ஆளுநர் ஆகியோர் நேரடியாகவே கவனம் செலுத்தி எவ்வித அரசியல் தலையீடுமற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More