Home இலங்கை வடமாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கோரலினை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்

வடமாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கோரலினை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கோரலினை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் உறுதிகேள் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், எதிர் மனுதாரர்களுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன், மனுதாரரால் கோரப்பட்ட நிவாரணங்களில் ஒன்றான இடைக்காலத் தடைக் கட்டளையை வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என மனுவை ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அண்மையில் பத்திரிகை ஊடாக விண்ணப்பங்கோரல் விளம்பரத்தை வெளியிட்டார்.

பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதென எனக் குறிப்பிட்டு யாழ்.தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதனையும் இடைநிறுத்திவைக்கும் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணபங்கோரலை விடுத்த முதலாவது எதிர்மனுதாரர் அவரது பொதுக் கடமையை மீறிய இந்த சட்டவிரோத விண்ணப்பங்கோரலை வெற்றும் வறிதானதுமாக உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்கவேண்டும்.

வழக்குச் செலவு மற்றும் மன்றால் நியாயமானது எனக் கருதும் பிற நிவாரணங்களும்’ என மனுதாரரால் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்ட மன்று, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.அத்துடன், மனுதாரரின் முதலாவது நிவாரணமான இடைக்காலத் தடைக் கட்டளை தொடர்பான மன்றின் அறிவிப்பு வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அன்றைய தினம் வரை வழக்கு ஓத்திவைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More